MAIL OF ISLAM

Knowledge & Wisdom




வலிமார்கள் என்பவர்கள் யார்?

அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.


அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும். நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள்.


என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.



வலிமார்களின் அந்தஸ்து

உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கள்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் உண்மையான இஸ்லாமிய கொள்கையாகும்.


இந்த அவ்லியாக்களைப்பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: "அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை" என்று கூறுகிறான். அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.


இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்:


"எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்."

(ஸஹீஹுல் புகாரி)



கராமத் என்றால் என்ன?

அல்லாஹுதஆலா வலிமார்களுக்கு பல அந்தஸ்துகளை வழங்கி சிறப்பாக்கி வைத்திருக்கிறான். உதாரணமாக, கராமத்துக்களை அதாவது பல அற்புத சக்திகளை வழங்கி அதன் மூலம் அல்லாஹ் அவர்களைக்கொண்டு பல மக்களை சீர்த்திருத்தியும், வழித்தவறியவர்களை நேரான வழியில் கொண்டுவரவும் செய்துள்ளான்.


இதை அல்லாஹுதஆலா சில சம்பவங்களின் மூலமாக எமக்கு சொல்லிக்காட்டுகிறான்.


பத்ர் யுத்தத்தில் எதிரிகளை ஸஹாபாக்கள் கொன்றபோது, அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் கூறினான்: "நீங்கள் எதிரிகளை கொல்லவில்லை, அல்லாஹுத்தஆலாவே கொன்றான்" என்பதாக. இந்த வசனத்திற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ் சொல்கிறானே நான் ஒருவரை நேசிக்கும்போது அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன் என்று. இதுதான் இதற்கு அர்த்தமாகும்.


எனவே அல்லாஹ் தனக்கு சொந்தமான சில பதவிகளை அவ்லியாக்களுக்கு வழங்கி, அவர்களை இந்த உலக மக்களுக்கு தன் பிரதிநிதியாக அதாவது கலீஃபாவாக ஆக்கி வைத்திருக்கிறான். எப்படி எங்கள் இனிய தூதர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உலகத்துக்கே ரஹ்மத்துலில் ஆலமீனாக இருக்கிறார்களோ அப்படியே அவ்லியாக்களை அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த உலக மக்களுக்கு கிருஃபையுள்ளவர்களாக ஆக்கிவைத்துள்ளான்.



வலிமார்களை பின்பற்றலாமா?

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் ஸூரதுன்னிஸா 59ம் வசனத்தில் கூறும்போது, " மூஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் அவனது ரஸூலுக்கும் வழிப்படுங்கள். மேலும் உங்களில் தீனை பரப்பக்கூடிய உலமாக்களுக்கும், அவ்லியாக்களுக்கும் வழிப்படுங்கள்." என்று கூறியுள்ளான்.


(ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான், தப்ஸீர் கபீர்)


ஆகவே அல்லாஹ் அந்தக்காலத்தில் நபிமார்களைக்கொண்டு நடத்தியதை இன்று அவ்லியாக்களைக்கொண்டு நடத்துகிறான். அவர்களாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது.


மேலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். "எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக்கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் தபரானியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகத்தில் அவ்லியாக்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.



வலிமார்களின் படித்தரங்கள்

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகத்தில் அவ்லியாக்கள் 440 பேர் இருப்பார்கள். அதில் நுஜபாக்கள் 300 பேர், நுகபாக்கள் 70 பேர், அப்தால்கள் 40 பேர், அகியார்கள் 10 பேர், உறபாக்கள் 7 பேர், அன்வார்கள் 5 பேர், அவ்தாத்கள் 4 பேர், முக்தார்கள் 3 பேர், குதுபு ஒருவர். இவர்களில் குதுபே அனைவருக்கும் தலைவராவார். இவரை கௌஸு என்றும் சொல்வார்கள்.


இப்படி குதுபுகளாக ஒவ்வொரு காலத்திலும் இருந்தவர்கள்தான் காதிரியா தரீக்காவை உருவாக்கிய குத்புல் அக்தாப் கௌஸு அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள், ரிஃபாயி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், ஷாதுலி தரீக்காவை உருவாக்கிய இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், சிஷ்தி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் அவ்லியா அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மற்றும் நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஆவார்கள்.


இதேபோல் உலகத்தில் பல குதுபுமார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கியாமத்து நாள் வரை வாழ்வார்கள். படைப்புகள் மீது அவர்கள் ஆட்சி செய்யக்கூடியவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு "கௌஸு" என்றும் பெயர். இவர்களுக்காகவே அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். உலக மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும், குதுபுக்கு கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும் வைத்தால் குதுபுவின் தட்டே பாரமாக இருக்கும். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான். அதுபோல் அவ்லியாக்களுக்கு "இல்ஹாம்" என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான்.



வலிமார்களின் சிறப்புகள்

அவ்லியாக்கள் நபிமார்களுடைய வாரிசுகளாகும், பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இதை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது, "அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள்" என்று கூறினார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, "என்னுடைய உம்மத்துக்களிலுள்ள அறிஞர்கள், பனீஇஸ்ராயீல்களிலுள்ள நபிமார்களை போன்றவர்களாவார்கள்" என்று கூறினார்கள்.


அவ்லியாக்கள் உலக மக்களின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் அறிவார்கள் என்று தாஜுல் அவ்லியா, குதுபுல் அக்தாப் ஸைய்யதுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்.


வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள் மிகவும் சிறப்புமிக்கது. இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறும்போது, "அவர்கள் இரவு வேளைகளில் சிறிது நேரமே தூங்குவார்கள். அதிகமான நேரம் இபாதத்திலே ஈடுபடுவார்கள். ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுவார்கள். இவர்களே வலிமார்கள்" என்று கூறுகிறான்.


அவர்களின் தொழுகைக்கும் எங்களது தொழுகைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நாங்கள் தொழுகையில் நின்றால் கிப்லாவை நோக்கியே நிற்போம். ஆனால் வலிமார்களோ தொழுகையில் நின்றுவிட்டால் அல்லாஹ்வை நோக்கியே நிற்பார்கள். அவர்கள் தொழுகையில் தங்களது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் இறைவனின் பக்கம் நோக்கியே நிற்பார்கள். இத்தகைய பக்குவத்தை அடைந்தவர்களே வலிமார்கள் என அழைக்கிறோம்.


அதுமட்டுமல்ல, நாமும் நோன்பு நோற்கிறோம், வலிமார்களும் நோன்பு நோற்கிறார்கள். எங்களது நோன்பிற்கும் அவர்களது நோன்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாம் நோன்பு நோற்றால் உண்ணாமலும், குடிக்காமலும்தான் இருக்கிறோம். ஆனால் வலிமார்கள் நோற்கும் நோன்பு அப்படிப்பட்டதல்ல. அவர்கள் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதோடு மட்டுமல்ல, உடல் உறுப்புகளையும் நோன்பு நோற்க வைப்பார்கள். எப்படியென்றால் பார்க்க கூடாததை பார்க்காமல் கண்களை தடுத்தார்கள். கேட்க கூடாததை கேட்காமல் காதுகளை தடுத்தார்கள். பேச கூடாததை பேசாமல் நாவை தடுத்தார்கள். இதைப்போன்று முழு உடலையும் தீமையை விட்டும் தடுத்தார்கள். இவர்களே வலிமார்கள்.


அல்லாஹ் அஸ்ஸவஜல் அல் குர்ஆனில் கூறும்போது, " அல்லாஹ்வின் இறைநேசர்கள் எப்போதும் திக்ரிலே அதாவது அல்லாஹ்வின் தியானத்திலே இருப்பார்கள்." எப்படியென்றால் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தாலும், உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும், தூங்கினாலும் அல்லாஹ்வின் திக்ரிலே நிலைத்து நிற்பார்கள். இறை தியானத்திலே மூழ்கியிருப்பார்கள். அல்லாஹ் மேலும் கூறும்போது, "நீங்கள் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும் நல்லடியார்களுடன் நட்புக்கொள்ளுங்கள்" என்று எம்மைப் பார்த்து கூறுகிறான்.


"அல்லாஹ்வுடைய அவ்லியாக்களை யார் முஹப்பத் வைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை முஹப்பத் வைக்கிறார்கள். எவர்கள் அல்லாஹ்வை நேசிக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். இப்படித்தான் ஸாலிஹீன்களும் அவ்லியாக்களை நேசித்து அவர்களும் அவ்லியாக்கள் ஆனார்கள்" என்று குத்பு ஷஃறானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் "தபகாத்துல் குப்ரா" என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.


இந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் வலிமார்களை நேசிப்பவர்களைப் பார்த்து, இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் "ஹுப்பு பாட்டி" என்றும், அவர்களின் துஆ பரக்கத்தை பெற அவர்களின் கப்ரு ஷரீஃபுக்கு செல்பவர்களை பார்த்து "கப்ரு வணங்கி " என்றும் கூறி கேலி செய்து தப்புத் தவறாக பேசி பெரும் பாவத்தை செய்கிறார்கள்.


அல்லாஹ் கூறியதாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:


"எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்"

(ஸஹீஹுல் புகாரி)


இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்திருப்பதால் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வலிமார்களை தவறாக பேசினால் பெரும் பாவத்தை சம்பாதிக்கவேண்டிவரும். அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும்.

அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்தாட்டுவானாக..

வலிமார்கள் வரலாறு


முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

அஹ்மத் கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு

காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு

ஷா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு

அபுல்ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு

ராபியா பஸரி ரலியல்லாஹு அன்ஹா

நாகூர் ஷாஹுல் ஹமீத் ரலியல்லாஹு அன்ஹு

உவைஸூல் கரனீ ரலியல்லாஹு அன்ஹு

ஹஸன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு

அபூயஸீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு

இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரலியல்லாஹு அன்ஹு

அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரலியல்லாஹு அன்ஹு

ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு

ஸகீக் பல்கி ரலியல்லாஹு அன்ஹு

சுப்யான் அத்தௌரீ ரலியல்லாஹு அன்ஹு

மஹ்ரூபுள் கா்கி ரலியல்லாஹு அன்ஹு

துன்னூன் மிஸ்ரி ரலியல்லாஹு அன்ஹு

தாவூத் தாயீ ரலியல்லாஹு அன்ஹு

பிஷ்ர் இப்னு ஹாரீத் ரலியல்லாஹு அன்ஹு

இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு

இமாம் கஸ்ஸாலீ ரலியல்லாஹு அன்ஹு

இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு

இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு

மாலிக் இப்னு தீனார் ரலியல்லாஹு அன்ஹு

மௌலானா ரூமி ரலியல்லாஹு அன்ஹு