ஷெய்க் அஹ்மத் தீதாத்
காலம் சென்ற ஷெய்க் அஹ்மத் தீதாத் அவர்கள் இந்திய வம்சாவழியை சேர்ந்த தென் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர் 01 ஜூலை 1918 இல் இந்தியாவில் பிறந்தார்கள். சிறிது காலத்தில் இவரது தந்தை தென் ஆபிரிக்காவுக்கு குடிப்பெயர்ந்தார். அதனை தொடர்ந்து ஷெய்க் தீதாத் அவர்களுக்கு ஒன்பது வயதில் ஷெய்க் தீதாத் அவர்கள் தம் தந்தையோடு போய் சேர்ந்தார்கள்.
பின்னர் தம் படிப்பில் கவனம் செலுத்தி சிறந்து விளங்கிய ஷெய்க் தீதாத் அவர்கள் பின்னர் வறுமை காரணமாக படிப்பை விட்டு விட்டு தொழில் செய்ய தொடங்கினார். அப்போது அவருக்கு 16 வயது.
1936 ஆம் ஆண்டு ஒரு தளபாட கடையில் வேலை செய்யும்போது இவர் சில கிறிஸ்தவ மத போதகர்களை சந்தித்தார். அவர்கள் அவ்வூரில் உள்ள முஸ்லிம்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் வாள் மூலம் தான் இஸ்லாத்தை பரப்பினர் என்று பொய் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர். இந்த பிரச்சாரங்கள் ஷெய்க் தீதாத் அவர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. எனவே அவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக சமய ஒப்பீடுகள் பற்றி இவர் கற்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ரஹ்மத்துல்லாஹ் கைரனாவி அவர்களால் எழுதப்பட்ட புத்தகமான இஸ்ஹாருல் ஹக் என்னும் நூலை வாசிக்கும் வாய்ப்பு ஷெய்க் அஹ்மத் தீதாத் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அதன் பின்னரே அவரின் சமய ஒப்பீடுதுறையின் பாண்டித்தியம் இன்னும் அதிகரித்தது. பின்னர் பைபிள் ஒன்றை வாங்கி ஷெய்க் தீதாத் அவர்கள் அதனையும் கற்று, அங்கே வரக்கூடிய பயிற்சியில் உள்ள கிறிஸ்தவ மத போதகர்களோடு விவாதங்களை செய்து வந்தார்.
பின்னர் அங்குள்ள இஸ்லாமிய வகுப்பு ஒன்றில் சேர்ந்து இஸ்லாத்தை தழுவிய அறிஞர் பைர்பாக்ஸ் என்பவரிடம் கற்று வந்தார். பைர்பாக்ஸ் இஸ்லாத்தை எப்படி கிறிஸ்தவர்களுக்கு போதிப்பது என கற்று கொடுத்து வந்தார். இவ்வாறு கற்று தேர்ச்சி பெற்ற ஷெய்க் அஹ்மத் தீதாத், பைர்பாக்ஸ் இற்கு பிறகு அங்கு கற்பிக்கும் பொறுப்பை ஏற்று மூன்று வருடங்கள் கற்று கொடுத்து வந்தார்.
1942 ஆம் ஆண்டு, ஷெய்க் அஹ்மத் தீதாத் தன் முதல் சொற்பொழிவை தென் ஆபிரிக்க தர்பன் நகரில் உள்ள ஒரு கேட்போர் கூடத்தில் 15 பேர் முன்னிலையில் நிகழ்த்தினார். அவர் பேசிய முதல் தலைப்பு "முஹம்மத் - சமாதானத்தின் தூதர்" என்பதாகும்.
இவ்வாறு தம் மார்க்க தஃவா பணியை ஆரம்பித்த ஷெய்க் தீதாத் அவர்கள் பிற்காலத்தில் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் பற்றி அக் கிறிஸ்தவ மத போதகர்கள் பிரச்சாரம் செய்து வந்த பொய்களை சுக்கு நூராக்கிய தீதாத், இன்னும் பைபிள் இல் உள்ள குறைப்பாடுகள், ஹஸ்ரத் ஈஸா நபியவர்கள் அல்லாஹ்வின் மகன் அல்ல, அவர்கள் ஒரு இறைதூதர் தான் என பல உண்மைகளை பைபிளில் இருந்தே ஆதாரம் காட்டி அவர்களின் வாய்களை அடைத்தார்.
மேலும் ஷெய்க் அஹ்மத் தீதாத் பல மாற்று மத அறிஞர்களுடன் விவாதங்கள் பல செய்து பலர் இஸ்லாத்திற்கு வர துணை புரிந்து உள்ளார். சமய ஒப்பீடு துறையில் குறிப்பாக பைபிள் சம்பந்தமாக பாண்டித்தியம் பெற்றிருந்த ஷெய்க் அஹ்மத் தீதாத் இது சம்பந்தமாக பல நூல்களையும் எழுதி உள்ளார்.
இன்னும் “ஷெய்க் அல் இஸ்லாம்” கலாநிதி தாஹிருல் காதிரி போன்ற இஸ்லாமிய அறிஞர்களுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளிலும் உரையாற்றி உள்ளார். மேலும் தீதாத் அவர்களின் சகோதரர் தென் ஆபிரிக்கா ஜோஹன்னஸ்பெர்க் இலுள்ள மின்ஹாஜ் உல் குர்ஆன் அமைப்பில் மூத்த அங்கத்தவராகவும் இருந்தார்.
மேலும் ஷெய்க் அஹ்மத் தீதாத் அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்தவராவர். தமது உரைகளின் போது சில சமயம் அகீதா சம்பந்தப்பட்ட விசயங்களையும் பேசி உள்ளார். தான் மீலாதுன் நபி வைபவத்தை கொண்டாடுவதாக அவர் தெரிவித்ததோடு அது சம்பந்தமாக விவாதித்த ஒரு வஹாபியோடும் விவாதித்துள்ளார். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஹயாதுன் நபி எனவும் அவர் விசுவாசம் கொண்டிருந்தார். மேலும் அல்லாஹ்விற்கு உருவம் இல்லை எனவும் தன் உரையாடல் ஒன்றில் கூறி இருந்தார்.ஏனெனில் வஹாபிகள் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என நம்பிக்கை கொண்டோர் ஆவர்.
1996 ஆம் ஆண்டு ஷெய்க் அஹ்மத் தீதாத் அவர்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சுகவீனமுற்றார். பின்னர் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி தமது 85 ஆம் வயதில் தென் ஆபிரிக்காவில் காலமானார்.
அல்லாஹ் அவரை பொருந்தி கொள்வானாக...
English - தமிழ்