MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தராவீஹ் எத்தனை ரக்அத் தொழ வேண்டும்?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


"ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகை 20 ரக்அத் என்பது பற்றி தெளிவான ஓர் ஆய்வு

​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் நமது சமுதாயத்தில் தோன்றியுள்ளார்கள்.


​​அவர்களின் கூற்றுக்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளுக்கும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், இமாம்கள் மற்றும் நம் முன்னோர்களான மகான்களின் நடைமுறைகளுக்கும் மாற்றமாகவே உள்ளது.

அதில் அவர்கள் மக்கள்களின் அமல்களை குறைத்து மக்களை ஷைத்தானிய பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியில் ஒரு பிரிவாக ரமலான் மாதத்தில் கூடிய பலன்களைத் தரும் இருபது ரக்அத்துகளைக் கொண்ட தராவீஹ் எனும் தொழுகையின் எண்ணிக்கையினைக் குறைத்து தராவீஹ் எட்டே ரக்அத்துகள்தான் என்று வாதம் செய்கிறார்கள்.


​​அந்த அடிப்படையில் இவர்களிடம் ஹதீஸ்கள் பிரகாரம் ஷாபிஈ மத்ஹபின் சட்ட நூல்களில் 'தராவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று தானே எழுதப்பட்டுள்ளதென்று கூறினால் ஷாபிஈ என்றால் யார்? என்றும் மத்ஹப் என்றால் என்ன? என்றும் கேட்கிறார்கள், எனவே இவர்களிடம் முட்டிமோதுவதும், விவாதிப்பதும் கால நேரத்தை வீணாக்குவதாகுமானால் இவர்களின் வலையில் பொதுமக்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தராவீஹ் தொழுகை பற்றிய விளக்கத்தை இங்கு எழுதுகிறேன்.


​​

♣ தராவீஹ் தொழுகை என்றால் என்ன?

ரமலான் – நோன்பும் (மாதத்தில்) இரவில் நின்று வணங்கும் (தராவீஹ் தொழுகை) தொழுகையும் ஹிஜ்ரி 2ம் ஆண்டு கடமையாக்கப்பட்டன. புனித றமழான் மாத இரவுகளில் இஷா தொழுகைக்குப் பிறகு வித்று தொழுகையின் முன் தொழுகின்ற தொழுகையே தராவீஹ் தொழுகை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது மேலும் 'தராவீஹ்' என்பது பன்மைச் சொல். இதன் ஒருமை 'தர்வீஹ்' என்பதாகும். 'தர்வீஹ்' என்றால் ஓய்வு எடுத்தல் என்பது பொருள்.


​​ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு இரண்டு ரகஅத்துகளுக்கிடையிலும் இரண்டு ரக்அத்துகள் தொழும் அளவிற்கான நேரத்தை அல்லது (நான்கு ரகஅத்துகளுக்கிடையிலும்) நான்கு ரக்அத்துகள் தொழும் அளவிற்கான நேரத்தை  (ஓய்வாக-றாஹத்தாக) சஹாபாக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் இத் தொழுகைக்கு தராவீஹ் என்று பெயர் வைக்கப்பட்டது.


​​

♣ தராவீஹ் தொழுகை 20 ரக்அத் என்பது பற்றிய ஸஹீஹான ஆதாரங்கள் பின்வருமாறு:

♦ ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்கள்: பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104, இப்னு ஷைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அப்துப்னு ஹுமைத் தங்களுடைய முஸ்னதிலும், தப்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கபீரிலும், பைஹகீ அவர்கள் தங்களுடைய ஸுனனிலும், பகவீ அவர்கள் தங்களுடைய முஃஜமிலும் பதிவு செய்துள்ளனர்.

