MAIL OF ISLAM

Knowledge & Wisdom



(தாஜுல் ஸலவாத் என்று ஆன்றோர்களால் சிறப்பித்து ஓதப்பட்டு வரும் ஸலவாத்துக்களின் கிரீடமாய் விளங்கும் சிறப்பான ஸலவாத்தின் மொழி ஆக்கமாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது)

விதி மாறும்

அல்லாஹ் ! எங்கள் அருளாளா !

​அருமைத் தலைவர் நபிமீது

​நல்லார் ஓதும் சலவாத்தை

​நாளும் பொழிந்தே அருளாயோ ?


​​எங்கள் நபிகள் நாயகம்தான்

​எழில் மெய்ஞான மணிமகுடம் !

​திங்கள் நபிகள் கைகளிலே

​திகழும் கொடியே புகழாகும் !

​வானப் பறவை புராக்கினையும்

​வசமாய் ஏற்றுக் கொண்டவராம் !

​வானம் ஏறி மி- ராஜில்

​வள்ளல் உன்னைக் கண்டவராம் !

​நோய்கள்சிரமம் நொம்பலங்கள்

​நொடியில் தீர்க்கும் மருந்தவராம் !

​ஆய்வில் அவரின் திருநாமம்

​அனைத்து வேதங் களிலுண்டாம் !

​தலைவிதி எழுதிய பட்டோலை

​தன்னிலும் அவர்கள் பெயருண்டாம் !

​தலைவா ! உந்தன் கைஎழுதும்


சிந்தாமல் அருள்புரிவாய்


ஒப்புமை இல்லாத ஓரிறை யே!யெனது

உள்ளத்தில் வந் தமர்வாய் !


உப்புநீர்க் கடலிந்த உலகத்தில் மீனாக

உருவாக எனக் கருள்வாய் !


தப்பிநான் சாத்தானின் சதிவலை வீழாமல்

தயவுடன் எனக் கருள்வாய் !


அப்பிடும் இருளழுக் கைவெளுத் துளத்தினில்

அருளொளி விளக்கருள்வாய் !


மாசிலா எண்ணமும் மருவிலாச் செயலுமென்

மனத்தினில் தந்தருள்வாய் !


தூசிஇவ் வுலகமென் றெண்ணிடும் பக்குவம்

துய்யனே எனக்கருள்வாய் !


ஆசிகள் தந்தெனை ஆதரித் திடும்நபி

ஆதர வெனக் கருள்வாய் !


பாலையில் விதைத்திடும் பாவிநான் என்வயல்

பாசனத் திற்கருள்வாய் !


ஆலையில் கரும்புநான் அகப்படும் வேளையில்

ஆதரித் தேயருள்வாய் !


சிறையென இம்மையை நிறைவுடன் பழகிடும்

சிந்தையை எனக்கருள்வாய் !


விரை தரும் சந்தனக் கட்டையாய் வாழ்வினை

விரும்பிடக் கருள்புரிவாய் !


மூச்செனும் கயிற்றினில் மூலவ னேயுனை

மணியெனக் கோர்த் தருள்வாய் !


பேச்செலாம் உன்புகழ் பேசிட நாவினில்

மொழியாக வந்தருள்வாய் !


கூச்சலும் குழப்பமும் கொண்டஇவ் வுலகினில்

மௌனமாம் மொழியருள்வாய் !


மேய்ச்சலில் ஆடுநான் மேய்ப்பவன் நீ;பசும்

புல்வெளி தந்தருள்வாய் !


பாசிகள் பாவமாய் நிறைந்த இப்பூமியில்

பாதங்கள் காத்தருள்வாய் !


ஆசிகள் தந்தெனக் கருள்புரி வாய்நிதம்

அகக்கண் திறந்தருள்வாய் !


நட்பினைப் பகையினை நான்பிரித் தறிந்திட

நல்லுளம் எனக் கருள்வாய் !


மட்குடம் நீர்க்குமிழ் மனிதவாழ்க் கையிது

மகத்துவம் பெற வருள்வாய் !


