MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பிறையை எல்லோரும் பார்க்க வேண்டுமா?
நோன்பு வைக்க உலகம் முழுவதும் ஒரே பிறையா?
நோன்பு   யாருக்கு  கடமை?
சிறுவர், சிறுமிகள் நோன்பு நோற்கலாமா?
நோயாளிகள், முடியாதவர்
-களுக்கான சட்டம் என்ன?
பயணிகள் நோன்பு வைப்பது நல்லதா?
நோன்பின் நிய்யதுக்குரிய
நேரம் எது?
இன்று  பிடிக்க, நாளை  பிடிக்க
நோன்பின்   நிய்யத்
கடமையான நோன்புகள் எவை?
நோன்பு வைக்க கூடாத நாட்கள் எவை?
லைலதுல் கத்ர் 27ம் இரவு என்பதற்கு என்ன ஆதாரம்?

நோன்பு என்றால் என்ன?

நோன்பு இஸ்லாத்தின் நான்காவது கடமை. அரபி மொழியில் நோன்பு ‘ஸவ்மு’ எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும்.


நோன்பு என்றால் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் உட்பட இன்னும் நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் ஒருவர் தன்னை தடுத்துக்கொள்வதாகும்.


இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை பர்ழ் அல்ல என்று மறுப்பவன் காபிராகி விடுவதால் நோன்பு கடமை என்பதை மறுக்கக் கூடாது. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க தவறி விட்டால் அதனை பின்னர் நிறைவேற்றுவது (கழா செய்வது) கடமை. மாதவிடாய் காரி, பிள்ளைப்பேறு தொடக்குடையவள், பிரயாணம் காரணமாக நோன்பை விட்டோர் ஆகியோரின் மீது கழா செய்வது கடமையாகும். ஆனால் பருவமடையாத சிறுவர், சிறுமியர், பைத்தியக்காரர், சுகமடைவதை எதிர்ப்பார்க்க முடியாத நிரந்தர நோயாளிகள், தள்ளாத வயதை அடைந்த முதியவர்கள் ஆகியோரின் மீது உரிய காலத்தில் நிறைவேற்றுவதோ, கழா செய்வதோ கடமையல்ல.



நோன்பைப் பற்றி அல்லாஹ் (அல் குர்ஆன்)


يَا أَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
“ஈமான் கொண்டோரே! நீங்கள் பரிசுத்தமடைவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (2:183)


شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدً۬ى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍ۬ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِ‌ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُ‌ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٍ۬ فَعِدَّةٌ۬ مِّنۡ أَيَّامٍ أُخَرَ‌ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَٮٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
“ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையை பிரித்தறியக் கூடியதாகவும் உள்ள அல் குர்ஆன் அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்தை மேற்கொண்டிருப்பவராகவோ இருப்பின் (அவர் நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. எனினும் விடுபட்ட நோன்புகளை ரமழான் அல்லாத) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை (கொடுக்க) நாடுகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை (கொடுக்க) நாடவில்லை.” (2:185)




நோன்பை பற்றி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) - (அல் ஹதீஸ்)


* பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேசவேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்தது. மேலும், எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்குகலாகும். (என்று அல்லாஹ் கூறினான்).


அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி 1894


* பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.


அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதி



நோன்பின் வகைகள்


1. கடமையான நோன்புகள் (பர்ளான நோன்புகள்)

இவை மூன்று வகைப்படும்:


(அ) ரமழான் மாத நோன்பு
ஒவ்வொரு ஆண்டிலும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியும் நன்மைகளும் பாவமன்னிப்பும் கிடைக்கிறது. இக்கடமையை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவமாகும்.