♦ நாங்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் 20 ரக்அத்துகள் தொழுவோம். மேலும் வித்ரும் தொழுவோம்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் லாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மஃரிபாவில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.  நூல்: ஷரஹுன்னிகாயா பாகம் 1, பக்கம் 102

♦ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் யஸீத் இப்னு ரூமான்.ரலியல்லாஹு அன்ஹு, முஅத்தா இமாம் மாலிக்,

​நூல்கள்: ஷரஹுன் னிகாயா பாகம் 1 பக்கம் 104, ஸுனன் பைஹகீ பாகம் 1 பக்கம் 496-தன்வீருல் ஹவாலிக் ஷரஹ் முஅத்தாலில் மாலிக் பாகம் 1 பக்கம் 138

♦ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸாயிப் இப்னு யஸீத் ரலியல்லாஹு அன்ஹு, இதனை பைஹகீ தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

​​நூல்கள்: பத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 157-ஐனி பாகம் 11 பக்கம் 127, ஜாமிஉர் ரிழ்வி பாகம் 3 பக்கம் 598, முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104

♦ கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) , கலீபா உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), கலீபா அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்தில் தராவிஹ் 20 ரக்அத்துக்களே நடைமுறையிலிருந்து  இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மக்காவில் தராவிஹ் இருபது ரக்அத் நடைமுறையிலிருப்பதை நான் கண்டேன் என்றும் கூறியுள்ளார்கள்.


​​நூல்: ஜாமிஉத் திர்மிதி

♦ உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், ரமலான் இரவில் தொழுவிக்கும்படி உமர் ரலியல்லாஹு அன்ஹு கட்டளையிட்டுவிட்டுச் சொன்னார்கள், 'மக்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள். (களைப்பால்) இரவில் திருமறையை ஒழுங்காக ஓதுகிறார்களில்லை. நீங்கள் (உபை இப்னு கஃபு) இரவில் (ஜமாஅத் நடத்துவதன் மூலம்) அவர்கள் மீது திருமறையை ஓதினால் நன்றாக இருக்கும்.' இது கேட்ட உபை இப்னு கஃபு சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன்! இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே!' ஆம்! அதனை நான் நன்கறிவேன். ஆயினும் இது நல்ல அழகிய ஒன்றே!' என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலிறுத்தனர். (பின்) இருபது ரக்அத்துகள் ஜமாஅத்தாக இப்னு கஃபு தொழுகை நடத்தினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: கன்ஸுல் உம்மால் பாகம் 4, பக்கம் 284 ஹதீது எண்: 5787

♦ ரமலானில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை  மக்களுக்கு 20 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை வைக்கும்படி பணித்தார்கள். (பின்னர்) வித்ரை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ அப்துற் றஹ்மான் ஸலமீ.

​நூல்: ஸுனன் பைஹகீ

♦ அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 5 தர்வீஹ்களில் தொழுகை நடத்தும்படி ஒரு மனிதரைப் பணித்தார்கள்.  


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபுல் ஹஸனாஸ்.

​நூல்: பைஹகீ பாகம்-2 பக்கம் 497, கன்ஸுல் உம்மால் பாகம் 7 பக்கம் 284 ஹதீது எண் 5790


​​

♣ தராவீஹ் தொழுகை பற்றி இமாம்களின் கருத்துக்கள்

அபு யூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தராவீஹ்வைப் பற்றிக் கேட்டகின்றார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்ததைக் குறித்தும் வினவுகின்றார்கள். அதற்கு இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'தராவீஹ் சுன்னத் முஅக்கதா (பலம் வாய்ந்த ஸுன்னத்) ஆன தொழுகை. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புறத்திலிருந்து தன் சுய விருப்பத்தின் படி (ஜமாஅத்தாக) ஆக்கவில்லை. அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து பெற்ற ஆதாரங்களின் படி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜமாஅத்தை) சுன்னத்தாக்கினார்கள்.


​​உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மக்களை ஜமாஅத்தாக தொழச் செய்தார்கள். அந்த ஜமாஅத்தில் உதுமான், அலி, இப்னு மஸ்வூது, தல்ஹா, அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஸுபைர், முஆது, உபை மற்றும் முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் எவரும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை எதிர்க்கவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டார்கள். அதனையே அவர்கள் ஏவினார்கள்.'


