MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இஸ்லாத்தை கற்போம் - புதிய முஸ்லிம்களுக்காக


அன்பான சகோதர, சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் வ'ரஹ்மதுல்லாஹி வ'பரகாத்துஹு

(சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் ஆசிர்வாதமும் உங்கள் மீது உண்டாகட்டும்)


இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதும் சாந்தியையும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் போதிக்கக்கூடியதும் பரிசுத்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.


இந்த பகுதி இஸ்லாத்தை ஆரம்பத்திலிருந்து முறைப்படி கற்க விரும்புவோருக்காக அமைக்கப்பட்டுள்ளது.


இஸ்லாம் என்றால் என்ன?


இஸ்லாம் என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.:


1. சாந்தி / சமாதானம்
2. கீழ்படிதல்


ஒருவர் படைத்த ஏக இறைவனை முழுமையாக ஏற்று அவனை முழுமையாக விசுவாதித்து அவனின் கட்டளைக்கு முழுமையாக கீழ்படிந்து அதன் மூலம் இவ்வுலகிலும் மரணத்திற்கு பின்னுள்ள மறுமை வாழ்விலும் வெற்றி பெற்று அதன் மூலம் சாந்தி, சமாதானம் ஆகியவற்றை எய்த பெறுதல் என்று விளக்கம் கொடுக்கலாம்.


அதாவது உள்ளம், ஆத்மா மற்றும் செயலால் எல்லாம் வல்ல இறைவனுக்கு (அல்லாஹ்வுக்கு) அடிபணிவதன் மூலம் மட்டுமே இம்மை மற்றும் மறுமை வாழ்வில் சாந்தி, சமாதானம், அமைதி ஆகியவற்றை காண முடியும் என்று இஸ்லாம் போதிக்கிறது. அல்லாஹ்வின் விருப்பத்திற்கு தானாக முன்வந்து சரணடைதல் மற்றும் அவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் என்பதாகும்.

முஸ்லீம் என்றால் யார்?


ஒருவர் படைத்த ஏக இறைவனை முழுமையாக ஏற்று அவனை முழுமையாக விசுவாதித்து அவனின் கட்டளைக்கு முழுமையாக கீழ்படிந்து அதன் மூலம் இவ்வுலகிலும் மரணத்திற்கு பின்னுள்ள மறுமை வாழ்விலும் வெற்றி பெற்று அதன் மூலம் சாந்தி, சமாதானம் ஆகியவற்றை எய்த பெறுதல் என்று விளக்கம் கொடுக்கலாம்.


அதாவது உள்ளம், ஆத்மா மற்றும் செயலால் எல்லாம் வல்ல இறைவனுக்கு (அல்லாஹ்வுக்கு) அடிபணிவதன் மூலம் மட்டுமே இம்மை மற்றும் மறுமை வாழ்வில் சாந்தி, சமாதானம், அமைதி ஆகியவற்றை காண முடியும் என்று இஸ்லாம் போதிக்கிறது. அல்லாஹ்வின் விருப்பத்திற்கு தானாக முன்வந்து சரணடைதல் மற்றும் அவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் என்பதாகும்.

இஸ்லாம் ஒரு புதிய மதமா?


இல்லை. இஸ்லாம் என்பது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு புதிய மதம் என்று சிலர் நினைக்கலாம். அது தவறு.

சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் உலகின் முதல் மனிதனாக ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை படைத்தான். மேலும் அவரை ஒரு நபியாகவும் (இறைத்தூதராகவும்) ஆக்கினான். அவருக்கு துணையாக அவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை படைத்தான். அவர்கள் இருவர் மூலம் பல குழந்தைகளை வழங்கி, அதன் மூலம் இவ்வுலகில் மனித இனத்தை தோற்றுவித்தான். முதல் இறைதூதர் ஆதம் தனது சமுதாயத்திற்கு பிரச்சாரம் செய்த அடிப்படைச் செய்தியும் நமது இறுதி இறைதூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு சொன்ன அடிப்படைச் செய்தியும் ஒன்றுதான். அதாவது எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க கூடாது, அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பன போன்றனவாகும்.
அதே செய்தியைதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட ஒவ்வொரு இறைதூதர்களும் பிரச்சாரம் செய்தனர்.

