MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நன்றி விசுவாசம் - இறுதி நபிகள் நாயகம் ﷺ எச்சரிக்கிறார்கள்


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக: "எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அதை விட பயங்கரமான எதையும் நான் கண்டதில்லை. இன்னும் அதில் அதிகமாக பெண்களையே கண்டேன்."  மக்கள், "ஏன் (அது)  அல்லாஹ்வின் தூதரே! " என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "பெண்களின் நிராகரிப்பே காரணம்" என்றார்கள். அப்போது, "பெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்" என்று வினவப்பட்டது. அதற்கு "கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்து பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால், உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டேதேயில்லை, என்று சொல்லிவிடுவாள்" என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி - 1052


ஹாஷியா - (விளக்க உரை)


1. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மெஹராஜ் பயணத்தின் போது அவர்கள் கண்ணுற்ற சம்பவத்தினை பெண்களை எச்சரிக்கையுடன் இருப்பதற்கு நவின்றுள்ள சம்பவம்தான் இது.


2. ஒரு பெண்ணானவள் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அருட்கொடைகளில் முக்கியமானதும் முதன்மையானதும் தன்னுடைய கற்ப்பிற்கு பாதுகாப்பு செய்வதாகும்.


3. தன்னுடைய கணவன் மூலம் அன்பையும், வாழ்கைக்கு உறுதுணையும், உண்ணும் ரிஜக்கில் பாதியை கணவனின் ஹக்கிலிருந்து பெறுகிறாள். இந்த பெண்ணுடைய ஹக்கின் மூலம் கணவனுக்கும் உண்ணும் ரிஜக்கில் பாதியை பெறுகின்றார்.


4. தாய் என்ற அந்தஸ்து

தன்னுடைய கணவனின் மூலம் தாய் என்ற அந்தஸ்தை பெறுகின்றாள். உலகத்தில் தன் கணவனை தவிர வேறு எவர் ஒருவராலும் கொடுக்க முடியாததாகும். தாயின் மகத்துவத்தினை விவரிக்க வார்தைகள் இல்லை. அப்பேற்பட்ட ஒரு கண்ணியமான அந்தஸ்தை தன்னுடைய கணவனின் மூலம் பெருகின்றாள்.


5. கணவனின் உற்றார் மற்றும் உறவினர்களும் இந்த பெண்ணுக்கும் உற்றார் மற்றும் உறவினர்கள் ஆகிறார்கள்.


செல்வம், கல்வி, குழந்தைகள், இருப்பிடம், கெளரவம், சமுதாய அந்தஸ்து இவை யாவும் தன்னுடைய கணவனின் மூலம் அடைகின்றாள்.


ஒரு சிறிய விஷயதினில் மனம் வேறுப்பட்டு இல்லை ஏமாற்றம் அடையும் போது.... தான் தன்னுடைய கணவனின் மூலம் பெற்ற அனைத்தையும் மறந்து...உன்னோடு வாழ்ந்து என்ன நான் கண்டேன் என்று கூறும் போது தான்....தன்னுடைய நன்றி விசுவாசத்தினை  இழக்கின்றாள்.


உண்மையில் கணவனுக்கு செய்யும் நன்றி தன்னுடைய கணவனையும் தன்னையும் படைத்த இறைவனுக்கு செய்யும் நன்றி விசுவாசமாகும்.



அல்லாஹு ரப்புல் ஆலமின் நம்முடைய பெண்களை நன்றி செலுத்துபவர்களின் பட்டியலில் சேர்த்து வைப்பானாக.