​​நூல்கள்: பதாவா ஸுபுக்கி பாகம் 1 பக்கம் 166, இஃலா உஸ்ஸுனன் பாகம் 7 பக்கம் 70

ஆனால் இமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கைப் பற்றி இங்கு குறிப்பிடப்பவில்லை. ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 20 ரக்அத் தராவீஹ் தொழுகை தொழ ஏவியது மற்றைய ஹதீதுகளிலிருந்து தெரியவருகிறது. எனவே அபூஹனீபா அவர்களின் மத்ஹப் பிரகாரமும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை 20 ரக்அத்துகள்தான் என்று தெளிவாகிறது.

♦ இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக  ரிவாயத்து செய்யப்பட்டுள்ளது 'தராவீஹ் தொழுகை 20 ரக்அத்துகள்' என ஏனெனில்  அவ்வாறே மக்காவிலுள்ளவர்களும் 20 ரக்அத்துகள் தொழுகின்றனர், 3 ரக்அத் வித்ரும் தொழுகின்றனர் என்று கூறுகின்றனர்.

நூல்: கிதாபுல் உம்முபாகம் 1, பக்கம் 142.

♦ மேலும் பார்க்க,,, நூல்கள்

ஸுனனுல் பைஹகி: பாகம் 2, பக்கம் 492,

பத்ஹுல் பாரி:- பாகம் 4, பக்கம் 298,

உம்ததல் காரி:- பாகம்11, பக்கம் 126.127,

கஸ்தலானி:- பாகம் 3. பக்கம் 424,

ஷர்ஹுல் முஹத்தப்:- பாகம் 4. பக்கம் 32,33,

பத்ஹுல் அஸீஸ் ஷர்ஹுல் வஜீஸ் : பாகம் 4. பக்கம் 264,

ஜாமிஉத் திர்மிதி: பாகம் 1. பக்கம் 170 பாடம் 80 ஹதிஸ் இலக்கம் 806,

துஹ்புல் முஹ்தாஜ் : பாகம் 1. பக்கம் 349,

முக்னில் முஹ்தாஜ் : பாகம் 1. பக்கம் 273,

பத்ஹுல் முஈன் : பாகம் 1. பக்கம் 265,

இஆனதுத்தாலிபீன்: பாகம் 1. பக்கம் 265,

ஷர்ஹுல் மஹல்லி: பாகம் 1. பக்கம் 217,

தகாஇருள் இஹ்வான்: பக்கம் 51.

ஆகவே தராவீஹ் தொழுகை 20 ரக்அத்களாகும் என்பதற்கு ஆதாரமாக இன்னும் பல கிரந்தங்கள் இருக்கின்ரன. உண்மை விசுவாசிகளுக்கு ஒரு ஆதாரம் இருந்தாலும் போதும் என்ற காரணத்தால் அவைகளை இங்கு குரிப்பிடவில்லை எனும் விடயத்தையும் இங்கு கூரிக்கொள்கிரேன், முக்கிய குறிப்பு இங்கு மேற்கோள்காட்டப்பட்டுள்ள ஆதார கிரந்தங்களின் பதிப்புகள் பலதாக இருக்கலாம். ஆகையால் மேற்குறிப்பிடப்பட்ட கிரந்தங்களை பார்ப்பவர்கள் தராவீஹ், நபில் தொழுகை போன்ற பாடங்களை தேடிப்பார்க்கவும்.


​​

♣ தராவீஹ் தொழுகை எப்போது தொழ வேண்டும்?

ரமழான் மாதம் முப்பது நாட்களும் இஷாவின் பிந்தின ஸுன்னத்துத் தொழுகைக்குப் பிறகு இத்தொழுகையைத் தொழவேண்டும். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து வைகறைப் பொழுது வரை இத்தொழுகையின் நேரமாகும்.


​​

♣ எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?

இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழவேண்டும்.ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்."


