MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​கனவுகள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

​​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


​​தூக்கத்தில் ஏற்படும் கனவுகள் பற்றி இஸ்லாம் மார்க்கம் என்ன சொல்கிறது? கண்ட கனவை பிரரிடம் சொல்லலாமா?


♣ கனவு என்பது என்ன?

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த அடியிப்படையில் அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு தோழர் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆனின் 39:42 ஆவது வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள்.


​​‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)- ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. ரூஹ் தனது அசையும் தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறது. அப்பொழுது அந்த ரூஹிற்கு மற்ற ரூஹ்களுடன் நடைபெறும் சம்பாஷனைகள் மற்றும் நிகழ்ச்சிகளே கனவுகளாகும்.  (நூல் : குர்துபி)

இன்றைய விஞ்ஞானம் கனவைப் பற்றி அது நம் நினைவுகள் மற்றும் சிந்தனைகளின் பிம்பங்கள் என்றும் நாம் தூங்கும் சமயம் நமது மூளை மிகக் குறைந்த அளவில் வேலை செய்யும் போது அதில் தோன்றும் சில படக்காட்சிகள் என்றும் பல விதமான கருத்துக்கள் கூறுகின்றது. அந்த அடிப்படையில் கனவிற்கும் அர்த்தமுண்டு. எல்லோருக்குமே சகஜமாக கனவு வரத்தானே செய்கிறது என்று கனவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கனவிற்கும் பலவிதமான அர்த்தங்கள் உண்டு.

இஸ்லாத்தின் மிக முக்கிய அடையாளமான பாங்கு சொல்லும் முறையும் ஸஹாபாக்களுக்கு கனவின் மூலம்தான் அறிவிக்கப்பட்டது.


​​

♣ கனவின் முக்கியத்துவம்

இஸ்லாம் மார்க்கத்தில் கனவின் முக்கியத்துவம் பற்றி குர்ஆன், ஹதீஸ்கள் பல விடயங்களை வலியுறுத்துகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் நீங்கள் யாரேனும் கனவு கண்டீர்களா? என்று கேட்டு அதற்கு விளக்கம் கூறுபவர்களாக இருந்தார்கள்.


​​நூல்: புகாரி 7047, முஸ்லிம் 4572

♦ மேலும் சில முக்கிய நபர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கும் கனவு காரணமாக அமைந்துள்ளது. ஹள்ரத் முஹம்மது இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். “ஹள்ரத் காலித் இப்னு ஸஈத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கு அவர்கள் கண்ட ஒரு கனவே காரணமாக அமைந்தது. அவர்கள் கண்ட கனவு இதுதான்.

அவர் நரகத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். அவரது தந்தை அவரை நரகில் தள்ள முயற்சிக்கிறார். அதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் நரகில் விழாதவாறு அவரின் இடுப்பை பிடித்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிறகு திடுக்கிட்டு விழித்த ஹள்ரத் காலித் இப்னு ஸஈத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த கனவு உண்மையானதுதான்’ என்று கூறிக் கொண்டு ஹள்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை சந்தித்து நடந்ததைக் கூறினார்கள்.


​​அதற்கு ‘உனக்கு நல்லதே நடக்கட்டுமாக! இதோ, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்துள்ளார்கள். அவர்களை நீ பின்பற்றி அவர்களுடன் புனித இஸ்லாத்தில் இணைந்து விடு! நீ நரகில் விழாமல் அவர்கள் உன்னை பாதுகாப்பார்கள். ஆனால் உனது தந்தையோ நரகில் விழுந்து விட்டார்’ என்று பதில் கூறினார்கள். ​​அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.


​​நூல்: முஸ்தத்ரக், ஹாகிம்


​​இது போன்று சான்றுள்ள எத்தனையோ பல சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே கனவிற்கு முக்கியத்துவம் கொடுத்து கனவு கண்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


​​

♣ கனவுகள் மூன்று வகைப்படும்.