(ஆ) நேர்ச்சை நோன்புகள்
ஒரு அடியான் தன்னுடைய ஏதேனும் ஒரு தேவையை குறித்து, அத்தேவையை அல்லாஹ் நிறைவேற்றி தந்தால் இத்தனை நாட்கள் நோன்பு நோற்பேன் என்று அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்யும் நோன்புகளை இது குறிக்கும். இதன்படி குறிக்கப்பட்ட அத்தேவை நிறைவேறின், அது முதல் இந்நோன்பை நோற்பது அவ்வடியான் மீது கடமையாகும். ஆனால், அத்தேவை நிறைவேறாவிடில், அதனை நோற்பது அவ்வடியான் மீது கடமையில்லை


(இ) குற்ற பரிகார நோன்புகள்
ஒருவர் குறித்த சில பாவங்களை செய்யும்போது அதற்கான குற்றப்பரிகாரமாக இஸ்லாம் நோன்பு நோற்பதை கடமையாக்கி இருக்கிறது. அவற்றை இது குறிக்கிறது.


உதாரணம்: ஒருவர் சத்தியம் செய்து விட்டு பின்னர் அச்சத்தியத்தை முறித்தால் 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது 10 ஏழைகளுக்கு உடையளிக்க வேண்டும் அல்லது ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும்.


அதேபோல், நோன்பு காலத்தில் ஒருவர் சுயநினைவோடு உடலுறவு கொண்டால் ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்றல் வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.



2. மேலதிக நோன்புகள்


(அ) சுன்னத்தான நோன்புகள்
இவை ரமழான் மாதம் அல்லாத ஏனைய காலங்களில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களால் நோற்கப்பட்ட அல்லது நோற்குமாறு ஏவப்பட்ட நோன்புகளாகும். இவற்றை நோற்பது ஒவ்வொருவர் மீதும் கடமையில்லை. ஆனால், இவற்றை நோற்பதனால் நிறைய நன்மைகளும் அல்லாஹ்வின் அன்பும், பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் சுன்னத்தை பின்பற்றிய நன்மையையும் கிடைக்கிறது.


உதாரணம்: முஹர்ரம் மாத ஒன்பதாம் பத்தாம் நாட்களில் நோற்கும் ஆஷுராவுடைய நோன்பு.


(ஆ) நபிலான நோன்புகள்
மேற்குறிப்பிட்ட வகைகளை தவிர்த்து ஒரு அடியான் அல்லாஹ்விற்காக நோற்கும் இதர நோன்புகளாகும். நன்மையை நாடியோ அல்லது நாட்டம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியோ இந்த நோன்புகள் நோற்கப்படலாம்.



நோன்பு யார் மீது கடமை?

ஒருவர் மீது நோன்பு கடைமையாவதற்கு பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.


(1) முஸ்லிமாக இருத்தல்.

(2) பருவ வயதை அடைந்திருதல்.

(3) சித்த சுவாதீனமுள்ளவராக இருத்தல்.

(4) நோன்பு நோற்க சக்தியுடையவராக இருத்தல்.

(5) பெண்கள் மாத தீட்டு, பிரசவ தீட்டில் இருந்து பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்.

(6) தான் வசிக்கும் ஊரில் இருத்தல் (அதாவது பிரயாணத்தில் இல்லாதிருத்தல்)



நோன்பு யாருக்கு கடமை இல்லை?

(1) முஸ்லிம் அல்லாதவர்களுக்கு

(2) பருவமடையாத சிறுவர்களுக்கு

(3) சித்த சுவாதீனமற்றவர்களுக்கு

(4) நோயாளிகளுக்கு

(5) மாத தீட்டு, பிரசவ தீட்டில் உள்ள பெண்களுக்கு

(6) பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு.


இதில் (4), (5), (6) ஆகியோர் விட்ட நோன்புகளை பின்னர் களா செய்ய வேண்டும்.



நோன்பின் பர்ழுகள்?


1. நிய்யத்து வைத்தல்:

நோன்பு நோற்பவர், தாம் நோன்பு நோற்பதாக நிய்யத்து (நிர்ணயம்) செய்வது பர்ழாகும். நிய்யத்தின்றி நோன்பு நிறைவேறாது.
‘இந்த வருட ரமழான் மாதத்தின் ஃபர்லான நோன்பை நாளை நிறைவேற்ற நிய்யத்துச் செய்கிறேன் அல்லாஹுதஆலாவுக்காக’ என்று மக்ரிபிலிருந்து ஸுப்ஹு வரையிலுள்ள நேரத்தில் நிய்யத்துச் செய்வது ஸுன்னத்து. மறுநாள் முற்பகலுக்கு முன்னர் வரை நிய்யத்துச் செய்து கொள்வது கூடும். ஷாபியீ மத்ஹபின்படி நிய்யத்தின் நேரம், மக்ரிபிலிருந்து கிழக்கு வெளுக்கும் வரையிலாகும். கிழக்கு வெளுக்குமுன் நிய்யத்துச்செய்ய மறந்து விட்டோர், ஹனபீ மத்ஹபு இமாமைப் பின்பற்றி முற்பகலுக்கு முன்னர் நிய்யத்துச் செய்து கொள்ளலாம்.


