MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பித்அத் எல்லாம் வழிகேடாகுமா? (தொடர் - 4)


மௌலவீ  K R M.ஸஹ்லான் (றப்பானீ)  BBA-Hons


♣ நபி ﷺ அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகுமா ?


وعن سيدنا رفاعة بن رافع رضي الله عنه قال: كنا نصلي وراء النبي صلى الله عليه وآله وسلم


فلما رفع راسه من الركعة قال ( سمع الله لمن حمده) قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال (من المتكلم؟) قال: أنا قال: «رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها»( [66]).


நாங்கள் நபி ﷺ அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி ﷺ கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்" என்று நபி ﷺ கூறினார்கள்.


புஹாரீ-799,நஸாஈ-614,அபூதவூத்-770

அறிவிப்பு- ரிபாஆ இப்னு ராபிஉ (றழியல்லாஹு அன்ஹு)


நபி ﷺ அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறுமாறு கற்றுக்கொடுக்கவில்லை. குறித்த மனிதர் அவ்வாறு கூறிபோது இது நான் காட்டித்தராத வழி முறை என நபி ﷺ அவர்கள் அவரை தடுக்கவில்லை.



وعن سيدنا أنس بن مالك رضي الله عنه قال: كنت جالسا مع رسول الله صلى الله عليه وآله وسلم في الحلقة إذ جاء رجل فسلم على النبي صلى الله عليه وآله وسلم وعلى القوم فقال السلام عليكم، فقال رسول الله صلى الله عليه وآله وسلم « وعليكم السلام ورحمة الله وبركاته» فلما جلس قال الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى فقال النبي صلى الله عليه وآله وسلم « والذي نفسي بيده لقد ابتدرها عشرة أملاك كلهم حريصون على أن يكتبوها فما دروا كيف يكتبونها فرجعوا إلى ذي العزة جل ذكره فقال « اكتبوها كما قال عبدي»( [68]).


நான் நபி ﷺ அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து நபி ﷺ அவர்களுக்கும் அங்கு அமர்ந்திருந்த கூட்டத்திற்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னார். அதற்கு நபி ﷺ அவர்கள் வ அலைக்குமுஸ்ஸலாமு வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ என்று சொன்னார்கள். அவர் அமர்ந்தபோது "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி கமா யுஹிப்பு றப்புனா வயற்ழா" என்று சொன்னார். அதற்கு நபி ﷺ அவர்கள் எனது ஆத்மா யார் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாக பத்து வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டனர்" எவ்வாறு அதை பதிவு செய்வது என அவர்களுக்கு புரியவில்லை. அல்லாஹ் தஆலாவிடம் சென்று கேட்ட போது எனது அடியான் எவ்வாறு கூறினானோ அவ்வாறே பதிவு செய்யுங்கள் என்று சொன்னான்.


அஹ்மத்-12320

அறிவிப்பு – அனஸ் இப்னு மாலிக் (றழியல்லாஹு அன்ஹு)



நபி ﷺ அவர்கள் ஒருவர் சபையில் வந்தமரும்போது "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி கமா யுஹிப்பு றப்புனா வயற்ழா" என்று சொல்லுமாறு கற்றுக் கொடுக்கவுமில்லை. அவர்கள் சொல்லிக்காட்டவுமில்லை. ஆயினும் அந்த மனிதர் சொன்னதை அவர்கள் தடுக்காமல் பாராட்டினார்கள்.அவர் சொன்ன வார்த்தையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டினார்கள்.



وعن سيدنا رفاعة بن رافع رضي الله عنه قال: صليت مع النبي صلى الله عليه وآله وسلم فعطست فقلت الحمد لله حمدا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى فلما انصرف قال: (من المتكلم؟ ثلاثا) فقلت أنا فقال: والذي نفسي بيده لقد ابتدرها بضعة وثلاثون ملكا أيهم يصعد بها( [69]).


நான் நபி ﷺ அவர்களுடன் தொழுது கொண்டிருந்தபோது தும்மிவிட்டு அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் அலைஹி கமா யுஹிப்பு றப்புனா வயற்ழா" என்று சொன்னேன். தொழுது முடித்தபோது நபி ﷺ அவர்கள் யார் அவ்வாறு சொன்னது என மூன்று முறை கேட்டார்கள். நான் என்று கூறினேன். அதற்கு நபி ﷺ அவர்கள் எனது ஆத்மா யார் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாக 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை கொண்டு செல்வதில் போட்டி போட்டனர்" என்று கூறினார்கள்.


