MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பித்அத் எல்லாம் வழிகேடாகுமா?  (தொடர் - 1)


மௌலவீ  K R M.ஸஹ்லான் (றப்பானீ)  BBA-Hons


ஸுன்னத்

ஸுன்னத் என்பதற்கு ஹதீஸ் கலை மேதைகள், சட்டக்கலை வல்லுனர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் மத்தியில் பல விரிவான வரைவிலக்கணங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதாயின் ஸுன்னத் என்பது “நபி ﷺ அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் என்பனவாகும்.”



பித்அத்

பித்அத் என்பதற்கு பின்வரும் வரைவிலக்கணங்கள் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.


01.”இஸ்லாமிய ஷரீஅத்தின் எந்த அடிப்படையுமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத் ஆகும். ஷரீஅத்தின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத் அல்ல”.

(ஜாமிஉல் உலூமி வல் ஹிகம், பக்கம் 160-இப்னு றஜப் அல்ஹன்பலீ)

(பத்ஹுல் பாரீ, பாகம்5, பக்கம்156-இப்னு ஹஜர் அஸ்கலானீ)


02.ஷரீஅத்திற்கு மாற்றமான அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத் ஆகும்.

(அத்தப்யீன் பிஷரஹில் அர்பஈன் பக்கம் 221- இப்னு ஹஜர் அல்ஹைதமீ)


03.இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.

பித்அத் இருவகைப்படும்

01. புகழப்பட்ட பித்அத் - அதாவது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு அமைவானது.

02. இகழப்பட்ட பித்அத் - அதாவது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது.


அல்குர்ஆனுக்கு அல்லது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு அல்லது இஜ்மாஉவிற்கு மாற்றமாக புதிதாக உருவாக்கப்பட்டது வழிகெட்ட பித்அத் ஆகும். மேற்கூறப்பட்டவைகளுக்கு மாற்றமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது புகழப்பட்டதாகும்.

(பத்ஹுல் பாரீ,பாகம்13,பக்கம் 253-இப்னு ஹஜர் அஸ்கலானீ)


மேற்குறிப்பிடப்பட்ட வரைவிலக்கணங்களின் அடிப்டையிலும் பித்அத்தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களின் விளக்கங்களின் அடிப்டையிலும் நோக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் பித்அத் என்று பெயர் பெற்றாலும் ஷரீஅத்தின் அடிப்டைகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டவைகள் வழிகெட்ட பித்அத் அல்ல. ஷரீஅத்தின் அடிப்டைகளுக்கு மாற்றமாக உருவாக்கப்பட்டவைகள் மட்டுமே வழிகெட்ட பித்அத் ஆகும்.



பித்அத் பற்றிய ஹதீஸ்கள்

நபி ﷺ அவர்கள் பித்அத் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்:


1.  عن عائشةَ رضيَ اللهُ عنها قالت: قال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: «مَن أحدَثَ في أمرِنا هذا ما ليسَ فيهِ فهوَ رَدّ». رواهُ عبدُ اللهِ بن جَعفرٍ المَخْرَميُّ وعبدُ الواحدِ بنُ أبي عونٍ عن سعدِ بنِ إبراهيمَ.


எங்கள் மார்க்கத்தில் இல்லாததை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டதாகும்.


ஆதாரம்- புஹாரி-2641, முஸ்லிம்-4446, அஹ்மத்-25633, இப்னுமாஜஹ் 14, அபூதாவூத்-,4590,தாரகுத்னீ-4608

அறிவிப்பு:- ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)



ஹதீஸின் விபரம்

மேற்கூறப்பட்ட ஹதீதுக்கு ஹதீஸ் விரிவுரையாளர்கள் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளனர்.

♣ யார் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்குகின்றாரோ அதை கவனிக்கப்படமாட்டாது.

(பத்ஹுல் பாரீ, பாகம் 05, பக்கம் 640-இப்னு ஹஜர் அஸ்கலானீ)


♣ அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் வெளிப்டையான அல்லது மறைமுகமான ஆதாரமின்றி யார் இஸ்லாத்தில் புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டதாகும்.  (மிர்காத்-பக்கம் 155)


மேற்கூறப்பட்ட ஹதீஸில் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டவை என குறிப்பிடப்படவில்லை. மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் மறுக்கப்பட்டவை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கத்தின் அடிப்படை ஆதாரத்துடன் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் மறுக்கப்பட்டவை அல்ல என்பதும் இதிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.



