MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மௌலானா ஷெய்க் ஜமாலிய்யா ​ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியவர் - யாகூப்  


ஆத்ம ஞானச்சுடர், அல் ஆரிபுஸ் ஸமதானி வல் வலிய்யுல் வஹ்தானிய் வல் கெளதுல் பர்தானிய் அஷ்ஷெய்கு ஜமாலியா செய்யித் முஹம்மத் மெளலானா காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்

இன்றைக்கு சுமார் 169 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 1264 முஹர்ரம் பிறை 2 , ஞாயிற்றுக்கிழமை பக்தாத் நாட்டில் பாபுஷ் ஷைகு என்ற இடத்தில் உள்ள பைத்துஷ் ஷிரஃபா இல்லத்தில் பிறந்தார்கள்.

இவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுறையில் ஹழ்ரத் கெளதுல் அஃளம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வம்சாவளியில் வந்த திருப்பேரர் ஆவார்கள்.

இவர்களின் தந்தையின் பெயர் இமாமுல் அஃலம் அஸ்ஸையித் ஜமாலுத்தீன் மெளலானா அல் ஹாஷிமிய் (ரலியல்லாஹு அன்ஹு) ஆவார்கள். தாயாரின் பெயர் நிறைந்த கராமாத்துக்களையுடைய ஸய்யிதா ஆபிதா (ரலியல்லாஹு அன்ஹு) ஆவார்கள்.

சிறு வயதில் ஆரம்பக் கல்வியை பக்தாதிலேயே கற்றுத் தேர்ந்து, வேத நெறிமுறையாம் சட்டக் கலையும் (பிக்ஹு) கற்று, ஃபகீஹாகவும் (வேதச்சட்ட அறிவியல் ஞானி) ஷாஇராகவும் (கவிஞர்) விளங்கினார்கள்.

பக்தாத்தில் யுத்த தளகர்த்தராகப் பணிபுரிந்தார்கள். காதிரிய்யாத் தரீக்காவுக்கு தம் ஆத்ம ஞானத் தந்தை அஸ்ஸையித் ஜமாலுத்தீன் மெளலானா அல் ஹாஷிமிய் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும், ஜுப்ரிய்யாத் தரீக்காவுக்கு காயல்பட்டினத்தைச் சேர்ந்த அஷ்ஷைகு உமருல் காஹிரிய் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திரு புதல்வர் குதுபு அப்துல் காதிரில் காஹிரிய் அவர்களின் திருப்புதல்வர் அஷ்ஷைகு முஹம்மத் ஸாலிஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும், நக்ஷ்பந்தியா தரீக்காவுக்கு அஸ்ஸையித் மஹ்முதுல் புகாரிய்யுன் நக்ஷ்பந்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும், ஷாதுலிய்யாத் தரீக்காவுக்கு அஷ்ஷைகு ஹுமைஸரிய்யுஷ் ஷாதுலிய் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தும் பைஅத்தும் (ஞான தீட்சை) கிலாபத்தும் (உத்தராதிகாரம்) பெற்றுக் கொண்டார்கள்.

ஓய்வு பெற்ற பின்னர் பக்தாதை விட்டு வேறு பல நாடுகளுக்கு சென்று இறுதியாகப் பாரத நாட்டை வந்தடைந்தார்கள். பரந்து விரிந்த பாரதத்திலே, பற்பல ஊர்களுக்கும் சென்று அவ்வவ்வூர்களிலே பலகாலம் தங்கி வேத மறை பொருளாம் திவ்விய ஞான விளக்கம் செய்தார்கள். இவ்வண்ணமே ஈழ மணித்திரு நாட்டிலும் இறைஞானம் பரப்புமுகமாய் ஈங்கணும் திருவருகை தந்தருளினார்கள்.

இலங்கையில் தங்கள் மாமனாரின் மகளாரை திருமணம் செய்தார்கள். கேரளாவில் அருள்நிறை மாதாய் விளங்கிய ரஹ்மா என்ற பெண்மணியையும் பாரதத்தில் வேதாளை எனும் ஊரில் ஒரு மாதையும் மணம் புரிந்தார்கள். இவர்கள் ஏற்கனவே பக்தாத்தில் தங்களின் சிறியதந்தையாரின் மகளாரைத் திருமணம் செய்திருந்தார்கள்.

