MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பூமான் நபியின் ﷺ தனிச்சிறப்புகள்


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


"உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தனிச் சிறப்புகள்"


​♣அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

♣ 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 68:4)

♣ நாம் உங்களுக்காக உங்களுடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

(அல்குர்ஆன் : 94:4)

♣ மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. (அல்குர்ஆன் : 93:11)

♣  (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் :21:107)

♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​"நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்."

ஆதாரம்: மிஷ்காத் - 513

♣ நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

​ஆதமுடைய பிள்ளைகளில் தலை முறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்.

ஸஹிஹுல் புகாரி - 3293

♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

​ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்.

ஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747

♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

​"நானே முன்னோர் பின்னோர் யாவரிலும் மிக சங்கைகுரியவனாக இருக்கின்றேன்.

திர்மிதி 3131, தாரமி 47, முஸ்னத் அஹமத் 3 - 164, மிஷ்காத் 5762, 5920

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​"மக்கள் இருப்பிரிவினராக பிரிகின்றபோது அவற்றில் சிறந்த பிரிவில் இறைவன் என்னை அமைத்தான்."


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லஹு அன்ஹு)

பைஹகி (தலாயிலுந் நுபுவ்வா 81)

♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது என்று கூறினார்கள்.


​​ஸஹிஹ் முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045

♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்) கூறியுள்ளார்கள்:

​"நிச்சயமாக நான் அல்லாஹுதஆலாவின் பால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்."

மிஷ்காத் – 5800, தாரமி – 15, பைஹகி ஸுஃபுல் ஈமான் – 1446

♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:

​"நிச்சயமாக பூமியிலுள்ள பொக்கிஷங்களின் திறப்புகள் என்னிடமே உள்ளது."


​​ஸஹீஹுல் புகாரி - 1-508, மிஷ்காத் 512

♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​"நான் விரும்பினால் தங்க மலைகள் என்னிடம் விரைந்து வந்துவிடும்."


ஆதாரம்: மிஷ்காத் 521

♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

​"தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பொக்கிஷங்களையும் கொடுக்கப்பட்டுள்ளேன்."

இப்னு மாஜா 3952, மிஷ்காத் 512

♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

​"நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்."


​​ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 6575

♣ நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறியபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டதுஅதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 200

♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. வேறு சில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி 3561

♣ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களை நான் பார்த்தேன். அஸருடைய தொழுகையின் நேரம் வந்தது. (ஒழுச் செய்யத்) தண்ணீரை மக்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. ஒலுச் செய்ய ஒரு பாத்திரம் (தண்ணீர்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பாத்திரத்தில் தங்கள் கையை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒழுச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்களுடைய விரல்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வெளிவருவதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் ஒழுச் செய்தனர்.


​​ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹூ அன்ஹூ)

ஆதாரம்:  ஸஹிஹுல் புகாரி

♣ பெருமானார் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களின் திருமுகம் வாளை போன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள்.


​​ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி - 3552

♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் இருந்தார்கள்.


​​ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹ் முஸ்லிம் - 2344, திர்மிதி - 3636, மிஷ்காத் – 515

♣ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சந்தோசம் மேலிட்டால், அவர்களின் அழகு திருமுகம் சந்திரனின் ஒரு துண்டு போல் இலங்கிகொண்டிருக்கும். இதனை நாங்கள் (மிக தெளிவாகவே அறிந்துக்கொள்வோம்.


​​ஹழ்ரத் கஹ்பு இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் – 518

♣ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக் கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.


​​ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி 3648 , முஸ்னத் அஹ்மத் 2 - 350 , மிஷ்காத் 5795

♣ நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரைக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள்.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232

♣உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.


​​ஹழ்ரத் இஸ்ராயீல் இப்னு யூனுஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 5896

♣ என்னைக் கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவரைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மொழிந்தார்கள்.


​​ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி, மிஷ்காத், கிதாபுல் மனாகிப் 

♣ பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தாள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, 'எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?' என்று கேட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, 'தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி, அப்பெண்ணிடம் கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது!


​​ஆதாரம்: தப்ரானி

♣ கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள்.

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்

♣ ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம் என கூறினார்கள்.


​​ஸஹிஹ் முஸ்லிம் பாகம்2, பக்கம் 190

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக்குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவனேயாவேன். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வினால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன்.