2. தடுத்து கொள்ளல்:
கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக்கொள்ளல். அதாவது, உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் உட்பட எந்த காரியங்களை செய்தால் நோன்பு முறியுமோ அத்தகைய காரியங்களை விட்டும் தன்னை தடுத்து கொள்வதாகும்.



நோன்பின் ஸுன்னத்துக்கள் எவை?

1. ஸஹர் செய்வது.

2. ஸஹர் முடிய ஐம்பது ஆயத்துக்கள் ஓதுவதற்குரிய நேரம் இருக்கும்போது ஸஹர் உணவுண்டு முடிப்பது.

3. பேரீத்தம் பழம் கொண்டு ஸஹர் உணவைத் தொடங்குவது.

4. ஒன்றுமில்லையெனில் ஒரு மிடறு தண்ணீர் கொண்டாவது ஸஹர் செய்வது.

5. சந்தேகமான நேரமாயிருந்தால் ஸஹரை விட்டுவிடுவது.

6. சூரியன் அஸ்தமித்தது திட்டமானவுடன் நோன்பு திறப்பது.

7. நோன்பை பேரீத்தம்பழங் கொண்டு திறப்பது, இல்லாவிட்டால் தண்ணீரைக்கொண்டு திறப்பது.

8. மூன்று பேரீத்தம் பழங்கொண்டு திறப்பது.

9. நோன்பாளிகளைத் தன்னோடு நோன்பு திறக்கச் செய்வது.

10. நோன்பு திறக்கும் நிய்யத்துச் செய்வது (ஸஹரில் உணவு உண்பதால் இடையூறு ஏற்படுமென்றிருந்தால் ஸஹர் செய்வது ஸுன்னத்தல்ல.

11. ஸதகா நன் கொடை, உறவினர்களின் தேவையை நிறைவேற்றுவது.

12. குர்ஆன் ஓதுவது, ரமழான், பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது போன்ற நற்காரியங்களைச் செய்வது.

13. பஜ்ருக்கு முன்னதாக பெருந்தொடக்கை விட்டும் நீங்கிக் குளிப்பது.

14. பொய், புறம், தீய பேச்சுக்கள், சிற்றின்ப எண்ணங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது.



நோன்பு திறக்கும்போது (இஃப்தாரின்போது) கவனிக்க வேண்டியவை

பொழுது மறைந்ததும் தாமதிக்காமல் நோன்பு திறக்கவேண்டும்.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “நோன்பு திறப்பதை விரைவுப்படுத்தும் வரை மக்கள் நன்மையிலிருப்பர்” என்று கூறி உள்ளார்கள்.


அறிவிப்பாளர்: ஹழ்ரத் சஹ்ல் பின் ஸஃத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி 1957



நோன்பு திறந்த பிறகு கீழ்க்கண்டவாறு கூறுவது ஸுன்னத்து. (இப்தார் துஆ)

“அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அப்தர்து ஃபதகப்பல் மின்னி.”
‘இறைவா, உனக்காகவே நான் நோன்பு நோற்றேன். உன்னையே விசுவாசிக்கிறேன். உன் மீதே பொறுப்புச் சாட்டினேன். நீயளித்த உணவாலேயே நோன்பு துறந்தேன். ஆகவே என் நோன்பை அங்கீகரிப்பாயாக.’



நோன்பை முறிக்கும் காரியங்கள் எவை?

நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்வது ஹராம் என்பதை அறிந்து முரண்டாக அதனைச் செய்தால் நோன்பு முறிந்து விடும். அவை:


1. தன் துவாரங்களில் கண்ணுக்குத் தெரியும் பொருளை அது புகை போன்றதாக இருந்தாலும் சரி – நுழைய வைப்பது.