அதேவேளை, ஒவ்வொரு இறைதூதர்களுக்கும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைச்சட்டங்களும் வழிமுறைகளும் வேறுபட்டவை. ஒவ்வொரு இறைதூதரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இறைச்சட்டம் அல்லது இறை அறிவுறுத்தல்களுடன் வந்தனர். இது மற்ற சமுதாயத்திற்கோ மற்ற தலைமுறைகளுக்கோ செல்லுபடியாகவில்லை. ஆனால், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே இறைதூதர்களின் இறுதித்தூதர் ஆகவும் முத்திரையாகவும் வந்தனர். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் மூலமாக இஸ்லாம் மார்க்கத்தை நிறைவு செய்தான். நேசத்துக்குரிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட அல் குர்ஆன் இறுதி வேதம் ஆகவும், இறுதி தீர்ப்பு நாள் வரை முழு மனிதகுலத்திற்கும் நேர்வழி காட்டக்கூடியதாகவும் அனுப்பப்பட்டது..

அதன்படி, இஸ்லாம் என்பது முந்தைய இறைதூதர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தும் மற்றும் சர்வ வல்லமையுள்ள ஒரு இறைவனை நம்பும் முழுமையான மார்க்கமாகும். எனவே இது ஒரு புது மார்க்கமோ மதமோ அல்ல. மாறாக முதல் மனிதன் ஆதம் படைக்கப்பட்டதில் இருந்து பின்பற்றப்படும் வாழ்க்கை வழிமுறையாகும்.


மேலும், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல. அது ஒரு முழுமையான, சகலதும் உள்ளடங்கிய, 100 சதவீத வாழ்க்கை முறையாகும். சட்டம், அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் குடும்ப வாழ்க்கை என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் இது கற்பிக்கிறது.

இஸ்லாத்தில் இயேசு, மோசஸ் மற்றும் ஆபிரகாம்


மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, அல்லாஹ் பல இறைதூதர்களை இந்த உலகிற்கு "ஒரே கடவுள்" என்ற செய்தியுடனும், அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற செய்தியுடனும் அனுப்பினான். ஆபிரகாம், நோவா, மோசஸ், தாவீது, சாலமன் மற்றும் இயேசு போன்றவர்கள் அந்த இறைதூதர்களில் சிலர் ஆவர். இறைதூதர்கள் இறைவனின் மிக உன்னதமான படைப்புகள் ஆவர். அவர்கள் பாவங்களிலிருந்து விடுபட்டவர்கள்.


ஒவ்வொரு முஸ்லிமும் அனைத்து இறைதூதர்களையும் நம்ப வேண்டும், மதிக்க வேண்டும். முஸ்லிம்கள் ஒவ்வொரு இறைதூதர்களின் பெயரை சொல்லும்போது அல்லது எழுதும்போது பெயருக்கு பின்னால் "அலைஹிஸ்ஸலாம்" (அதாவது, அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று குறிப்பிட வேண்டும். மேலும் இறைதூதர்கள் மற்றும் இஸ்லாமிய பெரியவர்களின் பெயர்களுக்கு முன்னால் 'ஹஸ்ரத்' என்ற மரியாதைக்குரிய அரபு வார்த்தையை பயன்படுத்துவர். உதாரணம் – ஹஸ்ரத் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), ஹஸ்ரத் இயேசு (அலைஹிஸ்ஸலாம்).

இஸ்லாத்தின் அடிப்படைகள்


ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அடிப்படை காரணி இறை நம்பிக்கையாகும். ஒருவர் அல்லாஹ்வை இறைவனாகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைத்தூதராகவும் உள்ளத்தால் ஒருவர் நம்பிக்கை கொண்டு ஏற்கும் போது அவர் முஸ்லிமாக மாறுகிறார்.

அதன்படி இஸ்லாத்தின் அடிப்படை இறை நம்பிகையாகும். அதாவது
"லாயிலாஹா இல்லல்லாஹா முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்"

"வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் திருத்தூதராகும்". என்று நம்பிக்கை கொள்வதாகும்.

எனவே இதன் படி ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பி அவனை மட்டுமே வணங்க வேண்டும். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைத்தூதராக ஏற்று அன்னவர்களை பின்பற்றி நடக்க வேண்டும்.

அல்லாஹ்வையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும் தன் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் விட நேசிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்

ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்?


முஸ்லிமாக மாறுவது ஒரு எளிமையான இலகுவான செயல் முறையாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வல்ல அல்லாஹ்வை ஏக இறைவனாக நம்புவதும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை அல்லாஹ்வின் தூதராக நம்புவதும் மட்டுமே.



செயல்முறை 1 - நம்பிக்கையின் சாட்சியம் கூறுதல் (ஷஹாதா)
நீங்கள் அரபு மொழியில் பின்வரும் சாட்சியத்தை எந்த சந்தேகமும் இல்லாமல் மனப்பூர்வமாக நம்பி சொல்ல வேண்டும்.


"அஷ்ஹது அன்லா இலாஹா இல்லல்லாஹ், வ அஷ்அது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூல் அல்லாஹ்"
பொருள் - அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நான் சாட்சியமளிக்கிறேன். முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன்.