தேர்வினை இலகுவாய் ஆக்கிஎன் மண்ணறைத்

திசை யொளி பெற யருள்வாய் !


நேர்வினை எதிர்வினை யாவும் உன் கைகளில்

நோவினை தீர்த் தருள்வாய் !


சத்திரம் இங்குநான் தங்கிடும் வேளையில்

சதுர்மறை உணவளிப்பாய் !


பத்திர மாகவுன் பக்கம் நான்வருகையில்

பரவிடும் சுகமளிப்பாய் !


இரத்தநா ளங்களைக் கைகளாய் ஆக்கி உன்

இரட்சிப்பை வேண்டுகின்றேன் !


சிரத்தையுன் காலடி சேர்த்துனை வேண்டினேன்

சிந்தாம லருள் புரிவாய் !


மதுவும் அதிலொன்று


மது -

மனிதனைக் குடிக்கின்ற

தற்கொலைத் திரவம் !


அரசுக்கு

அள்ளித் தருகின்ற

அமுத சுரபி !


விலையில்லா அரிசியும்

வீட்டு உபயோகப் பொருளும்

இந்த

விஷ நீர்ப் பாசனத்தில்

விளைந்த அறுவடைகள் !


மது-

இன்று

காந்தி மகானின்

கல்லறைத் தீர்த்தங்கள் !


துப்பாக்கி வெடிகுண்டு

துளைத்துவிடும் பீரங்கி

கொத்துக் குண்டுகள்

கொடிய விஷவாயு

அணுகுண்டு போர்

ஆயுதங்கள் இல்லாமல்

மனிதனை மண்ணுக்குள்

அனுப்புகின்ற

திரவ ஆயுதம் !


குடலைப் புண்ணாக்கி

உடலைச் சீரழித்து

உயிர் த்திரவம் குடிக்கின்ற

விஷத் திரவம் !


பருவ விடலைகளை

உருவ நிறம்மாற்றி

பஞ்சை பராரிகளாய்

ஆக்குகின்ற

ஆலகால விஷம் !


இந்த நெருப்பு

குடிப்பவன் தலையில்

அரசே வைக்கும்

கொள்ளிக் கட்டை !


மது உள்ளே போனால்

மதி வெளியே போகும் !


குடிப்பழக்கமுள்ள

ஆறறிவு மனிதனுக்கு

ஓரறிவு குறைகிறது

ஆயுளும் அதனோடு

கைகோர்க்கின்றது !


மது

இதைக் குடிப்பவன் மட்டுமல்ல

அவன்

வாழ்க்கையுமல்லவா

தள்ளாடுகிறது ?


மது-

இந்தக்

கண்ணாடியை அணிபவனுக்கு

தாய்க்கும் தாரத்திற்கும்

வேறுபாடு தெரிவதில்லை !


டாஸ்மாக் வெளிச்சத்தில்

இந்தக் குடிகார விட்டில்கள்

இறகுகளை மட்டுமல்ல

உயிர்களையும் இழக்கின்றன !


குடும்பக் கட்டுப்பாடு

பிரச்சாரத் தோல்வி

மதுக்கடைகளில்

மகோன்னத வெற்றி !


மதுவால்

செத்துமடியும்

குடிகாரர்களுக்காக

கண்ணீர் சிந்தாதீர்கள் !

உங்கள் கண்ணீர்த் துளிகள்

அவர்களின்

காய்ந்துபோன கல்லறைகளை

ஈரப்படுத்தி விடலாம் !

மது

வாழ்க்கையை மட்டுமல்ல

நாட்டையும் கூட

நிர்வாண மாக்கிவிடும் !


அரசுக்கு வேண்டியது

வருமானம் !

மக்களே !

உங்களுக்கு

எங்கே போனது தன்மானம் ?

தன்மானமில்லாத

அரசியல்வாதிகள்

வருமானத்திற்காக

"எதுவும்" செய்வார்கள் !

மதுவும் அதிலொன்று !

பள்ளிவாசல்


பள்ளிவாசல்-

பக்திவிவ சாயிகளின்

பாசன பூமியிது !

தொழுவது அங்கே

உழுவது ஆகும் !

