MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆஷுரா நோன்பின் சிறப்புகள்

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


முஹர்ரம் மாதம் பிறை (9-10) நாளில் சுன்னத்தான தாஷூஆ - ஆஷுறா நோன்பின் சிறப்புகள்


♣ தாஷூஆ & ஆஷூறா என்றால் என்ன?

சங்கையாக்கப்பட்ட மாதங்களில் முஹர்றம் மாதமும் ஒன்றாகும். இம்மாதத்தின் மாண்பு அளப்பெரியதும் அதிசயமிக்கதுமாகும். இம் மாதத்தைக் கொண்டு இஸ்லாமிய புதுவருடம் கணிக்கப்படுகிறது.


​​இம்மாதத்தின் ஒன்பதாம் நாள் தாஷூஆ தினம் என்றும் பத்தாம் நாள் ஆஷூறா தினம் என்றும் அரபியில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் “தாஷூஆ” ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.


​​

♣ ஆஷுறா நோன்பின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

​ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்.

​ 

ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 2000, 2001

♦ ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்.


​​நூல்: புகாரி, முஸ்லிம்

♦ ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 2006

♦ ஸலமா இப்னு அக்வஃ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, “இன்று ஆஷூரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!“ என்று அறிவிக்கச் செய்தார்கள்!


​​நூல்: புகாரி 2007


​​

♣ ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் நபிமொழி

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலைஹி ஸலாம்)அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலைஹி ஸலாம்)அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், 'நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 3397, முஸ்லிம்

இன்னும் ஒரு அறிவிப்பில் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.


​​

♣ ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை

♦  ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


​​நூல்: புகாரி 1592, 2002, 2003, 2004

♦ அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், 'நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்' எனக் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 1892, 1893 முஸ்லிம் 1901

​ 

♦ ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம்.  


ஹழ்ரத் ​​கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: அஹ்மத்

குறிப்பு: மேல் கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விடயம் என்னவென்றால், ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது அதிக நன்மையை எதிர்பார்க்கக் கூடிய பாவங்களை போக்கக்கூடிய சுன்னத் என்பது எடுபடவில்லை, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர சுன்னத்து என்பதையல்ல. அது இதுவரையும் சுன்னத்தாகவே இருக்கின்றது என இப்னு ஹஜர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.


​​

♣ ஆஷூறா நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்:"முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்."


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம் 1976

குறிப்பு : மேல்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே இமாம்கள் அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.


​​

♣ ஆஷூறா நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறு செய்தல்

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், '(அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர். அதற்கு நபியவர்கள், 'இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து)நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணித்து விட்டார்கள்.மற்றொரு அறிவிப்பில், 'அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன்' என்று கூறியதாக வந்துள்ளது.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம்

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) குறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், “இது மாபெரும் நாள். மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்“ என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்“ என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.


​​நூல்: புகாரி 3397, 3043, 4680, 4737


​​

♣ பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்

ஆஷுரா தினத்தன்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணித்து விட்டார்கள்.


​​நூல்: முஸ்லிம் 2088, 2089


​​

♣ பத்தாம் நாளோடு சேர்த்து பதினொன்றாம் நாளும் நோன்பு நோற்பது கூடுமா?

ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்னறார்கள்.


​​நூல்கள்: அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி

குறிப்பு : முஹர்ரம் 9ம்த நாள் நோன்பு வைக்க தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் முஹர்ரம் 10/11ம் நாள் நோன்பு நோற்பது கூடும். ஏனெனில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக வேண்டித்தான் ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத் என்றார்கள். எனவே 9ம் நாள் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் அந்த மாறு செய்வதை 10/11ம் நாளிலும் செய்யலாம் “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே மிகச் சிறந்த முறையாகும்.


​​

♣ தாஸூஆ - ஆஷூறா நோன்புடன் கழா, நேர்ச்சை நோன்பு நோற்கலாம்

ரமழான் மாதத்தில் நோற்கத் தவறிய கழா நோன்புள்ளவர்களும் நேர்ச்சை நோன்புள்ளவர்களும் தாஸூஆ - ஆஷூறா ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தம்மீதுள்ள கழா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மையும் கிடைக்கும், ஆனால் நிய்யத் வைக்கும் பொழுது பர்ழான ரமழான் நோன்பு என்றும், நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.

கழா நோன்பு அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் ஆஷூறா - தாஸூஆ நோன்பு என்று நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும். எனவே, இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களில் நோன்பு நோற்றும், குடும்பத்தவர்கள் உறவினர்களைப் பேணியும், ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் முதலியன வழங்கியும் நல்லடியார்களில் சேர்வோமாக!


​​

♣ ஆஷூறா தினத்தில் ஓத வேண்டிய விசேஷட துஆ

اَللهم يَاقَابِلَ تَوْبَةِ آدَمَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَا رَافِعَ إِدْرِيْسَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَا مُسَكِّنَ سَفِيْنَةِ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْم عَاشُوْرَاءَ َ

وَيَا مُنَجِّيَ إِبْرَاهِيْمَ مِنْ نَارِ نُمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاكَاشِفَ ضُرِّ أَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَافَارِجَ كُرْبَةِ ذِي النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاغَافِرَ ذَنْبِ دَاؤُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسَى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَازَائِدَ الْخَضِرِ فِى عِلْمِهِ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَا مُنَزِّلَ التَّوْرَاةِ وَالزَّبُوْرِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ

عَاشُوْرَاءَ

وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَإِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّلوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاخَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ

وَيَاخَالِقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَوْمَ عَاشُوْرَاء

اَللهم إِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ، وَادْفَعْ عَنَّا السَّيِّئآتِ وَالْبَلِيَّاتِ، يَادَافِعَ الْسَيِّئآتِ وَالْبَلِيَّاتِ، وَسَلِّمْنَا مِنْ آفَاتِ الدُّنْيَا وَفِتَنِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَآلَامِهَا وَشِدَّاتِهَا وَفَقْرِهَا وَمِنْ آفَاتِ الْآخِرَةِ وَعَذَابِهَا وَأَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ الثَّقَلَيْنِ وَرُسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدٍ الْمُصْطَفَى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَامَالِكَ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ سَيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ أَبِيْ مُحَمَّدٍ الْحَسَنِ وَأَبِيْ عَبْدِ اللهِ الْحُسَيْنِ، اَللهم زِدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا، وَصَلَّى الله وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ، َ