MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இதய நோய்க்கு நிவாரணம்


மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர்.


அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.


ஆம். எமக்கு தெரியும் என்று கூறிய அவர், என்னிடமிருந்து பத்து பொருட்களை பெற்றுக் கொள்வீராக! முதலில் ஏழ்மை எனும் மரத்தின் வேரையும், பணிவு எனும் மரத்தின் வேரையும் சேர்த்து அத்துடன் பச்சாதாபம் என்னும் கடுக்காயை கலந்து பின்னர் அவற்றை இறைப் பொருத்தம் எனும் உரலில் இட்டு போதுமாக்கிக் கொள்ளுதல் எனும் உலக்கையால் அவற்றை இடித்துப் பொடியாக்கி கொள்வாயாக!


பிறகு இறைபக்தி எனும் சட்டியிலிட்டு நாணம் எனும் நீரை அதில் ஊற்றி இறைநேசம் எனும் நெருப்பின் மூலம் அதனை சூடேற்றி கொதிக்க வைப்பாயாக!


பின்னர் அதனை நன்றியெனும் கோப்பையில் ஊற்றி நல்லாதரவு எனும் விசிறியினால் அதனை வீசி ஆற வைத்து புகழ் எனும் கரண்டியினால் எடுத்து அதனை பருகிவிடுவாயாக!


இவ்வாறு நீ செய்து வந்தால் ஈருலகை சேர்ந்த எல்லா வித நோய்களும் துன்பங்களும் நீங்கப் பெற்று நல்ல நிவாரணம் கிடைத்திடும் என பதிலளித்தார்.


இவ்வாறு

الفقر والتواضع والتوبة والتقوى والرضا والحياء والمحبة والشكر والرجاء والحمد


ஆகியவற்றைக் கடைபிடித்து அமல் செய்வதின் மூலம் பாவமென்ற நோய் நீங்கப் பெற்று சுகம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை