MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸெய்யதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும்  நாணமும்                     


ஒரு நாள் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மனைவியும், முஃமின்களின் அன்னையுமான ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். அவர்கள் ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் விரிப்பில் ஒருக்கணித்து சாய்ந்துப் படுத்து இருந்தார்கள். அதே சமயம் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கீழாடையும் முழங்கால் வரை சற்று மேலே ஏறி இருந்தது.


அந்தசமயம் செய்யதுனா அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இல்லத்திக்குள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எந்த நிலையில் சாய்ந்து படுத்திருந்தார்களோ அதே நிலையில் படுத்தவாறே அவர்களோடு உரையாடினார்கள். வந்த விஷயத்தை பேசிவிட்டு அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்று விட்டார்கள்.


சற்று நேரத்திற்குப் பின் செய்யதுனா உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அனுமதி கேட்டார்கள். அதே நிலையில் படுத்தவாறே அவர்களையும் உள்ளே வர அனுமதி அளித்தார்கள். சில விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். வந்த விஷயத்தை பேசி முடித்துக் கொண்டு உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் விடை பெற்று சென்று விட்டார்கள்.


அடுத்ததாக செய்யதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து உள்ளே வர அனுமதி கேட்டு நின்றார்கள். வெளியே நிற்பது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்பதை அறிந்தவுடன், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே எழுந்து அமர்ந்தார்கள். தங்கள் ஆடைகளை நன்றாக ஒழுங்குப் படுத்திக் கொண்டு, அருகில் இருந்த ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமும், " ஆடையை ஒழுங்குப்படுத்திக் கொள் " என்று கூறினார்கள்.


பின்னர் செய்யதுனா உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். அவர்களும் உள்ளே வந்து சில விஷயங்களைப் பேசிவிட்டு சென்று விட்டார்கள்.


அப்போது ஆயிஷா ஸித்திகா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், " நாயகமே! தாங்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பதற்றமுற்றதை போல், அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் பதற்றமுற நான் காணவில்லையே அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா யா ரசூலல்லாஹ்? " என்று கேட்க,


அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், " ஆயிஷாவே! நிச்சயமாக, உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிக நாணமுள்ளவர்கள். நான் இருந்த அதே நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தால் அவர்கள் நாணத்தால் வந்த அலுவலை அவர்களால் செய்து கொள்ள முடியாமல் போய் இருக்கும். மேலும் மலக்குமார்கள் நாணமுறும் ஒருவரிடம் நான் நாணமுற வேண்டாமா? " என்ற கருத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்தார்கள்.