கண்ணீர் சிந்தி

தண்ணீர் பாய்ச்சி

கல்பையே விதையாய்

கருத்துடன் ஊன்றி

விவசாயத்தை

இங்கேதான்

விருத்தி செய்கிறோம் !

இம்மையில் செய்யும்

விவசாயத்திற்கு

மறுமையில் தான்

மகசூல் கிடைக்கும் !


பொறுமையுடனே

விவசா யத்தை

பொறுப்புடன் செய்தால்

மறுமையில் அறுவடை

ஆதாயத்தை

அள்ளிக் கொள்ளலாம் !

பள்ளிவாசல்-

பரமனுக்குப் பக்தன்

எழுதுகின்ற

காதல் கடிதம்

இந்த

அஞ்சலகத்தில் தான்

முத்திரை இடப்படுகிறது !

நெற்றியில் விரலால்

தொட்டுப் பார்த்தால்

முத்திரை யின்முக

வரிகள் தெரியும் !


இது

பள்ளிவாசல் மட்டுமல்ல !

பயிலும் பள்ளிக்

கூடமும் இதுதான் !

தலைவனுக்குத்

தலை பணிந்தொழுகும்

தத்துவம் இங்கே

போதிக்கப் படுகிறது !

ஞானம் வேண்டுமென்றால்

போதிமரம் நோக்கிப்


போகவேண்டாம்; இந்தப்

பள்ளி வாசலே

பக்தியை ஊட்டும் !

பக்தியும் புத்தியும்

இந்தப்

பட்டறையில் தான்

கூர்தீட்டப் படுகிறது !

வெறுமை மனது

ஒருமை அடைந்து

பெருமை அடைவது

இந்தப்

பள்ளிகளில் தான் !

ஆதியின் ஜோதியை

அடையாளம் காண்பதற்கு

பள்ளி வாசல்கள்

பயன்படு கின்றன !

பள்ளிவாசல்-

மூமின்களுக்கு

ஐவேளை புகுந்து

வெளிவருகின்ற

அற்புத "ஹிரா"க் குகை !

அங்கசுத்தி எனபது

இங்கே

அகத்தூய்மை; தொழுகை

ஆன்மா குளிக்கும்

அற்புதத் தடாகம் !


குப்பா என்பது

தொப்பி யானால்

மினாராக்கள் இங்கே

அஹதென் றுயரும்

அத்தஹயாத் விரல்கள் !

பள்ளிவாசல்-

சமத்துவம் இங்கே

சமச்சீர் கல்வி !

சகோ தரத்துவம்

சங்கமிக்கும் அருட்கடல் !

பள்ளிவாசல்-

சாத்தான் எரிந்து

சாம்பல் ஆகும்

நெருப்புக் குண்டம் !

நமக்கோ-

சுவனத்துப் பூந்தென்றல்

சுற்றிவரும் பூந்தோட்டம் !

செல்வப் பெருமை

சேரும் கர்வம்

எல்லாம்

இங்கே நாம்

காலெடுத்து வைத்தவுடன்

காலொடிந்து போய்விடும் !

ஆன்ம இருட்டுச்

சுவர்களுக் கிங்கே

வெளிச்ச வெள்ளை

அடிக்கப் படுகிறது !

சமுதாயப் பந்தியில்

பரிமாறப் படுவதற்கு

சகோதரத்துவ விருந்து

இங்கேதான்

சமைக்கப் படுகிறது !

தொழுகை இங்கே

தூங்கா திருக்க

பாங்கின் ஒலிதான்

தாலாட்டா ?

பள்ளி வாசல்தான்

தொட்டிலா ?

ஆன்மக் கன்னிக்கு

ஐவேளை புத்தாடை

அணிவிக்கப் படுவது

இந்த அரங்கில்தான் !


அண்ணல் நபி காலத்தில்

அரசாங்கம் இங்கேதான்

அரங்கேற்றம் ஆனது !

இப்போதோ

அறம் பேணுமிடத்தில்

புறம் பேசப்படுகிறது !

