MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸலவாத்தின் சிறப்புகள் 


  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எவரிடமாவது என்னைப்பற்றி சொல்லப்பட்டு அவர் என் மீது ஸலவாத் ஓதவில்லையானால் அவர் கஞ்சனாவார்.


திர்மிதி - 3546, நசாயி - 9885, பைஹகி - 1566, ஹாகிம் - 2015, முஸ்னத் அஹ்மத் - 1738,

இப்னு ஹிப்பான் – 909



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எவரிடமாவது என்னைப் பற்றி கூறப்பட்டு என்மீது அவர் ஸலவாத் சொல்லவில்லையென்றால் அவர் சுவனப் பாதையை தவறவிட்டவராவார்.


தப்ரானி - 2887 , பைஹகி- 1573



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

என் மீது ஸலவாத் ஓத மறந்தவர் சுவனத்து பாதையை தவறவிட்டவராவார்.


இப்னு மாஜா - 908 , தப்ரானி - 12819 , இப்னு அபீஷைபா - 31784



  புழாலத் இப்னு உபைத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

நாங்கள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் அமர்ந்திருந்தோம். ஒருவர் வந்தார் தொழுதார். "யா அல்லாஹ்! எனக்கு பிழை பொறுத்து கிருபை செய்வாயாக! என்று துஆ செய்தார். நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், "தொழுகையாளரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர். நீர் தொழுது முடிந்தால் அமர்ந்து அல்லாஹ்வை புகழ்வதற்குரிய அமைப்பில் புகழ்ந்துரைத்த பின் என்மீது ஸலவாத்தும் சொல்லிய பின்பு துஆ செய்வீராக" இவருக்கு பின்னால் மற்றொரு மனிதர் வந்தார். அவர் தொழுது முடித்த பின்பு அல்லாஹ்வை புகழ்ந்து, ஸலவாத்தும் ஓதினார். அப்போது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். "தொழுகையாளரே! நீர் துஆ செய்வீராக! உமது துஆவுக்கு பதில் (பலன்) வழங்கப்படுவீர்!"


அபூதாவூத் - 1481 , திர்மிதி - 3477 , இப்னு ஹுஸைமா - 710 , இப்னு ஹிப்பான் – 1960



  இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும், அன்னவர்களுடன் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரும் அமர்ந்திருந்தனர். நான் தொழுது முடித்து உட்கார்ந்து கொண்டேன். அல்லாஹ்வைப் புகழும் வார்த்தைகளையும் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீது ஸலவாத்தும் ஓதிய பின்பு எனக்காக துஆ செய்தேன். (இதனை செவியேற்ற) நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: "நீர் துஆ செய்வீராக, உமது துஆவுக்கு பதில் (பலன்) வழங்கப்படுவீர்."


திர்மிதி – 593



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை எல்லா துஆக்களுக்கும் வானத்திற்கும் இடையில் திரை இருக்கும். ஸலவாத் ஓதப்பட்டால் அந்த திரை கிழிந்துவிடும். அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படும். ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படமாட்டாது.


பைஹகி – 1576



  உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

(யாதொரு) துஆவும் வானுக்கும், பூமிக்கும் இடையில் தடுத்து வைக்கப்படும். உங்களது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது நீங்கள் ஸலவாத் ஓதும் வரை அங்கிருந்து அது (இறைசமூகம்) சென்றடையாது.


திர்மிதி - 486



  பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்:

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது ஸலவாத் ஓதிய பின்பு ரப்பே! என் பாவங்களை பொறுத்தருள்வாயாக! உனது ரஹ்மத்துடைய வாயில்களை எனக்கு திறந்தருள்வாயாக என்ற துஆவினை ஓதுவார்கள். மேலும் பள்ளியிலிருந்து வெளியே வரும்போது ஸலவாத் ஓதியபின் ரப்பே! என் பிழைகளைப் பொருத்தருள்வாயாக! உனது சிறப்பின் வாயில்களை எனக்குத் திறந்தருள்வாயாக என்னும் துஆவினை ஓதுவார்கள்.


திர்மிதி - 314 , இப்னு மாஜா - 771 , பைஹகி - 67 , இப்னு அபிஷைபா - 29755 ,

முஸ்னத் அஹமத் - 25878 , 25887



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திக்ரும், என்மீது ஸலவாத்தும் ஓதாத எல்லா சபைகளும் மறுமையில் நன்மைகளை இழந்து கைசேதப்படுவதாகவே அமையும். அவர்கள் சுவனத்திற்கு சென்றாலும் சரியே.


நஸாயீ - 10242 , 10243 இப்னு ஹிப்பான் - 591 , பைஹகி - 542



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திக்ரும், என்மீது ஸலவாத்தும் ஓதாத எல்லா சபைகளும் அவர்களுக்கு நஷ்டமாகவே அமையும். அல்லாஹ் விரும்பினால் அவர்களைத் தண்டிப்பான் அல்லது மன்னிப்பான்.


திர்மிதி - 3380 , அஹ்மது - 9907



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

உங்கள் நாட்களிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆதம் அலைஹிஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதும், மரணித்ததும், மேலும் சூர் ஊதப்படுவதும், பூமியில் வாழும் மக்களெல்லாம் மரணித்து விடுவதும் வெள்ளிக்கிழமையில் தான். ஆகவே அந்நாளில் என்மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஸஹாபாக்கள் கேட்டனர், "யா ரசூலுல்லாஹ்! ஸலவாத் உங்கள் மீது எவ்வாறு எடுத்துக்காட்டப்படும்? தாங்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுவீர்களே? அதற்கு கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், நபிமார்களின் உடலை மண் (தின்பதி)னை விட்டு அல்லாஹ் ஹராம் ஆக்கிவிட்டான்.


அபூதாவுத் - 1047 , நசாயி - 1666 , இப்னு ஹிப்பான் - 910 , ஹாகிம் - 1029



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் மீது அதிகமாக ஸலவாத் ஓதிவாருங்கள். என் மீது என் உம்மத்தார் ஓதும் ஸலவாத்துக்கள் வெள்ளிக்கிழமை எனக்கு நேரடியாக அஞ்சல் செய்யப்படுகிறது.


அபூஉமாமா ரலியல்லாஹு அன்ஹு

பைஹகி - 3030 , ஹாகிம்



  உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் குத்பா உரையாற்றும் போது கூறுவார்கள். ஹஜ்ஜு செய்வதற்காக ஒருவர் வந்தால் அவர் பைத்துல்லாஹ்வை ஏழுவிடுத்தம் தவாப் செய்யட்டும். பின்பு மகாமு இப்ராஹிமில் நின்று இரண்டு ரகஅத் தொழுது கொள்ளட்டும். பின்பு ஸஈயை (ஸபாவிலிருந்து) தொடங்கும்போது - பைத்துல்லாஹ்வை முன்நோக்கி ஏழு தக்பீர்களைக் கூறட்டும். ஒவ்வொரு தக்பீருக்குப் பின்னாலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து (ஹம்து, தனா) ஓதி, நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் ஓதிய பின் அவரவருக்குத் தேவையான துஆக்களை கேட்கட்டும். இதே போன்று மர்வாவிலும் செய்து கொள்ளட்டும்.


இப்னு அபீஷைபா - 29629 , பைஹகி - 9343



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

என் மீது ஒருவர் ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான்.


முஸ்லிம் - 408 , அஹ்மத் - 8637 , நசாயி - 1219 , தாரமி – 2670



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்துகளில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் என்மீது ஒரு ஸலவாத் ஓதினால் அவர் மீது அல்லாஹ் பத்து ஸலவாத் ஓதுகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான், பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்து தீமைகளை அழிக்கிறான்.


நசாயி - 65 , பைஹகி - 156 , தப்ரானி - 195 ,196 , பஸ்ஸார்



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

என்மீது அதிகம் ஸலவாத் ஓதுபவர் மறுமை நாளில் எனது நெருக்கத்திற்குரியவர்.


திர்மிதி - 484 , இப்னு ஹிப்பான்


  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

என்மீது ஸலவாத் ஓதுங்கள். ஏனெனில் என்மீது ஸலவாத் ஓதுவது உங்களுக்கு ஸகாத் ஆகும்.


அஹ்மத் - 7544 , இப்னு அபீஷைபா – 31776



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மலக்குகள் மண்ணுலகில் சுற்றி வருகின்றனர். எனது உம்மத்துகள் என்மீது கூறும் ஸலவாத் ஸலாமை என்னிடம் கூறுகின்றனர்.


முஸ்னத் அஹ்மத் - 4308 , நசாயி - 1205 , ஹாகிம் - 3576 , இப்னு ஹிப்பான் - 914