MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நப்ஸ் (ஆத்மா) என்றால் என்ன?


எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் நப்ஸ் (ஆத்மா) என்றால் என்ன?

♣ நப்ஸ் என்றால் என்ன?

அரபியில் “நப்ஸ்” என்று குர்ஆனில் பல இடங்களில் இருக்கிறது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (ஆத்மா என்றோ அல்லது மனசு என்றோ அல்லது உயிர்) என்று தமிழில் சூபியாக்களால் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்படுகின்றது.


​​ரூஹ்ஹின் பண்பை நப்ஸ் என்று சொல்லப்படும், ரூஹ் உடலுக்குள் வந்த பிறகு அதன் மூலம் வெளிப்படும் வெளிப்பாடுகளான நப்ஸ் எனும் ஏழு வகையான இறக்கம் உள்ளது. அந்தந்த ஆத்மாக்களின் பண்புகள் எந்த படித்தரத்தில் இருக்கிறதோ அப்படித்தரத்தில் இருக்கும் போது வெளிப்படும் ஏழு குணங்கள் அல்லது ஏழு பண்புகளே நப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் ரூஹ் மனிதனின் சரீரத்தோடு சேர்ந்த போது வெளிப்படும் உணர்ச்சி அல்லது உணர்வுகளை தான் நப்ஸ் எனப்படும். இந்த ரூஹு நமது சரீரத்தை அடுத்திருக்கும் வரைக்கும் நப்ஸு என்று சொல்லப்படும். அந்த நப்ஸுதான் "நான்" என்ற உணர்வு.


​​நப்ஸு இன்ஸானிய்யா என்ற கல்புக்கு மிகுந்த மாட்சிமைகளுண்டு. அது துவக்கத்திலான ஒளியாக இருக்கும் அல்லாஹுத் தஆலாவை காணுவதற்கு இன்ஸான் அளவில் இறக்கி வைத்த சிர்ராகும்.

இன்னும் மனிதனின் ஆத்மாவுக்கு நப்ஸ் என்றும் அது சில சமயம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நல்லமல்களையும் நன்மைகளைச் செய்வதற்காக உள்ளுணர்வுகள் ஆசை வைக்கும், சில சமயம் ஷைத்தானின் பண்புகளையும் தீமைகளையும், இச்சைகளையும், ஆசைகளையும், கோபம் பொறாமை போன்றவற்றை உள்ளுணர்வுகள் ஏவினால் நப்ஸெ அம்மாரா என்று கூறப்படும்.

மேலும் நப்ஸ் என்பது ஆத்மாவாகும். நாம் கூட நப்ஸும் ரூஹ்ஹூம் ஒன்று என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் நப்ஸ் என்பதும் ரூஹ் என்பது சிறிதளவில் வேறுபடுகிறது. அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆதாரங்களோடு நப்ஸ் பற்றி சூபியாக்கள் காமிலான ஷெய்குமார்கள் எமக்கு அளித்துள்ள சிறு விளக்கத்தோடு சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும் நப்ஸும் ரூஹ்ஹூம் சிறிதளவில் வேறுபட்ட இரண்டு அம்ஷங்கள் என்பதை அறிய முடியும்.


​​

♣ நப்ஸ் எனும் ஆத்மாவில் ஏற்படும் ஏழு வகையான தன்மைகள்

1)  தீயகெடுதியைத் தூண்டுகிற ஆன்மா நப்ஸ் அம்மாரா

2)  மிருககுணம் நீங்கி இழிவாக விடயங்களை நீக்கி நற்குணம் திரும்பும் ஆன்மா நப்ஸ் லவ்வாமா

3)  நன்மையான காரியங்களை செய்யும் இல்ஹாமான விடயங்களை உதிப்பாக்கும் ஆன்மா நப்ஸ் முல்ஹிமா

4)  அமைதி நிலையில் அல்லாஹ்வின் நினைவில் இருக்கும் ஆன்மா நப்ஸ் முத்மஇன்னா.

