MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இறைநேசர்களின் கப்ருகளை ஆண்கள் பெண்கள் ஸியாரத்  செய்யலாமா ? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் கப்றுகளை ஸியாரத்து செய்வது ஆண், பெண் இரு பாலாருக்கும் சுன்னத்தும், முஸ்தஹ்பும் ஆகும்.


♣  நபிமார்கள், இறைநேசர்கள், ஸுஹாதாக்களின் கப்றுகளை ஸியாரத் செய்யலாமா?

ஆம், செய்யலாம் என்று பெருமானார் ﷺ கூறுகிறார்கள். ஜியாரத் செய்வது உயர்ந்த சுன்னத்தான காரியம். ஆண்களுக்கு ஏகோபித்த முறையில் நன்மையான காரியம் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) கூறியுள்ளார்கள். அதே போலவே ஜியாரத் பெண்களுக்கும் ஆகுமான நன்மையான காரியமே. ஆனால் ஜியாரத்தின் போது அந்நிய ஆண்களுடன் எவ்வித திரைகளுமில்லாமல் கலந்து விடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி கலக்கும் நிலை இருந்தால் பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது.


இருபாலருக்கும் ஜியாரத் ஜாயிஸ் என்பதற்கு குர்ஆன், ஹதீஸில் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக இறைத்தூதர்கள், இறைநேசச்செல்வர்கள் மஜார்களை தரிசிப்பது பாக்கியம் நிறைந்த நடைமுறையாகும். இவ்வாறே இப்னு ஷிஹாபு ரமலீ ரஹ்மதுல்லாஹி அலைஹிமா போன்ற மார்க்க மேதைகள் ஆய்ந்தறிவிப்புச் செய்துள்ளனர்.


​​நமது முன்னோர்கள் அவ்லியாக்களுடைய தியாகங்களை போற்றும் வகையில் அவர்களுடைய நினைவு நாட்கள் வரும்போது அந்நாட்களில் உரூஸ் விழாவை அமைத்து அது விஷேசமாக ஜியாரத் செய்வது ஆகுமாக்கப்பட்ட சுன்னத்தான காரியமே.


♣  ஆண்கள் ஜியாரத் செய்வதற்காக ஆதாரங்கள் :


♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.


ஹழ்ரத் ​​புரைதா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: ஸஹிஹுல் முஸ்லிம் 3995, திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்


♦ கப்றுகளை ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் பூஹரைரா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம் 1777


♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.


​நூல்: இப்னு மாஜா-1569, மிஷ்காத் - 154


♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

ஆதாரம்: தபரானி 3 - 241


♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும்.


ஹழ்ரத் ​​அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ


♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் "தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத் தேடிவிட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள்".


​​நூல்: முஸ்லிம் 1 - 313, மிஷ்காத் 154


♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.

நூல்: பைஹகி, மிஷ்காத் - 154


♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள்.

நூல்: மிஷ்காத் 2 – 407


♦நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.


​​நூல்: முஸ்லிம், மிஷ்காத் - 154


♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: மிஷ்காத் 4 – 382


♣  பெண்கள் ஸியாரத் செய்வதற்காக ஆதாரங்கள் :


♦ அப்துல்லாஹ் பின் அபீ மலீகா ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார் :ஒரு நாள் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் சென்றுவரக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.

நூல்: ஹாகிம் 1327

♦ ஸியாரத்துக்கு செல்லும் போது என்ன ஓதவேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்ல அன்னவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சொல்லி கொடுத்து ஸியாரத்திற்கு முழு அனுமதி  வழங்கி இருக்கிறார்கள். "ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: ஜிப்ரீல் "உம் இறைவன் உம்மை "பகீஉ'வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்' என்று (என்னிடம்) கூறினார்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​நான் "அல்லாஹ்வின் தூதரே! அடக்கத் தலங்களில் இருப்பவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று சொல்'' என்றார்கள்.


பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.

நூல்: முஸ்லிம் 1774, மிஷ்காத் - 154


ஜியாரத் செய்ய செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். பெண்கள் ஜியாரத் செய்ய செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கமாட்டார்கள். ஆகவே இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் தர்ஹாக்கள் மற்றும் பொது மையவாடிக்குச் சென்று கப்ருகளை ஜியாரத் செய்து மறுமை சிந்தனையை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.


♦ அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹுஅன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்தார்கள். 


​​நூல்: முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1- 377


♦ மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா

அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஸியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.


​​நூல்: மிஷ்காத் - 149, முஸ்னத் அப்துர்ரஸ்ஸாக் 3 - 5079


♦ ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.