2. கன்னிப் பெண், குத்தவைத்திருக்கும் போது முன் துவாரத்தில் வெளியாகும் பகுதியினுள் விரலை நுழைய வைப்பது.

3. பின் துவாரத்தில் சுத்தம் செய்யும் பொழுது வட்ட வளைய சுருக்குக்குள் விரலைச் செலுத்துவது.

4. வாந்தி எடுப்பது.

5. உடலுறவு கொள்வது (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே)

6. எந்த முறையிலாவது விந்துவை வெளியாக்குவது.

7. ஸுன்னத்தான கழுவுதலில் கடப்புச் செய்யும் பொழுது தண்ணீர் உள்ளே செல்வது.

8. வெற்றிலை போன்ற பொருளை மெல்லுவதால் தன்மை மாறிய உமிழ் நீரை விழுங்குவது.

9. சுத்தமான உமிழ்நீரை நாவல்லாத பொருளினால் வெளியிலெடுத்து பிறகு அதனை விழுங்குவது.

10. நஜீஸான வாயைக் கழுவும் முன் உமிழ் நீரை விழுங்குவது.

11. தொண்டையை விட்டும் வெளிப்பட்டு விட்ட காறலை விழுங்குவது.

12. உடலுறவு கொள்ளும் பொழுது கிழக்கு வெளுத்து விட்டதென்பதைத் தெரிந்த பின்னும் உறுப்பை வெளிப்படுத்தாமலிருப்பது.

13. பகலில் மறதியாக உடலுறவு கொள்கிறவன் நினைவு வந்தவுடன் உறுப்பை வெளியாக்காமலிருப்பது.

14. உணவு வாயிலிருக்கும் போது ஸஹர் நேரம் முடிந்து, கிழக்கு வெளுத்து விட்டது என்று தெரிந்த பிறகும் அவ்வுணவை வாயிலிருந்து வெளியில் துப்பாமலிருப்பது.


இவை அனைத்திலும் நோன்பு முறிந்து விடும்: களாச் செய்வது வாஜிபாகும்.


சுருமாயிடுவதால் நோன்பு முறியாதென்றிருந்தாலும் அதனைச் செய்யாமல் விடுவது ஏற்றமாகும். தானாக வாந்தி எடுக்கச் செய்வது நோன்பை முறிக்கும். காதில் அல்லது வாயில் ஈ போன்றது நுழைந்த பின் அதனை வெளிப்படுத்துவதாலும் நோன்பு முறியும். இரவில் விழுங்கிய நூலின் நுனியைப் பகலில் வெளியே எடுப்பதாலும் நோன்பு முறியும். அதனை வெளியில் எடுக்காமல் விட்டு விட்டால் நோன்பு கூடிவிடும். ஆனால் அதனை வெளியில் எடுக்காமல் தொழுதால் தொழுகை கூடாது. ஏனெனில், அந்த நூலின் ஒரு நுனி வயிற்றினுள் நஜீஸைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு நுனி வெளியிளிருக்கிறது. இப்பொழுது நஜீஸைத் சுமந்து கொண்டு தொழுகிறான் என்ற நிலை ஏற்படுவதால் தொழுகை கூடாது. ஆனால், அவன் அறியாத முறையில் மற்றொருவன் அந்த நூலை இழுத்து விட்டால் நோன்பும் முறியாது. தொழுகையும் கூடும்.



நோன்பை முறிக்காத காரியங்கள் எவை?

1. நோன்பை முறிக்கும் காரியங்களை மறதியாகவோ, தெரியாமலோ, நிர்பந்திக்கப்பட்டவனாகவோ செய்வது.


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.”


அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி 1933


2. தன்னையறியாமல் தன் சக்திக்கு மீறி வாந்தி வருவது.

3. கனவின் மூலம், அல்லது ஆசை ஏற்படுவத்தின் மூலம் விந்து, தானாக வெளியாகுவது.

4. ஃபர்லான குளிப்பில் தண்ணீரில் மூழ்காதிருக்கும் நிலையில் தண்ணீர் உள்ளே செல்வது.