1) நல்ல கனவுகள்:-

அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும் (நமக்கு நல்லது நடப்பதைப் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாம் விரும்பும் நிகழ்வுகளை கனவுகளாக காணுவதாகும்)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (நூல் புகாரி 6983)


​♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ஸஈதினில் குத்ரீ (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் எவரேனும் தனக்கு பிடித்தமானதை கனவில் கண்டால் நிச்சயமாக அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும். எனவே அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். மேலும் அதை அவர் யாரிடமேனும் கூறட்டும்” என்றும் வேறு அறிவிப்பில் “அவர் அந்த கனவை தன்னை விரும்பக் கூடிய, (தனக்கு நல்லதையே நாடக்கூடிய) அறிஞரான (இறையச்சம் முடையவர்களில்) ஒருவரிடம் கூறட்டும்’ அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)(நூல் : புகாரி 6984, 6985)


​♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தான் புறத்திலிருந்து வருவதாகும். எனவே உங்களில் ஒருவர் தனக்கு பிடிக்காத கெட்ட கனவு கண்டால் அவர் தனது இடது புறமாக (எச்சில் வராதவாறு) மூன்று முறை துப்பிக் கொள்ளட்டும். மேலும் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும். (அப்படி செய்தால்) அந்த கனவால் அவருக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது. ( நூல் : புகாரி 6985, 6995, 7005, 7044, 7045 முஸ்லிம் 4551, 4552, 4554)


​♦ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், ”நற்செய்தி கூறுகின்றவை (”முபஷ்ஷிராத்”) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் ”நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ”நல்ல (உண்மையான) கனவு” என்று விடையளித்தார்கள். (நூல் புகாரி 6990)


​♦தமக்கு விருப்பமான கனவை ஒருவர் கண்டால் அவர் விரும்பினால் மற்றவருக்குச் சொல்லட்டும்’ என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), (நூல்: அஹ்மத் 8766)

2) கெட்ட கனவுகள்:-

ஷைத்தான் புறத்திலிருந்து கவலைவை ஏற்படுத்துகின்ற கனவாகும். (நமக்கு கெட்டது நடப்பதைப் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாம் வெறுக்கும் நிகழ்வுகளை கனவுகளாக காணலாம்)

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தான் புறத்திலிருந்து வருவதாகும். எனவே உங்களில் ஒருவர் தனக்கு பிடிக்காத கெட்ட கனவு கண்டால் அவர் தனது இடது புறமாக (எச்சில் வராதவாறு) மூன்று முறை துப்பிக் கொள்ளட்டும். மேலும் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும். (அப்படி செய்தால்) அந்த கனவால் அவருக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது. ( நூல் : புகாரி 6984,7044)

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும், கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும், அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது.  என கதாதா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (நூல் புகாரி 3292, 6986)

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘கெட்ட கனவு கண்டவர் தான் படுத்திருக்கும் முறையை மாற்றிக் கொள்ளட்டும்’ (நூல்: முஸ்லிம்)

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘கெட்ட கனவு கண்டவர் அதை யாரிடமும் கூற வேண்டாம், அவர் எழுந்து தொழுது கொள்ளட்டும். (நூல் :முஸ்லிம் 4200, திர்மிதி)

♦ ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தார். ‘என் தலை வெட்டப்படுவது போலவும் அதை நான் விரட்டிச் செல்வது போலவு கனவு கண்டேன்’ என்று அவர் கூறும் போது, ‘ஷைத்தான் உன்னோடு கனவில் விளையாடுவதைப் பற்றி (யாருக்கும்) கூறாதே’ என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு), (நூல்: முஸ்லிம் 4563)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது சொற்பொழிவில் ‘ஒருவரது கனவில் ஷைத்தான் விளையாடினால் அதை யாருக்கும் கூற வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு), (நூல்: முஸ்லிம் 4564, 4565)


​​

3) குழப்பமான தெளிவில்லாத கனவுகள்:-

குழப்பமான தெளிவில்லாத கனவு நாம் என்ன கனவு கண்டோம் என்பதே தெரியாத குழப்பமான கனவுகளாகும், அர்த்தமற்ற கனவுகளையும் நாம் காணலாம். இதுவும் கூட கெட்ட கனவைப் போன்றதாகும். இது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர். இதுவும் "தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்.

♦ குழப்பமான தெளிவில்லாத கனவு நாம் என்ன கனவு கண்டோம் என்பதே தெரியாத குழப்பமான கனவுகள். இதை நாம் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டு விட வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம் நீங்கள் யாரேனும் கனவு கண்டீர்களா? என்று கேட்டு அதற்கு விளக்கம் கூறுபவர்களாக இருந்தார்கள். (நூல் புகாரி 7047, முஸ்லிம் 4572)


​​மேலும் ஹள்ரத் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கனவிற்கு விளக்கம் கூறிய நிகழ்ச்சிகள் குர்ஆனிலும் இடம்பெற்றுள்ளன. இதனடிப்படையில் கனவிற்கு விளக்கங்கள் உண்டு. ஆனால் விளக்கம் கூறுவதற்கு அதைப் பற்றிய ஆழ்ந்த கல்வி ஞானமும் மாசற்ற இறையச்சமும் அதிகம் தேவை.