செயல்முறை 2 - கட்டாய குளியலை குளித்தல் மற்றும் இஸ்லாத்தை கற்றுக்கொள்ளல்
நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு அந்த வார்த்தைகளைச் சொன்னவுடன், நீங்கள் ஒரு முஸ்லிமாகிவிட்டீர்கள். எமது இணையத்தளத்தில் உள்ள சுத்தம் | வுழு சட்டங்கள் பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி இப்போது உங்களை உடலளவில் தூய்மையாக்கி கொள்ள நீங்கள் கட்டாய கடமையான குளியலை குளிக்க வேண்டும்.


பின்னர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பியுங்கள். அதை உங்கள் வாழ்க்கையில் பின்பற்ற தொடங்குங்கள். இஸ்லாத்தின் சட்டத்திட்டங்கள், அடிப்படைகள், எப்படி தொழுவது, எப்படி நோன்பு நோற்க வேண்டும், முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் எப்படி உண்டை அணிய வேண்டும், மற்றும் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றை தெரிந்து கொண்டு ஒரு உண்மையான முஸ்லிமாக வாழுங்கள். இவை அனைத்தையும் எங்கள் இணையதளத்தில் நீங்கள் படிக்கலாம்.

இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை


இஸ்லாமிய மார்க்கம் சமத்துவ தத்துவத்தை உலகிற்கு போதிக்கும் ஒரே மார்க்கமாகும். ஆண் - பெண், ஏழை - பணக்காரன், கருப்பன் - வெள்ளையன், படித்தவன் - பாமரன், அரபியர் - அரபியல்லாதோர் என எவ்விதமான பாகுப்பாடும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் ஜாதி வேற்றுமை கிடையாது. அனைவரும் சமமாகவே மதிக்கப்படுவர். யாரிடம் இறைவனை பற்றிய பயபக்தியும், நல்லொழுக்கமும் உள்ளதோ அவரே இறைவனின் பார்வையில் மனிதர்களில் சிறந்தவர் என இஸ்லாம் போதிக்கிறது.

இதனாலேயே, இறைவனை தொழும் பள்ளிவாசல்களில் அனைவரும் சமமாகவே நோக்கப்படுகின்றனர். உயர் ஜாதியை சேர்ந்தவர் மட்டும் உள்ளே செல்லலாம், கீழ் ஜாதியை சேர்ந்தவர் செல்லக்கூடாது என்ற நிலை இஸ்லாத்தில் இல்லை. அனைவரும், இறைவனை தொழும்போது அணி அணியாக பக்கத்து பக்கத்தில் தோளோடு தோள் சேர்த்து நிற்கவேண்டும். இதன்போது, ஒரு நாட்டின் அரசனும், அதே நாட்டில் குறைந்த அந்தஸ்துள்ள தொழில் செய்யக்கூடிய ஒரு தொழிலாளியும் தோளோடு தோள் சேர்த்து நிற்பர். சில நேரம், ஆண்டி முன் வரிசையில் நிற்க அரசன் பின் வரிசையில் நிற்பான். இது இஸ்லாத்தில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகளை விளங்கி கொள்ள மிக சிறந்த உதாரணங்களாகும்.

ஒருவன் அல்லது ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் தருணம், அவர் அதுவரை செய்த அத்தனை பாவங்களும், அதாவது அவர் இறை நிராகரிப்பில் இருந்த காலத்தில் அறிந்தோ அறியாமலோ செய்த எல்லா பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படுகின்றன. ஆனால், அவர் இஸ்லாத்தை ஏற்ற தருணத்தில் இருந்து அவர் செய்யக்கூடிய அனைத்து செயல்களுக்கும் அவர் இறைவனிடம் நாளை மறுமையில் கணக்கு கேட்கப்படுவார். அவர் செய்யும் நற்காரியங்களுக்கு நன்மையும், தீயகாரியங்களுக்கு தீமையும் பதிவு செய்யப்பட்டு நாளை மறுமையில் இறைவன் முன் விசாரணை செய்யப்பட்டு அவர் நன்மை அதிகம் செய்து இருந்தால் சுவர்க்கத்திற்கு செல்லுவார். ஆனால், முஸ்லிமாக வாழ்ந்து (அதாவது அல்லாஹ்வை இறைவனாக ஏற்று, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை இறைதூதராக விசுவாசித்து) ஆனால், நன்மையை விட அதிகம் பாவம் செய்து இருந்தால் தமது பாவ அளவுக்கு ஏற்ப நரக வேதனையை அனுபவித்துவிட்டு பின்னர் சுவர்க்கம் செல்வார்..