MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பச்சை குப்பா

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமான ரவ்ழாவும் அதன் பச்சை நிற குப்பா கட்டிடமும்.

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

மஸ்ஜிதுன்னபவி (மதீனா பள்ளி)யில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவின் மேல் கட்டப்பட்டு இருக்கும் பச்சை நிறத்திலுள்ள குப்பாவை உடைத்து அகற்ற வேண்டும். அந்த பச்சை நிற குப்பா கட்டிடதுக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.


​​அந்த அடிப்படையில் பச்சை நிற குப்பா கட்டிடத்தின் முக்கியத்துவம் பற்றி நபிமொழியை ஆதாரமாக காட்டி உலகம் முழுவதும் இன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழாவுக்கு மேல் இருக்கும் பச்சை நிற குப்பா மாபெரும் ஒரு அடையாளச் சின்னமாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பை வெளிப்படுத்தக் கூடிய, முஹப்பத்துக்குறியதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் அல்லாஹ் ஆக்கிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்!

அன்றிலிருந்து இன்று வரையுள்ள மஸ்ஜிதுன்னபவியில் உள்ள பச்சை நிற குப்பா பார்ப்பதற்கு அழகாகவும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் உரக்க எடுத்துச் சொல்லக் கூடியதாகவும் இருந்து கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் பச்சை நிற குப்பா பெருமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு இணைக்கப்பட்டு பல நூற்றாண்டுகளை கடந்துவிட்டது இதற்கு பிறகு பச்சை குப்பாவை பற்றி குறைமதியில் கூட பார்க்க கூடாது. காரணம் இன்று உலகளவில் கண்ணியத்தின் சவாலாக இருக்கின்றது.


​​

♣ நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் அடங்கியுள்ள புனிதமான இடங்களில் குப்பா கட்டுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

♦ இமாம் காளி இயாள் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் மற்றும்முள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் '' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர்.

நூல்: இத்திஹாப் பாகம் 4 : பக்கம் 416,417

♦சில நல்லோர்கள், உலமாக்கள்,இமாம்கள் மற்றும் 'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப், கஃபா, பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளைநிலமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ (ரஹ்மதுல்லஹி அலைஹிமா) போன்ற பேரரிஞர்களாவர்.

நூல்: வஃபாவுல் வஃபா 1: 83

♦நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப் மிகவும் தரைமட்டமில்லாமலும் மிக உயரமில்லாமலும் கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த பொடிக்கற்கலால் பதிக்கப்பட்டிருந்தது. ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் இருந்த அறையிலே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடக்கப்பட்டார்கள்.


​​எனவே ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அந்த அறையின் குறுக்கே மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க ஆயிஷா (ரலியல்லாஹுஅன்ஹா) மறுபுறம் இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்ததால் காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால் கரைந்துவிட்டது.

இதன் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி 23 வரை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலால் மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெறியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு, புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன.


​​இம்மதில்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது.

நூல் :வஃபாவுல் வஃபா 2:544

♦ பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும் உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக கட்டினார். அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக் கொண்டார்கள் என அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் ஆகும். இந்த சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அம்மதில்கைள உயரமாகக் கட்டினார்கள்.

நூல் : ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544

♦ உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது.


​​இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மினிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது. இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது.


​​இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார்.


​​இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு கப்ருகள் கட்டப்பட்டன.


​​நூல்கள்:ஐனீ 4:251, பத்ஹுல் பாரி 3:165, ஹயாதுஸ் ஸஹாபா 22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477

♦ அப்துல் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதமே இல்லை;மாறாக, இது உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்.

நூல் புகாரி:1390

♦ அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள் பலமானதாக நிர்மாணிக்கபட்டு,அதன் மேல் தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடுகள் உள்ள மரக்கட்டைகள்,பலகைகளைக் கொண்டு வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபோது அதில் 193 வேலைப்பாடு மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70 கட்டைகள், உத்திரங்கள் முறிந்து சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக 70 புதிய கட்டைகள் மாற்றப்பட்டன. புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள் அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால் கட்டப்பட்டன.


​​பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில் காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளால். "அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா'' அழகுப் படுத்தப்பட்டது.

பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 548-ல் மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு,செப்பனிடப்பட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரு, அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர்கள் கப்ருகள் இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புணர்தானம் செய்யப்பட்டு பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.

பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான் மாதம் முதல் நாள் அன்று,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின் மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது. பற்றி எறிந்த தீ, பள்ளிவாசல் மேல் தளத்தை இரையாக்கி, எங்கும் பரவிய தீ,மஸ்ஜிதுன் நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கரித்து துவசம் செய்தது.