திர்மிதி-404

அறிவிப்பு- றிபாஅத் இப்னு றாபிஃ (றழியல்லாஹு அன்ஹு)



وعن سيدنا أبي سعيد الخدري رضي الله عنه أن رهطا من اصحاب النبي صلى الله عليه وآله وسلم انطلقوا في سفرة سافروها حتى نزلوا على حي من أحياء العرب فاستضافوا فأبوا أن يضيفوهم فلدغ سيد ذلك الحي فسعوا له بكل شيء لا ينفعه شيء فقال بعضهم : لو أتيتم هؤلاء الرهط الذي نزل بكم لعله أن يكون عند بعضهم شيء فأتوهم فقالوا: يا أيها الرهط إن سيدنا لدغ فسعينا له بكل شيء لا ينفعه شيء فهل عند أحدكم شيء ؟ فقال بعضهم : نعمم والله إني لراق ولكن والله لقد استضفناكم فلم تضيفونا فما انا براق لكم حتى تجعلوا لنا جعلا فصالحوهم على قطيع من الغنم فانطلق يتفل ويقرأ ﴿ الحمد لله رب العالمين﴾ حتى كأنما نشط من عقال فانطلق يمشي ما به قلبة قال: فأوفوهم جعلهم الذي صالحوهم عليه فقال بعضهم اقسموا وقال الذي رقى : لا تفعلوا حتى نأتي رسول اله صلى الله عليه وآله وسلم فنذكر له الذي كان فننظر ما يأمرنا به فقدموا على الرسول صلى الله عليه وآله وسلم فذكروا له فقال: (وما يدريك أنها رقية ثم قال: قد أصبتم اقسموا واضربوا لي معكم بسهم)( [71]).


நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!" என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி ﷺ அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி ﷺ அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டு விட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.


புஹாரீ-2156, முஸ்லிம்-2201, அபூதாவூத்-3900, திர்மிதி-2064

அறிவிப்பு- அபூ ஸயீத் (றழியல்லாஹு அன்ஹு)


நபி ﷺ அவர்கள் யாருக்காவது தேள் கொட்டிவிட்டால் தேள் கொட்டப்பட்டவர் மீது இலேசாகத் துப்பி ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதினால் சுகம் கிடைக்கும் என்றோ அவ்வாறுசெய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்றோ முன்னர் கூறவில்லை. அதனால் தான் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.

தான் சொல்லாத வழி முறையை ஸஹாபி செய்ததை கண்டிக்காமல். 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். என்று சரிகண்டார்கள்.



وعن السيدة عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم بعث رجلا على سرية وكان يقرأ لأصحابه في صلاته فيختم بـ ﴿ قل هو الله أحد﴾ فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وآله وسلم فقال «سلوه لأي شيء يصنع ذلك؟» فسألوه فقال: لأنها صفة الرحمن وأنا احب أن أقرأ بها فقال النبي صلى الله عليه وآله وسلم «أخبروه أن الله يحبه»( [76]).


ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒரு மனிதரை படைப் பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர் தமது தொழுகையில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது "குல் ஹுவல்லாஹு அஹத்" எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "எதற்காக இப்படிச் செய்கிறார் என அவரிடமே கேளுங்கள்" என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், "ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்தியம்புகிறது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்" என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார்கள்.


இதை நபி ﷺ அவர்களின் துணைவியார் ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) அவர்களால் வளர்க்கப்பட்ட அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம்-1840


நபி ﷺ அவர்கள் இவ்வாறு தொழுகையில் (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது "குல் ஹுவல்லாஹு அஹத்" எனும் அத்தியாயத்தை ஓதுவதை வழக்கமாக்கியிருக்கவில்லை. நபி ﷺ அவர்கள் காட்டாத ஒரு வழி முறையை அந்த மனிதர் செய்தார். நபி ﷺ அவர்கள் அவரை கண்டிக்காமல் பாராட்டினார்கள்.



மேலே குறிப்பிடப்பிடப்பட்ட பல ஹதீஸ்களில் நபி ﷺ அவர்கள் சொல்லாத,செய்து காட்டாத, முன்னர் அங்கீகரிக்காத பல விடயங்ளை ஸஹாபாக்கள் செய்துள்ளார்கள். அவற்றில் பல நபி ﷺ அவர்களின் முன்னிலையிலே நடைபெற்றுள்ளன. அவற்றை நபி ﷺ அவர்கள் “நான் செய்தவற்றை மாத்திரமே நீங்கள் செய்வேண்டும், நான் செய்யாத எதையும் நீங்கள் செய்யக்கூடாது” என்று தடுக்கவில்லை. காரணம் ஸஹாபாக்கள் செய்த அந்த விடயங்கள் அல்குர்ஆனுக்கும், நபி ﷺ அவர்களின் வாழ்க்கை முறைக்கும் மாற்றமானதாக இருக்கவில்லை.


ஒருவிடயத்தை நபி ﷺ அவர்கள் செய்யவில்லை என்பதால் அது தவறானது என்று நாம் கருத முடியாது.


புதிதாக ஒரு விடயம் செய்யப்பட்டாலும் அது அல்குர்ஆனுக்கும், நபி ﷺ அவர்களின் வாழ்க்கை முறைக்கும் மாற்றமில்லாமல் இருந்தால் அது ஆகுமான விடயமே என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.


நபி ﷺ அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடு என்று சிலர் கூச்சலிடுவது அவர்களின் மடமையும் அறியாமையுமாகும்.


(தொடரும்....)

← தொடர் 3

தொடர் 5