2. عن جابر ابن عبد الله قال كان رسول الله صلى الله عليه وسلّم يقول في خطبته يحمد الله ويثني عليه بما هو له أهل ثم يقول: «من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، إن أصدق الحديث كتاب الله وأحسن الهدى هدى محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة، وكل ضلالة في النار الخ


யாரை அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவனை வழிகெடுக்க யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனை நேர்வழிகாட்ட யாருமில்லை. வேதங்களில் உண்மையானது இறைவேதம். வழிகாட்டல்களில் சிறந்தது நபி ﷺ அவர்களின் வழிகாட்டல்கள். விடயங்களில் தீயது புதிதாக உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகைசென்றடையும்.


இப்னு ஹுஸைமா 1784, நஸாஈ 1579, அஹ்மத்14689

அறிவிப்பு - ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு)



3. وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وأن كل بدعة ضلالة

புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்களை உங்களுக்கு எச்சரிக்கின்றேன். புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும்.


அஹ்மத்-16817, அபூதாவூத்-4607, திர்மிதி-2676, இப்னுமாஜஹ்-43, தாரமீ-95, பகவீ-102, ஹாகிம்(95-96/1), இப்னுஹிப்பான்-05, தப்றானீ(617/18).



ஹதீஸின் விபரம்

மேற்கூறப்பட்ட ஹதீதுக்கு ஹதீஸ் விரிவுரையாளர்கள் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளனர்


♣ “ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை வழிகேடாகும்”.

பத்ஹுல் பாரீ,பாகம்15,பக்கம்173-இப்னு ஹஜர் அஸ்கலானீ)



மேற்கூறப்பட்ட ஹதீஸ்களையும் அவற்றின் விரிவுரைகளையும் நோக்கும்போது பித்அத்தில் பல வகை உண்டு என்பது தெளிவாகின்றது. ஆயினும் எல்லா பித்அத்தும் வழிகேடு என்ற கருத்து ஹதீஸின் நேரடியான வசனத்தில் வந்துள்ளது. அந்த வசனத்தை எவ்வாறு விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.


பித்அத்தில் பல வகையுண்டு ஆயினும் எல்லா பித்அத்தும் வழிகேடல்ல என்ற கருத்தை நான்கு மத்ஹபுகளைச் சேர்ந்த இமாம்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.



ஹனபீ மத்ஹபின் இமாம்கள்

♣ அஷ்ஷெய்கு இப்னு ஆபிதீன் அல்ஹனபீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் ஹாஷியஹ் பாகம் 01, பக்கம் 376 ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.


பித்அத் பின்வருமாறு வகைப்படும்:​

♦ பித்அத் வாஜிபஹ் உதாரணம் - அல்குர்ஆனையும் அல்ஹதீஸயும் புரிந்துகொள்வதற்காக அறபு மொழி இலக்கணம் கற்றல்,

   வழிகெட்டவர்களுக்கு மறுப்பாக ஆதாரம் திரட்டுதல் அதை நிலைநாட்டல்.

♦ பித்அத் மன்தூபஹ் உதாரணம் – மத்றஸாக்களை உருவாக்குதல்

♦ பித்அத் மக்றூஹஹ் உதாரணம் – பள்ளிவாயலை அலங்கரித்தல்

♦ பித்அத் முபாஹஹ் உதாரணம் – இனிமையான உணவு சாப்பிடுதல், இனிமையான பானங்கள் அருந்துதல், அழகிய ஆடை அணிதல்



♣ அஷ்ஷெய்கு பத்றுத்தீன் அல் ஐனீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தமது ஸஹீஹுல் புஹாரீ விரிவுரை பாகம்11, பக்கம் 126 ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்


நபி ﷺ அவர்களின் காலத்தில் இல்லாததை புதிதாக உருவாக்குதல் பித்அத் ஆகும். பித்அத் இரு வகைப்படும். ஷரீஅத்தின் நல்ல அம்சங்களின் அடிப்டையில் அது அமையுமாயின் அது நல்ல பித்அத் ஆகும். ஷரீஅத்தின் இழிவான அம்சங்களின் அடிப்டையில் அது அமையுமாயின் அது இழிவான பித்அத் ஆகும்.



