MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெருமானாரின் ﷺ பெற்றோர்கள் சுவனம் செல்வார்கள் 


​​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


உயிரிலும் மேலான உயிருக்கு உயிரான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித பெற்றோர் சுவர்க்கம் நுளைவார்கள்.

♣ வழிகெட்ட வஹாபிகளின் நிலைப்பாடு:

சுந்தர நபியின் பெற்றோர் காபிர் என்றும் அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என்றும் நரகத்திற்குச் செய்வார்கள் என்றும் நாவு கூசாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நாம் காண்கின்றோம் அந்த அடிப்படையில் இது தொடர்பில் நபிகள் நாயகத்தின் பெற்றோர் காபிர் அல்ல மாராக சுவர்க்க வாதிகள் என்ற தலைப்பில் இந்த தொகுப்பினை எழுதுகின்றேன்.

உயிரிலும் மேலாக மதிக்கப்பட வேண்டிய உத்தமத் திருத்தூதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களையும் அவர்களின் தூய பரம்பரையினரையும் இம்சித்துக் கூறுவதில் வழிகெட்ட வஹ்ஹாபிகள் அதிக அக்கறை காட்டுவது ஏன்? இவர்களின் சிந்தனை ஓட்டம் இப்படியான சாக்கடை வாதங்களுக்குள் சுழன்று கொண்டிருப்பதின் மர்மம் என்ன? வழிதவறிய முஃதஸிலா இயக்கத்தால் தாக்குண்ட வஹ்ஹாபிச சகோதரர்கள், மௌதூதி உள்ளிட்ட வழிதவறியவர்களின் சிந்தனையில் கவரப்பட்ட இவர்கள் கண்மூடித்தனமாக இவர்களைப் பின்பற்றினர். அதனால்தான் இப்படியான அபத்தங்களை அடிக்கடி அவிழ்த்து விடுகின்றனர்.

நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களின் அருமைப் பெற்றோர் காபிர்களாகவே மரணித்ததார்கள் என்று குர்ஆன், ஹதீஸ்களுக்கு மாற்றமாகவும் தனது சொந்த கருத்துக்களை வழிகெட்ட வஹாபிகள் கூறுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தின் சட்டத்துறை அறிஞர்களும், அகீதாக் கோட்பாட்டு அறிஞர்களும் இது விடயத்தில் மிகத் தெளிவான விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.

♦“நுபுவ்வத்” என்பது முயற்சியால் கிட்டுவதல்ல. இறைவனின் அருளால் கிடைப்பது. அதனால் மனிதர்களில் பரிசுத்தமானவர்களை தேர்ந்தெடுத்தே இறைவன் நுபுவ்வத்தை வழங்குகின்றான். அதனால், நுபுவ்வத்தின் நிபந்தனைகளுள் “ஷிர்க்” போன்ற அசுத்தமில்லாத பரம்பரையும் ஒன்று என்று பிரபலமான அகீதா நூல் “முஸாயிறா” கோடிட்டுக் காட்டுகின்றது.

♦ ஒரு கோத்திரத்தில் இரு கிளை வந்தால் அதில் மேலான கிளையிலிருந்தே வந்துள்ளேன் என்றும், “என்னை என் பெற்றோரிலிருந்து வெளிப்படுத்தும் வரை கண்ணியமான முள்ளந்தண்டிலிருந்தும்,பரிசுத்தமான கருவறையிலிருந்தும் நான் திருப்பப்பட்டு வந்துள்ளேன் என்றும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படியான ஹதீதுகள் அநேகம் உண்டு. இதனை இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி,இமாம் ஸர்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் காழி இயாழ் ரஹ்மதுல்லாஹி அலைஹி உள்ளிட்டோர் முறையே 'மஸாலிகுல் ஹுபைபா பீவாலிதில் முஸ்தபா, ஷரஹுஸ்ஷர் கானி அலல் மவாஹிபி, அஷ்ஷிபா போன்ற நூற்களில் எழுதியுள்ளனர்.


​​பெருமானார் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லமவர்களின் பெற்றோர் சொர்க்கவாதிகள் என்பதனை ஹாபிழ் இமாம் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தக்க ஆதாரங்களுடன் ஆறு நூற்கள் எழுதியுள்ளனர். நபிகள் நாயகத்தின் பெற்றோர் செர்க்கவாதிகள் என்பதற்குரிய தக்க நியாயங்களுடனான சில ஆதாரங்களை கீழே தருகின்றோம். சிந்திப்போருக்கு அது தெளிவையும் திருப்தியையும் கொடுக்கும் என்பது எமது நம்பிக்கை.