​​இத்தீ விபத்தில்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்கள் கப்ர், உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு ) ஓதிய குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.

ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு, எகிப்து மன்னர் நூருத்தீன் ஜன்கீ, யமன் நாட்டு மன்னர் ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும் மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர். பின்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர் ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள், 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன் ஸாலிஹ் என்பவரின் தலைமையில் மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன் நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கினார்கள்.

ஹிஜ்ரி 706-ல் ரவ்ளா ஷரீப் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மேற்கு, கிழக்குப் பகுதியில் மாடிகள் மேற்கூறைகள் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்களின் கப்ருகளையும் அழகு படுத்துவதிலும் மிக, மிக அக்கறை கொண்ட சுல்தான் கலாவூனும், ருக்னுத்தீன் பைப்ரஸ்,சுல்தான் காய்த்தபாதயீ, மற்றும் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சரித்திரத்தில் இடம் பிடித்து நபியவர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளனர்.

ஹிஜ்ரி 731-ல், மலிக்குல் அஷ்ரப் பர்ஷ்பாய் என்பவர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பள்ளிவாசலை மேலும் ஒரு நீண்ட பெரிய மாடியை கட்டினார். இதன் பின்னர், ஹிஜ்ரி 777-ல் சுல்தான் கலாவூன் என்பவர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்தி, ரவ்ளா ஷரீபுக்கு செல்ல தனிப்பாதை அமைத்தார். ஹிஜ்ரி 779-ல் சுல்தான் காய்தபாய் என்பவர் பொருப்பேற்று,பள்ளிவாசலின் கிழக்குப் புறச் சுவர் இடிக்கப்பட்டு, மேலும் 27 முழங்கள் அகலப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது.

பின்னர் ஹிஜ்ரி 781-ல், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ளா புணர் நிர்மாணப் பணிக்கு ஹாஜா ஷம்ஜீ என்பவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரின் மேற்பார்வையில் ரவ்ளா ஷரீபின் மேல்தளமும் அதனுடன் சேர்ந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் எழுப்பப்பட்ட குப்பாவைச் சுற்றியுள்ள பகுதியும் உயர்த்தப்பட்டு, மின்பரின் கிழக்குபுறமுள்ள மேற்பகுதியில் முறிந்தும், உடைந்தும் போன கட்டைகள்,உத்திரங்கள் பலவற்றை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹிஜ்ரி 853-ல் சுல்தான் லாஹிர் ஜக்மகின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவியின் மாடியின் தளத்தில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்களின் புனிதமிகு கப்ருகள் இருக்கும் கட்டிடத்தின் ரவ்ளா ஷரீபின் மேல்தளத்தில் பெரும் கீரல் (விரிசல்) ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில் அக்கறையுடன் அதை செப்பனிட்டு ரவ்ளா புதுப்பிக்கப்பட்டது.

♦ பின்னர், ரவ்ளா ஷரீப் விரிவாக்கப்பட்டு மூன்று வாயில்கள் உள்ள அறையாக கட்டப்பட்டது. அதன் சுற்றுப் புறங்களில் பித்தளைக் கம்பிகளால் ஆன ஜன்னல்கள் வைக்கப்பட்டன. புனிதமிகு கப்ருகளை நெருங்கி மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கப்ருகளைச் சுற்றி வேலி போன்ற இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டது.


​​இந்த தடுப்புக்கு பித்தளை முலாம் பூசப்பட்டது. ஜும்ஆ நாளன்று கூட்டம் அதிகமாக இருப்பதால் ரவ்ளா ஷரீபின் பணியாளர்கள் மட்டும் தடுப்புக்கு உள்ளே நின்று தொழ அனுமதிக்கப்பட்டனர். இந்த அறையே; ஹுஜ்ரத் ஷரீபா (கண்ணியமான அறை) என்று அழைக்கப்பட்டது. ஹுஜ்ரத் முபாரக்காவில் நுழைவதற்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அகியோர்கள் அடக்கமாகியுள்ள அறைகளின் வாயில்களில் ஒரு வாயில் மட்டும் திறந்தே இருக்கும்.

நூல் : வஃபாவுல் வஃபா 2:616

♦ ஹஜ் உடைய காலங்களில் மட்டும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால்,அக்காலத்தில் மட்டும் ரவ்ளாவின் அறை பூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ஹஜ் காலங்களில் பெண்கள் தங்கள் குழந்தையுடன் தங்கும் இடமாகும். சில சமயம் பிள்ளைகள் அப்பகுதியில் அசுத்தம் செய்துவிடும்.