மாலிக் மத்ஹபின் இமாம்கள்

♣ அஷ்ஷெய்கு முஹம்மத் அல்ஸர்கானீ அல்மாலிகீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் முவத்தா ஷர்ஹு பாகம்01, பக்கம் 238ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

"நிஃமதில் பித்அது ஹாதிஹீ" என்று உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொன்னதன் மூலம் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை பித்அத் என்று குறிப்பிட்டுள்ளார்கள். காரணம் அது நபி ﷺ அவர்களினதும் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களினதும் காலத்தில் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நடைமுறையில் இருக்கவில்லை. பித்அத் என்ற சொல்லின் பொருள் “முன் உதாரணமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது” என்பதாகும்.

ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் பித்அத் என்பதன் பொருள் “நபி ﷺ அவர்களின் காலத்தில் இல்லாததை புதிதாக ஆரம்பிப்பதாகும்” எனினும் பித்அத் 05 வகைப்படுகின்றது


♣ அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு யஹ்யா அல்மாலிகீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் மிஃயாருல் முஃறப் பாகம் 01, பக்கம் 357, 358ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

"பொதுவாக பித்அத்தை எமது தோழர்கள் நிராகரித்தாலும். அவர்களிடத்தில் யதார்த்தமான உண்மை பித்அத் 05 வகை என்பதாகும். (பின்னர் பித்அத்தின் 05 வகைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்.)


“பித்அத்தின் விடயத்தில் உண்மை என்னவெனில் ஷரீஅத்தின் அடிப்படைகளில் அந்த பித்அத் எதற்கு பொருந்துமோ அந்த அடிப்படையுடன் அதை சேர்க்கப்படும். இந்த அடிப்படையில் “குல்லு பித்அதின் ழலாலதுன்” என்ற நபி ﷺ அவர்களின் சொல் “ஆம் மக்ஸூஸ்” எனும் “பொதுவானதை கூறி குறிப்பானதை கருதுதல்” என்ற அடிப்படையை சார்ந்ததாகும். இவ்வாறுதான் இமாம்கள் சொல்லியுள்ளனர்.



ஷாபிஈ மத்ஹபின் இமாம்கள்

♣ இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் “புதிதாக உருவாக்கப்பட்டவைகள் இரு வகைப்படும்.

01.அல்குர்ஆனுக்கு அல்லது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு அல்லது இஜ்மாஉவிற்கு மாற்றமாக புதிதாக உருவாக்கப்பட்டது வழிகெட்ட பித்அத் ஆகும்.

02.மேற் கூறப்பட்டவைகளுக்கு மாற்றமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது புகழப்பட்டதாகும்.

(பைஹகீ (பீ மனாகிபிஷ் ஷாபிஈ) பாகம் 01, பக்கம் 469)


♣ இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் சொன்னதாக ஹர்மலதுப்னு யஹ்யா அவர்கள் அறிவிக்கின்றார்கள்

பித்அத் இருவகைப்படும்:

01.புகழப்பட்ட பித்அத் அதாவது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு அமைவானது.

02.இகழப்பட்ட பித்அத் அதாவது நபி ﷺ அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது.

இதற்கு ஆதாரம் உமர் (றழி) அவர்களின் “நிஃமதில் பித்அது” “இது நல்லபித்அத்” ஆகும் என்றசொல் ஆகும்.

(ஹில்யதுல் அவ்லியா, பாகம்-09,பக்கம்-76)


♣ இமாம் அபூஹாமித் அல்கஸாலீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் இஹ்யாஉ உலூமித்தீன் பாகம் 02, பக்கம் 03ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள் .

“நபி ﷺ அவர்களின் காலத்தின் பின் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவை அனைத்தும் தடுக்கப்பட்டதல்ல.ஆனால் தரிபாடான ஸுன்னத்திற்கு மாற்றமாக ஆரம்பிக்கப்பட்டது தடுக்கப்பட்டதாகும்.


♣ அஷ்ஷெய்கு இஸ்ஸுப்னு அப்துஸ்ஸலாம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் கவாஇதுல் அஹ்காம் பாகம்-02, பக்கம் 172-174ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

பித்அத் பின்வருமாறு 05 வகைப்படும் வாஜிபஹ், முஹற்றமஹ், மன்தூபஹ், மக்றூஹஹ், முபாஹஹ்.

ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும்போது அது வாஜிபு (கடமையானது) டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்த பித்அத் வாஜிபஹ் (கடமையானது) ஆகும்.


ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அது ஹறாமானது (தடுக்கப்பட்டது)டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்த பித்அத் முஹற்றமஹ் (தடுக்கப்பட்டது) ஆகும்.


ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அது மன்தூப் (ஸுன்னத்து)டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்த பித்அத் மன்தூபஹ் (ஸுன்னத்து) ஆகும்.


ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அது மக்றூஹ் (வெறுக்கப்பட்டது)டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்த பித்அத் மக்றூஹஹ் (வெறுக்கப்பட்டது) ஆகும்.


ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அது முபாஹ் (ஆகுமானது)டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்த பித்அத் முபாஹஹ் (ஆகுமானது) ஆகும்.



♣ இதே கருத்தை இமாம் நவவீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் பாகம்-06, பக்கம்-154,155 இலும் பாகம்-16, பக்கம்-226,227 இலும் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் பத்ஹுல் பாரீ பாகம்-04, பக்கம்-298 இலும் குறிப்பிட்டுள்ளார்கள்.


♣ மேலும் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தங்களின் பத்ஹுல் பாரீ பாகம்-03, பக்கம் 53ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். “நபி ﷺ அவர்களின் காலத்தில் இல்லாதவைகள் அனைத்திற்கும் பித்அத் என்று சொல்லப்பட்டாலும் அதில் நல்லதும் உண்டு அதற்கு மாற்றமானதும் உண்டு”



ஹன்பலீ மத்ஹபின் இமாம்கள்

♣ அஷ்ஷெய்கு ஷம்ஷுத்தீன் முஹம்ம்மத் இப்னு அபில் பத்ஹ் (அல்ஹன்பலீ) அவர்கள் தங்களின் அல்முத்லிஃ அலாஅப்வாபில் முக்னிஃ பக்கம்-334ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“முன் உதாரணமின்றி புதிதாக ஆரம்பிக்கப்படது பித்அத் ஆகும். பித்அத் இரு வகைப்படும்.

01.நேர்வழியுடைய பித்அத்

02.வழிகெட்ட பித்அத்

மேலும் ஷரீஅத்தின் 05 அடிப்படைகளின் வகையில் பித்அத் 05 வகையாக நோக்கப்படும்”



மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மத்ஹபுகளைச்சேர்ந்த இமாம்களுடை கருத்துக்களின் சாரம் என்னவெனில் “பித்அத்தில் பல வகையுண்டு, நல்ல பித்அத்தும் உண்டு, கெட்ட பித்அத்தும் உண்டு. பித்அத் எல்லாம் வழிகேடல்ல. “பித்அத் எல்லாம் வழிகேடு” என்று நபி ﷺ அவர்கள் சொன்னதன் பொருள் (அல்குர்ஆனுக்கும் ஸுன்னஹ்வுக்கும் மாற்றமாக புதிதாக உருவாக்கப்பட்ட) பித்அத் எல்லாம் வழிகேடு என்பதாகும்” இவ்வாறு தான் ஸஹாபாக்களும் ஹதீஸ்கலை இமாம்களும் சட்டக்கலை இமாம்களும் இந்த ஹதீதை புரிந்துவைத்திருந்தார்கள்.



குல்லு பித்அதின் ழலாலதுன்  كل بدعة ضلالة

பித்அத் எல்லாம் வழிகேடு என்று இந்த வசனத்திற்கு நேரடிப் பொருள் கொள்ளாமல் வலிந்துரை கொண்டு பொருள் கொள்வதே சிறப்பானதாகும். ஏனெனில் வலிந்துரையின்றி நேரடிப்பொருள் கொண்டு பித்அத் எல்லாம் வழிகேடென்ற முடிவுக்கு வந்தால் நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். அதனால் பல விபரீதங்கள் உண்டாகும். விடை சொல்லமுடியாத பல கேள்விகளை எதிர்கொள்ளவும் நேரிடும். அவற்றின் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.


நபி தோழர்களும், ஹதீதுக்கலை மேதைகளான ஆறு இமாம்கள், சட்டக்கலை மேதைகளாக நான்கு இமாம்களும், தரீக்காகளை ஸ்தாபித்த ஷெய்குமர்களும், மற்றும் உலகில் தோன்றிய அறிஞர்களும், பித்அத் செய்த வழிகேடர்கள் என்று முடிவுசெய்யவேண்டி வரும். இது மேற்கண்ட வசனத்துக்கு பித்அத் எல்லாம் வழிகேடென்று நேரடிப்பொருள் கொள்வதால் ஏற்படுகின்ற தீய விளைவாகும். ஏனெனில் மேற்கொண்ட மகான்கள் அனைவரும் பித்அத் செய்தவர்களேயாவர்.