​​அறிவிப்பவர் - ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூற்கள்: பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104

ஹாபிள்களை நியமித்து ஜமாஅத்தாகத் தொழுவது மிகவும் சிறந்தது. ஒரு நாளைக்கு ஒன்னே கால் ஜுஸ்வு குர்ஆன் ஓதி 27ம் பிறையில் கத்தம் செய்துவரும் பழக்கம் எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது. ஹாபிள்கள் இல்லாத ஊர்களில் சிறிய சூராக்களையும் ஓதி தொழுது கொள்ளலாம். ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுது கொள்ள வசதி இல்லாதவர்கள் தனிமையிலும் தொழுது கொள்ளலாம்.


​​

♣ எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?

இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தராவீஹ் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி மஃமூமாக அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும். தனிமையில் தொழுதால் “மஃமூம்” என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும். இத்தொழுகையை நிறைவேற்றுவது ஷாபியீ, ஹனபி இரு மத்ஹபிலும் ஸுன்னத்துதான்.


​​

♣ எப்படி தொழ வேண்டும்?

சாதாரணமாக  ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும்.  ஆனால், இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாத்துடன் இருபது ரக்அத்துகள் தொழவேண்டும். மற்ற தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.ஸலாம் கொடுத்ததும்.

♣ என்ன ஓத வேண்டும்?

ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்கு பின் ஸலாம் கொடுத்ததும் ரமலானில் ஓத வேண்டிய துஆ, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத், ஒவ்வொரு நான்கு ரக்அத்துக்கு பின்னரும் நேர்வழி பெற்ற கலிபாக்களை நினைவு கூர்தல் போன்றவை  வழமையாக ஓதப்படுகின்றன.

குறிப்பு:  தராவீஹ் தொழும் சமயம் ஸலாம் கொடுத்ததும் ஓதக்கூடிய திக்ருகள் பாடமில்லாதவர்கள் எந்த திக்ரையும் ஓதிக்கொள்ளலாம். மேலும் திக்ர் செய்யாவிட்டாலும் குற்றமில்லை. இஷா தொழும் முன் தராவீஹ் தொழலாமா? ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழையும்போது, இஷா தொழுகை முடிந்திருந்தால் முதலில் இஷாவின் பர்ளு ஸுன்னத் தொழுகைகளைத் தொழுத பிறகுதான் தராவீஹ் தொழுகையின் ஜமாஅத்தில் சேர்ந்து தொழவேண்டும். இதற்கிடையில் விட்டுப்போன தராவீஹ் ரக்அத்துகளை வித்ரு தொழுத பிறகு தொழுதுகொள்ள வேண்டும். இத்தகையவர் வித்ரு தொழுகையை ஜமாஅத்துடன் தொழவேண்டும்.

♦ இத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த ஸஹாபாக்களை மதித்து கண்ணியப்படுத்துவதும் அவர்களைப் பின்பற்றுவதும் நமது கட்டாயக் கடமையாகிறது. அவர்களை வெறுப்பவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வெறுத்தவராவார். கண்ணியமிக்க ஸஹாபாக்களில் சிறப்பு வாய்ந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி அமைத்து தந்த ரமலான் மாதத்தின் 'தராவீஹ்' எனும் தொழுகையை ஜமாஅத்துடன் 20 ரக்அத்துகள் தொழுது மேலதிகப் பலன்களை பெறுவோமாக!


​​மேலும் அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அனைத்து முஸ்லிம்களையும் ஈமானுக்கு, இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படும் தீய சக்திகளை (வஹ்ஹாபிஸ) வழிகேடர்களை விட்டும் பாதூகாத்து பரிசுத்த ஈமான் இஸ்லாத்துடன் வாழ்ந்து அந்த அடிப்படையிலேயே கலிமாவுடன் மரணித்து நிரந்தர சுவணத்திற்குடியேரி வெற்றி பெற அருள்புரிவானாக! ஆமீன்.