5. கொஞ்ச நேரம் போதையுண்டாகி தெளிவு பெறுவது.

6. சுத்தமான உமிழ் நீரைக் கூட்டி விழுங்குவது.

7. சுவையேதுமில்லாத “முஸ்தகா” என்னும் பூனைக்கண் குங்கிலியப்பிசின் (Mastic) போன்ற பொருளை வாயில் போட்டு அதனால் ஊறிய உமிழ் நீரை விழுங்குவது. இவற்றினால் நோன்பு முறியாது.



முக்கிய கவனிப்பு

1. ஏதேனுமொரு காரணத்தால் நோன்பு முறிந்துவிட்டால், ரமழானின் கண்ணியத்தைக் கருதி அன்று மீதமுள்ள நேரத்தில் நோன்பாளியாகவே இருப்பது வாஜிபு. 


2. பகலில் நோயாளி குணமடைந்தாலும், பிரயாணி தம் இடம் வந்தடைந்தாலும், மாதவிடாய், பிரசவக் கழிவு பகலில் நின்று விட்டாலும், ஒருவர் பகலில் இஸ்லாத்தை ஏற்று கலிமாச் சொல்லிவிட்டாலும் மீதமுள்ள நேரத்தில் நோன்பாளி போல் இருப்பது வாஜிபு. (இப்படிப்பட்டார் நோன்பாளி போன்றிருப்பது ஷாபியீ மத்ஹபின்படி ஸுன்னத்)


3. கிழக்கு வெளுக்கவில்லை என்று எண்ணிக்கொண்டு உணவுண்டவர் அதன் பின்னரே உணவுண்டிருப்பதைப் பிறகு அறிந்து கொண்டால் சூரியன் அஸ்தமிக்கும் முன்னர் அறியாமல் நோன்பைத் திறந்து விட்டால் – ஆக இச்சந்தர்ப்பங்களில் மீதமுள்ள நேரத்தில் ஏதும் உட்கொள்ளாதிருப்பது வாஜிபு.


4. நோன்பாளி பிரயாணி, மாதவிடாய்க்காரி, பிரசவக்கழிவு ஏற்பட்டவள் ஆகியோர் பகலில் உணவு உண்ணத் தடையில்லை. எனினும், தாம் நோன்பில்லை என்பதை வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது.



நோன்பை விடுவதை அனுமதிக்கும் கருமங்கள்

தயம்மும் ஆகுமாக்கும் நோயும், கடினமான பசியும், தாகமும், கஸ்ரு தொழுகையை ஆகுமாக்கும் பிரயாணமும் நோன்பை விடுவதை ஆகுமாக்கி வைக்கும். எனினும், இவர்கள் எல்லோரும் நோன்பை களா செய்ய வேண்டும். பிரயாணத்தில் சிரமமில்லையானால் நோன்பு வைப்பது ஏற்றமாகும்.



நோன்பை விடுவதை வாஜிபாக்கும் கருமங்கள்

தான் பிடித்திருக்கும் நோன்பினால் தனக்கு மரணம் ஏற்பட்டு விடுமென்று நினைத்தாலோ அல்லது தனது நோய், மிகுந்த துன்பத்தை உண்டுபண்ணுமென்று நினைத்தாலோ தான் பிடித்திருக்கும் நோன்பை விட்டுவிடுவது அவன்மீது வாஜிபாகும்.


இறந்து விடுவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் சங்கைக்குரிய ஒரு பிராணியைக் காப்பற்றுவதற்கு நோன்பை விட்டால்தான் முடியும் என்றிருந்தாலும், கர்ப்பமுற்றிருப்பவள் சிரமம் ஏற்படுவதை பயந்தாலும், குழந்தைக்குப் பால் கொடுப்பவள் பால் வற்றிவிடுவதை பயந்தாலும் நோன்பை விடுவதை வாஜிபாகும்.