பக்தாத்தில் வாழ்ந்த நாயகியார் மூலம் ஜமாலிய்யா ஸய்யித் முஸ்தபல் ஹாஷிமிய், ஜமாலிய்யா ஸய்யித் அலவிய்யுல் ஹாஷிமிய், ஜமாலிய்யா ஸய்யித் அலிய்யுல் ஹாஷிமிய் என்ற ஆண்மக்கள் பிறந்தனர். இலங்கையில் மணந்த மாதரசியார் மூலம் நமது தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் நிறுவனரான குத்புல்ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிறந்தனர்.

அவர்களுக்குப்பின் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் ஹாஷிமித் மெளலானா என்ற பிள்ளை ஒருவர் பிறந்து சிறுவயதிலேயே மறைந்தனர். கேரளாவில் மணமுடித்த ரஹ்மா என்ற பெண்மணியார் மூலம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யஹ்யா மெளலானா அல் ஹாஷிமிய் அவர்களும், இராமநாதபுரம் வேதாளையில் மணந்த மாதரசி மூலம் ஸய்யிதா ஜமீலத்துஷ்ஷரீபா என்ற பெயருடைய மகளாரும் பிறந்தார்கள். மெளலானா நாயகம் அவர்களுக்கு பிள்ளைகள் மொத்தம் இருபத்தொருவர் பிறந்தனர்.

இந்தியா,இலங்கை, பர்மா, இராக் முதலான நாடுகளிலே பன்னீராயிரத்துக்கு மேற்பட்ட முரீதுகளுக்கு நேர்வழிகாட்டினார்கள். வாழ்நாள் முழுவதும் தீன்பணியிலும் மக்களை நல்வழிப்படுத்துவதிலுமே தங்களை அர்ப்பணம் செய்தார்கள். சிங்கம்பத்து என்னும் ஊரில் ஒரு தைக்கா அமைத்து ஞானப்பணி புரிந்தார்கள்.

இவர்களின கரம்பிடித்து 4 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைந்ததாக காயல்பட்டினம் செண்டு ஆலிம் அவர்களின் புகழ்ப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைவு : நாடு நகரெங்கும் அலைந்து திரிந்து நாயன் பணியாற்றிய குருநாதர் அவர்கள் இறுதியாக பேராவூரணிக்கு அருகே அமைந்துள்ள சம்பைப்பட்டினம் என்னும் சிற்றூரில் தங்கள் குடும்பத்தாருடன் இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்கள்.

நூற்று நாற்பது வயது வரை உடல் நலத்தோடும் பலத்தோடும் வழ்ந்த மெளலானா அவர்கள் ஹிஜ்ரி 1371 ஜமாதுல் அவ்வல் பிறை 1 திங்கள் ஸுபுஹுக்குச் சற்று முன்பு நான்குமணிக்கு (28.1.1952) ஏக இறையை அடைந்தார்கள்.

இவர்களின் திருவுடல் சம்பையயனும் ஊரிலுள்ள மெளலானா தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மெளலானா அவர்களின் தர்கா ஷரீஃப் அவர்களின் திருப்பேரர் குத்புஸ்ஸமான் ஸம்ஸுல் வுஜுத் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவுன் மெளலானா நாயகம் அவர்களின் முயற்சியில் அழகாக எழிலாக கட்டப்பட்டுள்ளது. தாங்கள் வாழும்போது பல கராமத்துக்களை நடத்தி மக்களின் நாட்டங்களை நிறைவேற்றிய மெளலானா அவர்கள் மறைவுக்குப் பின்னரும் அவர்களை நாடி நிய்யத் செய்து தேடி வருவோருக்கு பல அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.

நூற்கள் : அரபுமொழி, அறபுத் தமிழ் மொழிகளில் உரைநடையில் செய்யுள் எழுதுவதிலும் தனித்திறன் படைத்த மெளலானா அவர்கள் குன்யத்துல் பாஸிலீன். மிப்தாஹுஸ்ஸாலிஹீன், மன்பஅதுல்இல்மிய்யா, பரா இளுஸ்ஸாலிஹீன், துர்ரத்துல்காமிலீன், மன்பஅத்துர் ரஹ்மானிய்யா, பீஅஹ்காமின் நபவிய்யா, துர்ரத்துல் ஆரிபீன் பீ அக்லாகிஸ்ஸாலிஹீன் முதலான பல நூல்களை எழுதினார்கள். இந்நூல்களை எல்லாம் இவர்களே அச்சேற்றினார்கள்.