​​எனவே, ஹிஜ்ரி 732-ல் சுல்தான் மலிக்கு நாஸிர் ஹஜ்ஜுக்கு வந்து, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இடத்திற்கு வந்து இவையெல்லாம் பார்த்து, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஹஜ்ஜுக் காலங்களில் மட்டும் பூட்டிவிட உத்தரவு இட்டார்.


​​அதன்பின் ஹஜ்ஜுக்காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத் செய்ய அந்த அறையில் நுழைவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு கட்டுப்பாடு இல்லாமல் போனது. எனவே, புனித அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. இவ்வாறு ஹுஜ்ரத் ஷரீபாவை அடைக்கப்பட்டதால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஜியாரத் மட்டும் தடைபடவில்லை.

♦ பச்சை குப்பாவை இடிக்க முயற்சி வீண் இன்றைக்கு இருக்க கூடிய சவூதி அரசாங்கம் சுல்த்தான் அப்துல் அஜீஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் சவூத் என்பவர் முதல் முதலில் 1902 இல் ரியாத்தை கைப்பற்றினார் பிறகு 1924 இல் மக்காவை கைப்பற்றினார் பிறகு 1925 இல் மதீனாவை கைப்பற்றினார் 1936 இல் முழு அரபு தேசத்தையும் கைப்பற்றி 1939 இல் சவூதி அரேபியா என்று பெயர் வைக்கப்பட்டது. 1925 இல் வாஹ்ஹாபியர்களால் மதீனாவின் அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டன.


​​ரவ்ழாவையும் அதன் அடையாளங்களையும் அழிக்க முற்ப்பட்டனர் அப்போது உலகமெங்கும் உலமாக்களிடத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்ப்பட்டது.அப்போது இறைவனின் உதவியால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்று ஷரீபினை உடைக்கச் சென்றவர்கள் அழிக்கப்பட்டு மகத்தான வெற்றியே கொண்டு மதீனா நகரமே வஹ்ஹாபிகளிடம் இருந்து பாதுகாக்கப்பட்டது.


​​

♣ மதீனாவின் பச்சை நிற குப்பாவில் ஜன்னல் இன்று இருக்க கூடிய டூமில் கூட காணலாம்

ஒரு தடவை மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது அப்பொழுது அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் மக்களெல்லாம் முறையிட்டார்கள். அதற்கு அன்னையவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பக்கம் முன்னோக்குங்கள் அவர்களின் கப்ரி(ருக்கும் அறையி)லிருந்து துவாரத்தை வானத்திற்கும் நபியவர்களின் கப்ருக்கும் மத்தியில் உண்டாக்குங்கள். அதேபோல் செய்யப்பட்டது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விட்டது தாவரங்கள் முழைக்க ஆரம்பித்தன கால்நடைகள் அனைத்தும் பெருத்துவிட்டன தேவைக்கு அதிகமாகவே பொழிந்தது அந்த ஆண்டிற்குعام الفتن என்று பெயர் வைக்க பட்டது.


​​நூல் : தாரமியூ 5950

♦இதிலிருந்து நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் மேலே முகடு அன்றே இருந்திருக்கிறது இன்றைக்கும் இந்த ஹதீஸின் அடிப்படையில் பச்சை குப்பவிலே ஜன்னல் வைத்து மூடப்பட்டிருக்கிறது. அப்படி பஞ்சம் வந்தால் குப்பவை உடைக்காமல் ஜன்னலை மட்டும் நாயகத்தின் பச்சை குப்பாவை இடிக்க வேண்டும் என்று வஹ்ஹாபிகள் உளறிக்கொண்டிருக்கும் நேரத்தில் மார்க்கத்தில் இதன் விஷயத்தில் இமாம்கள் என்ன வழிமுறையை கையாண்டுள்ளார்கள்.


​​நல்லோர்களுக்கு குப்பா கட்டுகின்ற விஷயத்தில் என்னக் கூறியுள்ளார்கள் என்பதை எடுத்தரைத்ததோடு கடந்த கால வரலாற்றைக் கூறி பெருமானாரின் கண்ணியம் காக்ககப்பட வேண்டும் என்று தக்கதருணத்தில் பிரஸ்தாபித்ததற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக.


​​ஆகவே மாமதீனாவின் சிறப்புக்கள், பச்சை நிற குப்பாவின் முக்கியத்துவம் பற்றி பேசி மக்களின் உணர்வை தூண்டி நாயகத்தின் மீதும் அவர்களின் புனித உடலை தாங்கி கொண்டிருக்கும் புனித ரவ்லாவின் மீதும் அந்த புனிதமான மண்ணின் மீதும் பரிபூரண முஹப்பைத்தை ஏற்படுத்துவோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்