நோன்பைக் களாச் செய்ய வேண்டிய காரணங்களிற் சில

ரமழான் மாதத்தில் எவ்விதக் காரணமுமின்றி நோன்பை விட்டாலும் அல்லது இரவில் நிய்யத்தை மறந்து விட்டாலும் அல்லது ஷஃபான் மாதம் முப்பதாம் நாள் பிறை காணப்படாததால் நோன்பில்லாமல் இருந்து பிறகு பிறைக் கண்டதாகத் தெரிந்தாலும் அந்த நாளைக் களாச் செய்வது வாஜிபாகும். அன்று பகல் முழுவதும் நோன்பாளியைப் போல் இருந்து கொண்டு நோன்பை முறிக்கின்ற காரியங்களை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்வது அவசியமாகும்.



தள்ளாத வயது, நீங்காத வியாதி போன்றவற்றால் தப்பிய நோன்புக்கு ஃபித்யா

தள்ளாத வயதின் காரணத்தாலும், நீங்காத நோயின் காரணத்தாலும் நோன்பை விட்டவர்கள் நாளொன்றுக்கு கையளவு (ஒரு முத்து) தானியம் நஷ்ட ஈடாக கொடுப்பது வாஜிபாகும். பிறகு அவர்கள் நோன்பு வைக்கச் சக்தி பெற்றாலும் களாச் செய்வது விதியாகும்.


கர்ப்பவதியும், பால் கொடுப்பவளும் குழந்தையின் உடல் நலனை பயந்து நோன்பைவிட்டால் களாச் செய்வதுடன் மேற்குறிப்பிட்டபடி நஷ்டஈடு கொடுப்பதும் வாஜிபாகும்.


ரமழானில் தவறிய நோன்பை அடுத்த ரமழானுக்குள் களா செய்து விடவேண்டும். காரணம் ஏதுமின்றி அடுத்த ரமழானுக்கு பிறகு களா செய்தால் ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு முத்து (இரு கையளவு) தானியம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். உயிராயிருக்கும் ஒருவருக்காக மற்றொருவர் நோன்பு வைப்பது கூடாது. அவர் தள்ளாத வயதானவராயிருந்தாலும் சரி. இறந்துவிட்டவருக்காக நோன்பு வைப்பது உறவினருக்கும் அவன் வசீயத்து செய்து சென்ற அன்னியருக்கும் கூடும்.



ஸுன்னத்தான நோன்பின் வகைகள் என்ன?

பர்ழான ரமழான் நோன்பை தவிர பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் வேறு சில விசேட நோன்புகளை காட்டி தந்திருக்கிறார்கள். அவைகளை நோற்பதன் மூலம் நிறைய சிறப்புகளை பெற்று கொள்ளலாம்.


1. துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் (அரபா) நாள்
2. முஹர்ரம் ஒன்பது, பத்து (ஆஷுரா) நாட்கள்
3. ஷவ்வால் மாதம் துவக்கத்தில் ஆறு நாட்கள்
4. துல்ஹஜ் அல்லாத மற்ற எல்லா மாதங்களிலும் பிறை 13,14,15 ஆகிய மூன்று இரவு வெளிச்சமான (அய்யாமுள் பீல்) என்ற நாட்கள்
5. ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27,28,29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ் ஸுத்) என்ற நாட்கள்
6. திங்கள், வியாழன் இரு தினங்களில் நோன்பு வைப்பது ஸுன்னத்து முஅக்கதாவாகும்.
7. துல்ஹஜ் மாதம் பதின்மூன்றுக்கு பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும். ஹஜ்ஜு செய்கிறவன் அரபா நாளன்று நோன்பை விடுவது ஸுன்னத்து.


ஷவ்வால் மாதம் பெருநாளைக்கு மறுநாள் முதல் ஆறு தினங்கள் தொடராக நோன்பு வைப்பது ஸுன்னத்து. ரஜப் மாதமும், ஷஅபான் மாதமும், துல்ஹஜ் ஒன்பது தினங்களும், முஹர்ரம் பத்து தினங்களும் நோன்பு வைப்பது ஏற்றமானதாகும்.



நோன்பு நோற்க ஹராமான நாட்கள் எவை?

1. நோன்பு பெருநாள்

2. ஹஜ்ஜு பெருநாள்

3. துல்ஹஜ் மாதம், 11, 12, 13 போன்ற நாட்கள்

4. சக்குடைய நாட்கள் (சந்தேகமான நாள்)