5)  இறைச் சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருக்கும் பொருந்திக் கொல்லக்கூடிய ஆன்மா நப்ஸ் ராலிய்யா

6)  தன்னைத்தானே நிறைவு பெற்று பொருந்திக் கொல்லப்பட்ட ஆன்மா நப்ஸ் மர்லிய்யா

7)  இறைஞானம் முழுமையாக ஒளிர்ந்த பரிபூரணமடைந்த ஆன்மா நப்ஸ் காமிலா


♣ நப்ஸ் எனும் ஆத்மா சில சமயம் நன்மையையும் சில சமயம் தீன்மையையும் ஏவும்

உலகமானது நல்லது, கெட்டது எனும் இரண்டும் கலந்ததாக உள்ளபடியால், இதில் வாழும் மனிதனிலும் அவனுடைய பழக்க வழக்கங்களினால் இவ்விரண்டு தன்மைகளும் பொதிந்துள்ளன. ஒரு புறம் நம்முடைய நப்ஸ் எனும் ஆத்மா படைப்பாளனாகிய இறைவனிடம் மீண்டு அவனை அடைந்து கொள்ள நாடினாலும், மறுபுறம் நம்முடைய உலகாதய தேவைகளும் தூண்டுதல்களும் நம்மை இறைவனின் பக்கம் செல்லவிடாமல் தடுத்து உலக ஆசாபாசங்களின் பக்கம் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. இதுவே நமக்கும் இறைவனுக்கும் இடையே தடுப்புசுவராக ஆகிவிடுகின்றது.


“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்). (அல்குர்ஆன் : 12:53)​​

நஃப்ஸூம் ஷைத்தானின் ஊசாட்டங்களும் ரூஹ் எனும் பரிசுத்த ஆவியை படைத்தவனிடம் திரும்பவிடாமல் தடுத்துக் கொண்டுள்ளன. ஆனால் ஸூஃபியாக்கள், வலிமார்கள், காமிலான ஷெய்குமார்கள் இறைவனை நெருங்கவிடாமல் தடுக்கும் மேலே குறிப்பிட்ட தடுப்புகளையெல்லாம் "முஜாஹதுன் நப்ஸ்" எனும் நப்ஸூடன் மாபெரும் யுத்தம் செய்தி தகர்த்து மகத்தான வெற்றி பெற்று மனிதவர்க்கத்தை இறைவனுக்கு மிக நெருக்கமானதாக ஆக்கும் ஆற்றலை இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.


​​

♣ நப்ஸ் எனும் ஆத்மாவுக்கு அழிவு உண்டா?


​அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு தோழர் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆனின் 39:42 ஆவது வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)-ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. (நூல் : குர்துபி)

♦ ஒவ்வோர் (நப்ஸும்) ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும், அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும், எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார், இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 3:185)

♦ அல்லாஹ், நப்ஸூகளை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.  (அல்குர்ஆன் : 39:42)

ஆகவே எமது ரூஹிற்கு ஆரம்பம் ஒன்று உண்டு. ஆனால் முடிவோ அழிவோ இறப்போ கிடையாது. ஆனால் உடல், நப்ஸ் என்பது அழியக்கூடியது. அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது அவனுக்காக அவனுடைய தீனை வாழச்செய்வதற்காக எமது நப்ஸுடன் ஜிஹாத் எனும் மாபெரும் யுத்தம் செய்து பல தியாகங்களை செய்ய வேண்டும். தியாகங்கள் செய்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் எமது ரூஹிற்கு சுவனத்தைத் தருவதாக வாக்களித்து விட்டான்.

♦(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான், அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள், (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:111)

♦ (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்) (அல்குர்ஆன் : 89: 27, 28, 29, 30)

எனவே இவ்வுலகிற்கு நாம் வரும் போது எப்படி பரிசுத்தமான ரூஹ் ஆக, சாந்தி அடைந்த ஆத்மாவாக வந்தோமோ, அதேபோன்று தீமையென்றி நன்மையை அதிகம் செய்து இவ்வுலகில் இருந்து நாம் கண்ணை மூடும் போது சாந்தி அடைந்த ஆத்மாவாக திரும்பி போக அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?

​ 

தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆத்மா ஒன்று அதன் வகைகள் ஏழு​

​ 

நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள். ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதைபற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.