​​எனவேதான் இன்று கனவிற்கு சரியான விளக்கம் கூறக்கூடியவர்கள் சிலரைத் தவிர வேருயாருமில்லை என்றே கூறலாம். எனவே நாம் சுயமாக அதற்கு எந்த விளக்கமும் கூறாமல் நீர் நல்லதையே பார்த்தீர். நல்லதே நடக்கட்டும். அல்லாஹ் அதை உனக்கு நன்மையாக ஆக்கட்டும் என்று அழகான வார்த்தைகளை கூறிக் கொள்ள வேண்டும். ஆகவே மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் செய்ய வேண்டியதை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.


​​

♣ நல்ல கனவு கண்டால் மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும்.

1)இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

2)அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

3)நமக்கு நன்மையை விரும்பும் நல்ல அமல்கள் செய்யும் சிறந்த அறிஞர் ஒருவரிடம் அதைக் கூற வேண்டும்.


​​

♣ கெட்ட கனவு கண்டால் எட்டு விஷயங்கள் செய்ய வேண்டும்.

1)இந்த கனவின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.

2)ஷைத்தனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.

3)நமது இடது புறமாக எச்சி வராதவாறு மூன்று முறை துப்ப வேண்டும்.

4)தான் படுத்திருக்கும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

5)ஷைத்தானின் தீண்டுதல் ஏற்படாமல் இருக்க ஆயத்துல் குர்ஸீ ஓதிக்கொள்ள வேண்டும்.

6)இந்த கனவால் நமக்கு எந்த தீங்கும் வராது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

7) எழுந்து இரண்டு ரக்அத் நபில் தொழுகை தொழ வேண்டும்.

8)முக்கியமாக கெட்ட கனவைப் பற்றி யாரிடமும் பிரஸ்தாபிக்கக் கூடாது.கெட்ட கனவு கண்டு இடையில் எழுந்தால் இந்த அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும். பலருக்கு காலையில் எழுந்து சில மணி நேரங்கள் கழித்த பிறகே கனவுகள் ஞாபகத்திற்கு வரும். அப்பொழுதும் அவர்கள் மேற்கூறப்பட்ட விஷயங்களை செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ ரஜீன் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘கனவு என்பது அதற்கு விளக்கம் கூறப்படாத வரை ஒரு பறவையின் காலில் கட்டப்பட்டதைப் போன்றிருக்கிறது. (அதாவது உறுதியாக தறிபடாததாக உள்ளது). யாரேனும் விளக்கம் கூறினால் அது நிகழ்து விடும். (நூல் : திர்மிதி, முஸ்லிம் பார்க்க 4555)

எனவே அவர்கள் தங்களின் அறிவிற்குட்பட்டு ஏதேனும் தவறான விளக்கம் கூறினால் அது அப்படியே நடந்து விட வாய்ப்புள்ளதால் கெட்ட கனவை நாம் யாரிடமும் கூறக் கூடாது. மேலும் மேற் கூறப்பட்டபடி நாம் நடந்து கொண்டால் அந்த கனவையே நினைத்து பயப்படவும் தேவையில்லை.


♣ தூக்கத்தில் நாம் காணும் கனவுகள் பலிக்குமா?

பகல் கனவு பலிக்காது, இரவு கனவுதான் பலிக்கும் என்று சிலர் கூறுவது சரியல்ல. நாம் எந்நேரத்தில் தூங்கினாலும் தூக்கத்தில் நாம் காணுவது கனவாகும். ஆனாலும் ஸஹர் நேரங்களில் காணப்படும் கனவுக்கு தனிமகிமைகள் உண்டு என்பதோட அதை பகல் கனவு - இரவு கனவு என்று நாம் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. அனைத்து கனவுகளுக்கும் மேற்கூறிய சட்டங்கள்படி தான் செயல்பட வேண்டும்.