நபி ﷺ அவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகை ஜமாஅத் கூட்டடாக நடைபெறவில்லை. அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலும் அவ்வாறுதான் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே தொழுது வந்தார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்திலும் அவ்வாறுதான் இருந்தது. பின்னர் ஒருநாள் றமழான் மாத இரவு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில் காரீ என்பவருடன் மதீனா பள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கு மக்கள் தனித்தனியே தறாவீஹ் தொழுது கொண்டிருந்ததைக் கண்டு, இந்த மக்கள் அனைவரையும் ஒரே இமாம் தலைவரின் கீழ் ஒன்று சேர்த்தால் சிறப்பாயிருக்குமென்று கூறிவிட்டு தறாவீஹ் தொழுகையை உபையிப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தலைமையில் கூட்டாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜமாஅத் கூட்டாகத் தறாவீஹ் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டு 'நிஃமல்பித்அது ஹாதிஹீ இது நல்ல பித்அத்' என்று கூறினார்கள்.


ஆதாரம் – புஹாரீ-1986

அறிவிப்பு – அப்துர் றஹ்மான் இப்னு அப்தில் காரீ


ஹழ்றத் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ﷺ அவர்களின் மிக நெருங்கிய தோழர். குலபாஉர் றாஷிதீன் நல்வழி பெற்ற நான்கு கலீபாக்களிலும் ஒருவர். இவர்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் செய்யப்படாத ஒன்றை அவர்களின் மறைவின் பின் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த இச்செயல் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. நிஃமல் பித்அது ஹாதிஹீ என்று அவர்கள் சொன்ன வசனம் கொண்டு அவர்களே தான் செய்தது பித்அத் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு நிஃம என்று அவர்கள் சொன்ன சொல் கொண்டு பித்அத்தில் நல்லதும் உண்டு என்ற கருத்தையும் அவர்களே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.


பித்அத் எல்லாம் வழிகேடாகவும், பித்அத் செய்தவர்கள் வழிகேடர்களாயும் நரக வாதிகளாயுமிருந்தால் ஹழ்றத் உமர் ரழியல்லாஹு அன்ஹு யார்? அவர்கள் வழிகேடரா? நரகவாதியா? இல்லை


ஹதீதுக்கலை மேதைகளான ஆறு இமாம்களும் நபி ﷺ அவர்களின் நிறை மொழிகளைத் தொகுத்து நூல்கள் எழுதினார்கள். நபி மொழிகளை ஆராய்ந்து ஸஹீஹ், ழயீப், ஹஸன், மவ்ழுஉ என்றெல்லாம் வகுத்தார்கள். இவர்கள் செய்த இந்த வேலையும் பித்அத் ஆகும்.


சட்டக்கலை மேதைகளான நான்கு இமாம்களும் திருக்குர்ஆனையும், நபி மொழிகளையும் ஆராய்ந்து சட்டக்கலையில் நூல்கள் எழுதினார்கள். ஹலால், ஹராம், ஸுன்னத், மக்றூஹ் என்றெல்லாம் சட்டங்கள் வகுத்தார்கள். இவர்கள் செய்த இந்த வேலையும் பித்அத் ஆகும்.


மேற்கண்ட இமாம்களும், மகான்களும் செய்தவை யாவும் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. நபி மொழியில் வந்துள்ள குறித்த வசனத்துக்கு நேரடிப்பொருள் கொண்டு பித்அத் எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் மேற்கொண்ட இமாம்களும், மகான்களும் வழிகேட்டைச் செய்த வழிகேடர்களென்றும் நரகவாதிகளென்றும் கொள்ளவேண்டிவரும்.


எனவே ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். ஷரீஅத்தின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டவை வழிகேடல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.


நபி ﷺ அவர்களின் காலத்திலும் அதன் பின்னரும் ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரத்துடன் பல விடயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை பித்அத் என்று பெயர்பெற்றாலும் அவை வழிகேடல்ல. ஸஹாபாக்கள் அல்குர்ஆனை நூல் வடிவத்தில் அமைத்ததும், உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழ ஆரம்பித்து வைத்ததும் புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்கள். ஆயினும் ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரத்துடன் உருவாக்கப்பட்டதால் அவை பித்அத் என்று பெயர் பெற்றாலும் அவை வழிகேடல்ல.


(தொடரும்...)

தொடர் 2