முதுமை


முதுமை-

இள "மை" வற்றிய

எழுதுகோல் !

காலம் மென்று

துப்பிய குப்பை !

வாழ்க்கைத் தொழுகையின்

"அத்தஹயாத்" இருப்பு !

அன்று-

குடும்பத் தேர்தலின்

தலைமைத் தேர்தல்

அதிகாரி !

இன்று-

வீட்டுத் தேர்தலில்

செல்லாத ஓட்டு !

முதுமை-

இயலாமை புகுந்த

இருட்டு வீடு !

நரைதான் அங்கே

நூலாம்படையோ ?

முதுமை-

வாழ்க்கை ஒளியில்

சிறகிழந்த ஈசல் !

மழை நின்ற பிறகு

கிளை விடும் தூவானம் !

முதுமை-

ஞானம் பிறக்கும்

கருவறை !

ஆரோக்கியத்தின்

கல்லறையும் அது தான் !

இந்த-

அனுபவ மரத்தில்தான்

"பழ" மொழிகள்

கனிகின்றன !

முதுமை-

கடந்த காலப்

பழைய திரைப்படம்

முகம் காட்டும்

திரையரங்கம் !

ஆசைகளின்

சிறையரங்கமும்

இது தான் !

முதுமை-

காலன் எழுதும்

கையெழுத்து !

சுற்றித் தேய்ந்த

நிமிட முள் !

கற்களைக் கடித்துத்

துப்பிய பற்கள்

பஞ்சுமிட்டாய் கடிக்கப்

பலம் இழந்து போனது !

வாழ்க்கைப் பயணத்தில்

தீ மிதித்த கால்களுக்கு

"சில" பிள்ளைகள்

செருப்பாகிறார்கள் -

பலரோ

நெருப்பாகிறார்கள் !

துள்ளாட்டம் போட்ட

இளமை

தள்ளாட்டம் போடும்போது

காலன் அங்கே

கைகொட்டிச் சிரிக்கிறான் !

உயிரின் பல்லக்கில்

உட்கார்ந்து இருக்கின்ற

மரணம்

முதுமையைக் கண்டு

முகம் மலர்கின்றது !

ஆயுளைக் களவாட

ஆயத்த தருணம்

இதுவென்று !

தேகத்து அணையில்

தேக்கிவைத்த உயிர்நீர்

வயது மதகு

வழியாக ஓடி

இதோ-

வற்றிக் கொண்டிருக்கிறது !

உடலை வரவேற்க

மண்கடல் கைநீட்டிக்

காத்திருக் கின்றது !

முதுமை-

செப்பனிட முடியாத

சிறுவீடு ; உடற்சுவற்றில்

ஒப்பனைகள் செய்தாலும்

உதிரநீர் வற்றியதால்

காரை பெயர்ந்து

காட்டிக் கொடுத்துவிடும் !

முதுமை-

யாருமே விரும்பாத

இறைவனின் அருட்கொடை !

முதுமை-

இறுதித் தேர்வு

எழுதும் நேரம் !

வாழ்க்கையின்

மாலைப் பொழுது !

இரவு எப்போது வரும் ?

இறைவனுக்கு மட்டுமே

தெரிந்த

"பரம(ன்) இரகசியம் !

முஅத்தின்கள்


ஊருக்கு இளைத்த

உழைப்பாளி இனம்நாங்கள் !

பாருக்குள் வீசுகின்ற

பசுந்தென்ற லைநாங்கள்

பாங்கின் ஒலியால்

பரிசுத்தப் படுத்துகின்றோம் !


நாங்கள்-

எல்லாப் பள்ளிகளிலும்

எடுப்பார் கைப் பிள்ளைகள் !


கந்தலைக் கசக்கி

உடுத்தினாலும் நாங்கள்

ஆகாய நிர்வாணத்திற்கு

ஆடை நெய்கிறோம் -

ஆமாம் !

பாங்கொலிப் பட்டாடையை

குரல்வளைத் தறியில்

நெய்கின்ற நெசவாளி நாங்கள் !


பிலாலின் வாரிசுகள்

என்பதாலோ நாங்கள்

அடிமைகளாகவே

ஆக்கப்பட்டுவிட்டோம் !