♦ “ஹள்ரத் காலித் இப்னு ஸஈத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கு அவர்கள் கண்ட ஒரு கனவே காரணமாக அமைந்தது. அவர்கள் கண்ட கனவு இதுதான்...அவர் நரகத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். அவரது தந்தை அவரை நரகில் தள்ள முயற்சிக்கிறார். அதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் நரகில் விழாதவாறு அவரின் இடுப்பை பிடித்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிறகு திடுக்கிட்டு விழித்த ஹள்ரத் காலித் இப்னு ஸஈத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த கனவு உண்மையானதுதான்’ என்று கூறிக் கொண்டு ஹள்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை சந்தித்து நடந்ததைக் கூறினார்கள். அதற்கு ‘உனக்கு நல்லதே நடக்கட்டுமாக! இதோ, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்துள்ளார்கள். அவர்களை நீ பின்பற்றி அவர்களுடன் புனித இஸ்லாத்தில் இணைந்து விடு! நீ நரகில் விழாமல் அவர்கள் உன்னை பாதுகாப்பார்கள். ஆனால் உனது தந்தையோ நரகில் விழுந்து விட்டார்’ என்று பதில் கூறினார்கள். அதன் பிறகு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். (நூல் : முஸ்தத்ரக், ஹாகிம்)


​​

♣ கனவு கண்டதாக பொய் சொல்வது கூடுமா?

ஒருவர் கனவு கண்டதாக இல்லாத ஒரு விஷயத்தை பொய்யாக கூறுவதாலும் செய்ய முடியாத விஷயத்தை செய்யச் சொல்லி சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவார். எனவே நான் இன்ன கனவு கண்டேன் என்று ஒரு கனவை பொய்யாகக் கூறுவதோ அல்லது கண்ட கனவை கூறும்போது நடுவில் இல்லாததை சேர்த்துக் கூறுவதோ மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

♦ ”ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் பேகுதிபடி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ”தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்” அல்லது ”தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ”அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.


​​(உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் ”தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்...” என்று வந்துள்ளது. (நூல் புகாரி 7042)

♦ ”பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்தாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என வாஸிலா இப்னு அல் அஸ்கவு (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (நூல் புகாரி 3509)


​​

♣ கனவுகளுக்கு விளக்கம் சொல்லலாமா? பார்க்கலாமா?

கனவிற்கு விளக்கங்கள் உண்டு. ஆனால் விளக்கம் கூறுவதற்கு அதைப் பற்றிய ஆழ்ந்த கல்வி ஞானமும் மாசற்ற இறையச்சமும் அதிகம் தேவை. எனவேதான் இன்று கனவிற்கு சரியான விளக்கம் கூறக்கூடியவர்கள் சிலரைத் தவிர வேருயாருமில்லை என்றே கூறலாம். கனவுகளுக்கு விளக்கம் தெரியாமல் ஒருவர் இல்லாத ஒரு விஷயத்தை பொய்யாக கூறுவதாலும் செய்ய முடியாத விஷயத்தை செய்யச் சொல்லி சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவார்.

♦ இறைத்தூதர்களின் கனவுகளில் ஷைத்தான் குறுக்கிட முடியாது. எனவே அவர்களுக்கு கனவில் வரும் கட்டளைகளும் இறைவனின் கட்டளையாகத் தான் இருக்க முடியும். அந்த அடிப்படையில் யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கண்ட கனவின் விளக்கம் பற்றி (அல்குர்ஆன் 12: 4, 5, 36, 41,100) வசனங்கள் குறிப்பிடுகின்றது.

♦மேலும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கண்ட கனவின் விளக்கம் பற்றி அல்குர்ஆனில் "பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத் திய போது, ‘இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்’ என்று அவரை அழைத்துக் கூறினோம்".(அல்குர்ஆன் 37:102, 103 104, 105)

♦ இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், ”நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்து காலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில், அது என் உறுப்புகள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் இப்னு அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைச் சுற்றிக் குழுமியிருந்த மக்கள், ”இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று வினவினர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”அறிவு” என்று பதிலளித்தார்கள். (நூல் புகாரி 7007)

(மேலும் கனவுகளுக்கு விளக்கம் பார்க்க நூல் : புகாரி 7004, 7005, 7006, 7007, 7008, 7009, 7010, 7012, 7015, 7021, 7022, 7023, 7024, 7032, 7035, 7037, 7046, முஸ்லிம் 4566, 4567, 4568, 4569)