​​ஆதாரம்: மிஷ்காத் – 154


♣  ஆண், பெண் இருபாலரும் ஜியாரத் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:


♦ மிஷ்காத்தின் விரிவுரையான‌ “ல‌ம்ஆத்” என்ற‌ நூலில் இமாம் அப்துல் ஹ‌க் முஹ‌த்திக் திஹ்ல‌வி ர‌ஹ்ம‌த்துல்லாஹி அலைஹி எழுதுகின்றார்க‌ள். “ஜியார‌த் செய்யும் போது முடிந்த‌ள‌வு மையித்தை க‌ண்ணிய‌ப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மாகும். குறிப்பாக‌ சாலிஹான‌ ந‌ல்ல‌டியார்க‌ளை ஜியார‌த் செய்யும் போது உள்ளும், புற‌மும் ஒழுக்க‌மும், வெட்க‌மும் க‌லந்த‌ நிலையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். ஜியார‌த்து செய்ப‌வ‌ரின் ஒழுக்க‌ம், ப‌க்தி, அட‌க்க‌ம் ஆகியவற்றினடிப்படையில் தான் கபுறாளிகளின் உதவிகள் கிட்டும்.


​​ஆதாரம்: லம்ஆத், மிஷ்காத் பக்கம் 154


♦ ஜியாரத் செய்யும் போது வுழு செய்து சுத்தமாக செல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜியாரத் வழிமுறையை நமக்கு காட்டிய சுன்னத்தான காரியமே


♦ ஜியாரத் செய்யும் போது துஆ ஓதிச்செல்ல வேண்டும் "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்'' என்று ஓத வேண்டும்.

பொருள் : அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.


♦ மரணித்த கப்றாளிகளுக்கான குர்ஆன் அல்லது குர்ஆனின் இதயம் யாஸீன், மற்றும் ஏனைய சூறாக்களை அவ்விடத்தில் ஓதி அந்த நன்மைகளை அவர்களின் பக்கம் சேர்த்து வைக்க வேண்டும்


♦ அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களை முன்னிலைப்படுத்தி எமது தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட வேண்டும் "எனது ஹக்கில் துஆ செய்யுங்கள், மேலும் எனக்கு உதவி செய்யுங்கள் அல்லது வலிமார்கள் பொருட்டினால் இறைவனிடம் உதவி தேடுதல் எது எப்படி இருந்தாலும் இதுவெல்லாமே வஸீலாதான் ஆகவே யதார்தத்தில் உதவி செய்வது அல்லாஹ்தான் இந்த வலிமார்கள் பொருட்டால் உதவி செய்கின்றான்.


♦ அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய நபிமார்கள், வலிமார்கள், ஷூஹதாக்களின் கப்றுகளாக இருந்தால் அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால், அருள் எனும் பரக்கத் நாடி அக்கப்றுகளை முத்தமிடல் வேண்டும்


♦(இபாதத்) என்ற நோக்கத்துடன் கப்ருகளுக்கும் ஸஜதா செய்யக் கூடாது ஷிர்க் ஆகும், (கண்ணியம் - மரியாதை) என்ற நோக்கத்துடன் கப்ருகளுக்கு ஸஜதா தஃழீம் செய்வது கூடாது ஹராமாகும். எது எப்படி இருந்தாலும் கப்றுகளுக்கு ஸஜதா செய்வது கூடாது


♦ ஜியாரத் செய்யும் போது கப்ருகளை சுற்றி வளம்வருவது கூடாது ஆகவே தவாப் என்பது அல்லாஹ்வின் இறையில்லம் கஃபதுல்லாஹ்வை மாத்திரம்தான் சுற்றி வளம்வரவேண்டும்


♦ ஆண், பெண் இருபாலரும் ஜியார‌த் செய்யும் போது உள்ளும், புற‌மும் ஒழுக்க‌மும், வெட்க‌மும் க‌லந்த‌ நிலையில் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். ஜியார‌த்து செய்ப‌வ‌ரின் ஒழுக்க‌ம், ப‌க்தி, அட‌க்க‌ம் என்பவர்ரை கடைபிடிக்க வேண்டும்


♦ ஆண், பெண் இருபாலரும் ஒழுக்கமான இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த ஆடம்பெரிய ஆடைகள் அணியாமல் தக்வா எனும் ஆடையை அணிந்து வர வேண்டும்


♦ ஜியாரத் செய்ய வரும் பெண்கள் ஆகுமாக்கப்பட்ட ஒரு ஆண் துணையுடன் அதாவது (தந்தை, கனவர், சகோதரர்) ஆகியோருடன் வரவேண்டும்.


♦ பெண்கள் ஜியாரத் செய்ய வரும் போது வீதிகளில் அண்ணிய ஆண்களின் அடாவடித்தனம், அண்ணிய ஆண்களின் பித்னாக்களை பயந்தால் வெளியில் செல்லாமல் வீட்டிலே இருக்க வேண்டும்.


♦ ஜியாரத் செய்யும் இடங்களில் மரியாதைமிகு மார்க்கமேதைகளை அழைத்து பல்வேறு தலைப்புகளில் பயான் பண்ணவைத்து இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை எடுத்துரைக்க வேண்டும்.


♦அவர்களுடைய இறைபக்தியையும், ஈமானிய உறுதியையும், தன்னலமற்ற சேவைகளையும் எடுத்தரைத்து அவர்கள் பாதையில் மக்களை நடக்கச் செய்ய வேண்டும்.