MAIL OF ISLAM

Knowledge & Wisdom





கூட்டு துஆ

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​(ஓரிடத்தில்) ஒரு கூட்டம் ஒன்று கூடி அவர்களில் ஒருவர் துஆ செய்ய, மற்றவர்கள் ஆமீன் கூறினால், அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதில்லை.


அறிவிப்பாளர்: ஹுபைப் இப்னு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு  

நூல்: தப்ரானி 3456, ஹாகீம்


​​♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​இமாம் 'வலழ்ழாளீன்' என்று ஓதி முடித்து 'ஆமீன்' கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். யாருடைய சொல் மலக்குகளின் கூற்றுக்கு ஒன்றுபட்டு விடுகிறதோ அவருடைய முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 762, நஸயீ 928


♦ ஸைத் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் நானும் எனது தோழர் ஒருவரும் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) மூன்று பேரும் இருந்தோம். ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களைப் பார்த்து சொன்னார்கள்.

துஆ செய்யுங்கள் என்று 'நான் முதலில் துஆ செய்தேன்' ஆமீன் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் 'எனது தோழர் அடுத்ததாக துஆ செய்தார்கள்' ஆமீன் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அடுத்ததாக அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆ செய்தார்கள்: அதற்கும் ஆமீன் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.


ஆதாரம் : ஹாகிம்

​​

♦ அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:


​​நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் எனது வீட்டிற்கு வந்தார்கள். எனது தாயார் என்னுடைய ஹாலா உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா நாங்கள் மூன்று பேரும் இருந்தோம்.


ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வந்தவுடனே தொழுகைக்கு தயாராகுங்கள் என்று கூறினார்கள். (நப்லான தொழுகை) நாங்கள் அனைவரும் மஃமூம்களாக நின்றோம்.


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமாக நின்று தொழுகை நடாத்தினார்கள். ஸலாம் கொடுத்த பிறகு எங்கள் மூன்றுபேருக்காகவும் எல்லா விடயங்களுக்காகவும் இந்த உலக நன்மை மறுமை உலக நன்மை அனைத்திற்க்கும் துஆ செய்தார்கள்.


நூல்: முஸ்லிம்

​​


♦ ஒருநாள் நானும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னொருவரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.


அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரார்த்தனை செய்வதற்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள். பிறகு அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா! என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்து போகாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.


உடனே நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்” என்று கூறினோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “இதில் தவ்சீ குலத்தை சார்ந்த வாலிபர் (அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு) உங்களை முந்திவிட்டார்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஸைத் பின் சாபித் ரழியல்லாஹு அன்ஹு ​

நூல்: ஹாகிம் 6215

​​

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​நீங்கள் நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அல்லது மய்யித்தைப் பார்க்கச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனென்றால், உங்களுடைய கூற்றுக்கு மலக்குகள் ஆமீன் கூறுகிறார்கள்.


​அறிவிப்பாளர்: உம்மு ஸல்மா ரழியல்லாஹு அன்ஹா

நூல்: முஸ்லிம் 919, அபூதாவூத் 3115, திர்மிதி 977.


​♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

​ஒரு முஸ்லிம் மறைவாக உள்ள தனது சகோதரருக்கு துஆ செய்தால் (இறைவனிடம்) அது ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒரு மலக்கு சாட்டப்படுகிறார். அந்த மலக்கு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஆமீன் என்று கூறி அதுபோன்று உனக்கும் கிடைக்கட்டும் என்கிறார்.


​அறிவிப்பாளர்: சஃப்வான் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம் 2732, அபூதாவூத் 1534.


​​

♦ ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன் கண்ணெதிரே இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால் ''ஆமீன்" - அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக பொது நலனில் தம் நலனையும் இஸ்லாம் உள்ளடக்கியுள்ளது.''ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக பிரார்த்திக்கும்போது வானவர் ''உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்'' என்று கூறாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் அபூதர்தா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் - முஸ்லிம் 5272

​​

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

பிறரது வீட்டின் உள்ளே அவரது அனுமதியின்றி பார்க்க கூடாது. அது அனுமதியின்றி அவர் வீட்டிற்குள் நுழைவது போன்றுதான், மேலும் இமாமத் செய்யும் ஒருவர் மக்களை தவிர்த்து தனக்காக மட்டும் துஆசெய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் மக்களுக்கு அவர் மோசடி செய்தவராவார். மேலும் சிறுநீரை அடக்கி கொண்டு தொழவேண்டாம்.


அறிவிப்பாளர்: ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு

நூல்: திர்மிதி 325