​​ஸஹீஹுல் புகாரி - 3117

♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனாகவும், மிக வாய்மைக்குரியவனாகவும், மிக நல்லவனாகவும் இருக்கிறேன்.

ஆதாரம்: மிஷ்காத் 226

♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாவும் இருந்தார்கள்.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 6033

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறக் கேட்டேன்.


​​ஹழ்ரத் முஹம்மத் பின் முன் கதிர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 6034

♣  நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன்(மனம் வேதனைப்படும்படி) என்னை …ச்சீ என்றோ (இதை ஏன் செய்தாய் என்றோ. நீ (இப்படிச்) செய்திருக்கக்கூடாதா? என்றோ அவர்கள் சொன்னதில்லை.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் புகாரி 6038

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள்.


​​ஹழ்ரத் அபூசயீத் அல்குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் புகாரி 6119

♣ இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றேன். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். அதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.


​​ஹழ்ரத் ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு)

​ஸஹிஹுல் ஹ் முஸ்லிம் 1357

♣ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.


​​ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹீஹுல் புகாரி - 15

♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ''சந்திரனை இரண்டு துண்டுகளாக (பிளந்து) காட்டினார்கள்'' எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே 'ஹிரா' மலையைக் கண்டார்கள்.


​​ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி- 3869. 3870. 3871 4865. 3868

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசி சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.


​​ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல் புகாரி 3639

♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிலிருக்கும் ஒரு கல்லை அறிவேன். நான் தூதராக அனுப்பபடுவதற்கு முன்னாலயே அது எனக்கு ஸலாம் சொல்ல கூடியதாயிருந்தது. இப்பொழுதும் அந்தக் கல்லை நான் அறிவேன்.


​ஸஹிஹ் முஸ்லிம் 2277

♣  நான் ஸலாமா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள்.


​​ஹழ்ரத் யஜீது பின் அப்திர் ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹூ)

ஆதாரம்: அபூதாவூத்

♣ ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது. அவர் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!

ஆதாரம்: தப்ரானி, பைஹகி

♣   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கண்டவுடன் மலைகளும், மரங்களும் ஸலாம் கூறின.


திர்மிதி - 3626, தாரமி - 1-12, ஹாக்கிம் - 2-620, மிஷ்காத் - 5919

♣  அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுமை சுமக்கும் ஒரு தோழருக்கு துஆச் செய்தார்கள். 'தோழரே! நீர் சுமப்பீராக! நிச்சயமாக நீர் கப்பலாக உள்ளீர்' என அவரிடம் கூறினார்கள். அந்தத் தோழர் கூறுகிறார், நான் அதற்கு பிறகு ஒரு ஒட்டகை அல்லது இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஒட்டகைகளின் சுமைகளை சுமந்தாலும் அது எனக்குக் கனமாக இருக்கவில்லை!

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

♣இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஸஹ்பா என்னுமிடத்தில் லுஹ்ரைத் தொழுதுவிட்டு அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்ர் தொழுது கொண்டிருந்தார்கள். (தொழுகையை நிறைவேற்றிய பின்) அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மடி மீது தலை வைத்து உறங்கினார்கள். அவர்களை அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுப்பிவிடவில்லை. சூரியனும் மறைந்து விட்டது. பிறகு (எழுந்து ) கூறினார்கள்:


​​இறைவனே! நிச்சயமாக உன் அடியார் அலி இறைத்தூதருக்கு பணியாற்றுவதில் அகப்பட்டுக் கொண்டார். ஆகவே, அவருக்காக சூரியனை திருப்பியனுப்பு! (மறைந்த) சூரியன் திரும்பி வந்து மலைகளுக்கு மேலாக உயர்ந்தது. அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து உளூ செய்து விட்டு அஸரைத் தொழுதார்கள். பின்பு சூரியன் மறைந்து விட்டது. ஸஹ்பா எனுமிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.


​​ஹழ்ரத் அஸ்மா பின்த் உமைஸ் (ரழியல்லாஹு அன்ஹா)

​தப்ரானீ (கபீர்) 19861, இப்னு அஸாகிர் 17369, ஷவ்கானீ (ஃபவாயித் மஜ்மூஆ) 1088