வரலாற்றில் எங்களுக்கு

வரவேற்பு இருந்தாலும்

வாழ்க்கை வசதிகளில்

வறுமைபரி சானது !


"வறுமையே எனக்குப்

பெருமை"என் றோதிய

வள்ளல் நபிகளின்

வாரிசுகள் நாங்கள்தான் !


தலைவர் செயலாளர்

தாளாளர் என்று

ஏராளமானோர்

இருந்தாலும் பள்ளியின்

வரவேற்பு எங்கள்கை

வசத்தில் உள்ளது !


நாங்கள்தான் உங்களை

நாயனைத் தொழுவதற்கு

அழைத்து வரவேற்கும்

அலுவலைச் செய்கின்றோம் !


கழிவறையை நாங்கள்

கழுவினாலும் அதனை



இழிதொழிலாக எண்ணுவதில்லை !


எங்கள் கீழ்நிலையை

எடுத்துச் சொல்லிவிட்டால்

சித்திரமும் கூடச்

சிந்தும் கண்ணீரை !


பள்ளிவாசலில் எங்களுக்கு

முத்திரை இடப்பட்ட

முதல் வரிசை; என்றாலும்

பள்ளி நிர்வாகியைப்

பார்க்க நாங்கள் போனால்

பத்துப்பேர் வாசல்

படியில் நின்றாலும்

கடைசி அழைப்புத்தான்

கைகொடுக்கும் எங்களுக்கு !


போதாது சம்பளம்

என்றாலும் எங்களின்

போதாத காலத்தை

பொறுப்போடு எண்ணி

கஷ்டத்துடன்தான்

காலம் கழிக்கின்றோம் !


முஅத்தின்கள் எங்களை

"மோதினார்" என்று

இறந்தகாலச் சொல்லில்

ஏனழைக் கின்றீர்கள் ?


சில நேரம்-

குணக்கேடர் பணக்காரர்

குடிகாரர் சிலரோடு

மோதுவ தால்தான்

"மோதினார்" என்றீர்களோ ?


நாங்கள்

அல்லாஹ்வின் வீட்டு

அழைப்பொலிக் காரர்கள் !

இருந்தாலும் சிலநேரம்

பள்ளி நிர்வாகப்

பணக்காரப் புள்ளிகளின்

வீட்டு வேலைக்

காரர்களும் நாங்கள்தான் !


காற்றைப் பாங்கொலியால்

கழுவித் துடைக்கும் நாங்கள்

பள்ளி வாசலையும்

பக்குவமாய்த் துடைக்கின்றோம் !


வட்டி மூஸாக்கள்

வாரி வழங்காத

கருமிக் கிருமிகள்

கள்ளுண்ணும் பேதைகள்

ஒருநாளும் தொழுகைக்கு

ஓடிவா ராதவர்கள்

இப்படிச் சிலபேர்

இருந்தால் நிர்வாகம்

எப்படிச் சீராகும் ?

எங்கள் நிலை உயரும் ?


நேர்மை தவறாத

நிறைவான மூ மீன்கள்

பள்ளி நிர்வாகப்

புள்ளிகளாய் ஆகிவிட்டால்

எங்களின் நிலைமாறும் !

இறைவா அருள் புரிவாய் !


இறைவா ! எங்களை

ஜக்காத்து சதக்கா

வாங்கும் நிலைமாற்றி

கொடுக்கும் நிலைக்கு

கொண்டுவந்து நிறுத்து !

அப்போதும் எங்கள்பணி

ஆண்டவா !உன்வீட்டு

முற்றத்தில் தொடருதற்கு

முழுதும் உதவிசெய் !

பாங்கு


பாங்கு -

ஆன்மாவை விழிப்பூட்டும்

அற்புதத் தாலாட்டு !


கணந்தோறும் உலகத்தின்

காது திறக்கும் சாவி !


காற்றில் கரைந்து

உயிரில் நிறையும்

இந்த ஒலிதான்

மனித மனக் கதவுகளைத்

தட்டுகின்ற விரல் !


அல்லாஹ் பெரியவன்

அவனே தொழ உரியவன்

அவன்தூதர் முஹம்மதென்று

அறைந்து பாடும் சங்கீதம் !


தோல்விக் குழிகளுக்குள்

துவண்டு கிடப்பவரை

வெற்றியின் பக்கம்

விரைந்தழைக்கும் அழைப்போசை !


இந்த

ஒலிக்கயிறுதான்

மனிதர்களைத்

தடம் மாறிப் போகாமல்

வடம்போட் டிழுக்கிறது !


மரணத்தின் ஒத்திகைத்

தூளியில் கண்மூடி

உறங்கிக் கிடப்பவரை

உயித்தெழச் செய்கின்ற

விழிப்பான தாலாட்டு

விழிப்பூட்டைத் திறக்கின்ற

விந்தையான சாவி இது !


ஆகிரத்தை நோக்கி

ஆன்மா பயணப்பட

இந்த

ஆகாய அழைப்பொலிதான்

வரவேற்புக் கவிதை

வாசிக் கின்றது !


அகப் பையில்

அழுக்காகச் சேர்ந்திருக்கும்

சோம்பல் சாம்பலைச்

சுரண்டி எடுக்கின்ற

அகப்பை இந்த

அ ழைப்பொலி அல்லவா ?


அல்லாஹ்வின் திருப்பெயரை

அவன்தூதர் நபிபுகழை

கல்லாத மனிதர்களின்

காது மடல் இதழ்களில்

செந்தேனாய்ப் பாய்ச்சுகின்ற

சீரொலி இதுவன்றோ ?


பள்ளியைப் படர்வெளியைப்

படுக்கின்ற சத்திரமாய்

எண்ணி உறங்குகின்ற

இபுலீசை விரட்டுகின்ற

இடிமுழக்கம் அல்லவா

இந்தப் பாங்கொலி ?


பாங்கு-

பள்ளிவாசலில் மட்டுமல்ல

பரந்த வெளிகளிலும்

படர்ந்த பாசிகளை -

பாவத் தூசிகளை

துடைத்து எறிகின்ற

ஒட்டடைக் கோல் !


இந்த ஒலி -

உயரத்தில் எழும்பி

உலகத்தில் பரவும்போது

இடியின் நாவுகளிலும்

இஸ்லாத்தின் சுவைமணக்கும் !

மின்னல்களும்கூடத்

தங்கள்

மேனியைக் கூர்தீட்டும் !

மலைகளின் முகடுகளில்

மார்க்கத்தின் மணம்வீசும் !

மழைத் துளிகளிலோ

சுவனம் சொட்டுவிடும் !


பாங்கு-

சகோதரத்துவ

சமத்துவ

சங்கமிப்பின் பேரழைப்பு !

உடல் நதிகள்

ஒருவனின் திருவீட்டு

ஒப்பற்ற பெருங்கடலில்

சங்கமிக்க மதகுடைக்கும்

சங்க நாதம் !


இந்த

ஒலி வெள்ளத்தால்

காற்றும்கூடத் தன்னைக்

கழுவிக் கொள்கிறது !


பாங்கு -

இது

ஒலிக்கத் துவங்கிய

காலம் முதல்

உலகம் முடியும்

காலம்வரை

பூமியை மட்டுமல்ல

வானத்தையும்தன்

வசப்படுத்தி வைத்திருக்கும் !


பிலால்தான் பாங்கின்

பிதாமகன் !அவரின்

குரல் தொழிலைத் தங்களின்

குலத்தொழிலாய்க் கொண்டவர்களை

முஅத்தின் என்று நாம்

முத்திரை குத்துகிறோம் !


பாவம் ! அவர்களைநாம்

பிலாலின் வாரிசுகளாய்ப்

பிரியம் கொள்ளாமல்

பிச்சைக்காரர்களாகவே

பேத ப் படுத்துகிறோம் !

பாங்கின் ஒலியோடு

அதனால் அவரகளின்

பரிதாபக் குரலும்

சேர்ந்தே ஒலிக்கிறது !