♦  நிச்சயமாக முஃமினான ஓர் அடிமை ஒரு முஷ்ரிக்கை விட மேலானவன். (அல்குர்ஆன் - 2 : 221)

♦ஸுஜூது செய்பவர்களின் முள்ளந்தண்டிலிருந்து நீ புரட்டப்பட்டுள்ளீர்” என்று அல்லாஹுத்தஆலா திரு மறையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளான். (அல்குர்ஆன் 26:219)

இத்திருவசனத்திற்கான ஒரு விளக்கமாக பெருமானாரின் ஒளி ஸுஜூது தொழுகையாளிகளின் முள்ளந்தண்டிலிருந்தே மாறி மாறி வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

♦ ஒரு ரஸூலை நாம் அனுப்பும் வரை நாம் தண்டிப்பவனாக இல்லை. (அல்குர்ஆன் - 17 : 16)


​​நபிமார்கள் இல்லாத காலம் நபிமார்களின் அழைப்புக்கிட்டாதவர்கள் “பத்றத்துடையவர்கள்” என்று இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. இவர்கள் தண்டனைக்குரியவர்கள் அல்ல. வெற்றி பெற்றோர்கள், சுவர்க்கம் நுளைவார்கள் என்பதுதான் ஷரீஅத்தின் தீர்மானமாகும். இது பற்றி அகீதா நூற்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

♦11ஆம் ஆண்டு இஸ்லாம் பாட நூலிலும் (பழையது) பத்றத்துடையவர்கள் வெற்றியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கவனிக்கத்தக்கது. பத்றத்துடைய காலத்திலுள்ளோர் தண்டிக்கப்பட்டால் இவ்வாறு இயம்புவர். இரட்சகா எம்பால் ஒரு தூதரை நீ அனுப்பியிருந்தால் உமது அத்தாட்சிகளை நாம் பின்பற்றியிருப்போம். அதனால் முஃமின்களில் கூட்டத்தில் நாம் ஆகியிருப்போம் என்று கூறுவர். (அல்குர்ஆன் - 28 : 47) அதனால்தான் நபிமார்களின் அழைப்பு கிட்டாத அறபு சமூகம் பத்றத்துடைய காலத்தில் வாழ்ந்தவர்களாக கருதி அவர்கள் சொர்க்கவாதிகள் என்று தீர்ப்புக் கூறினர்.


​​இவ்வாறு எண்ணற்ற ஆதாரங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கும் போது இந்த வஹ்ஹாபிகள் பெருமானாரின் பெற்றோர் நரகத்திலிருப்பதாக எப்படி வாய், மனம் கூசாமல் கூறமுடியும்? இப்படிக் கூறுவதால் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? சிந்திக்க வேண்டும்.

♦ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள்.ஆதத்தின் மக்களில் ஒவ்வொரு நூற்றாண்டிலிருந்தும் நான் பிறக்கும் நூற்றாண்டு வரை சிறந்த நூற்றாண்டிலிருந்தே அனுப்பப்பட்டுள்ளேன்.

ஆதாரம்: புகாரி

♦  மேலும், புவியில் ஏழு முஸ்லிம்கள் தொடர்ந்தும் இருப்பர். இவர்கள் இல்லாவிட்டால் பூமியும் அதிலிருப்போரும் அழிந்துவிடுவர்.


​​அறிவிப்பவர் : ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு

​நூல் : ஷறஹுஷ் ஷர்கானி, பாகம் - 1, பக்கம் - 172


​♦ ஹளரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் பூமியில் ஏழு நல்லடியார்கள் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் பொருட்டால்தான் பூமியில் உள்ளோர் இறை தண்டனையிலிருந்து தடுக்கப்படுகின்றனர்.

ஆதார நூல் : ஷறஹு ஷர்கானி பாகம் - 1, பக்கம் - 174 

♦ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பிறந்த நூற்றாண்டில் உள்ளோர் ஏனைய நூற்றாண்டில் உள்ளோரை விட மேலானவர்கள் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.


​​ஆதாரம் புகாரீ ஷரீபில் பதிவாகியுள்ளது

♦மேலும், “நான் சங்கையான முதுகந்தண்டிலிருந்தும் தூய்மையான கருவறையிலிருந்தும் தொடர்ந்து வந்துள்ளேன் என்ற நபிமொழியையும், “அல்லாஹ்விடத்தில் சங்கையானவர் உங்களில் தக்வா உள்ளவரே” (அல்குர்ஆன்) நிச்சயமாக முஷ்ரிக்குகள் நஜீஸ் -அசுத்தமானவர்கள் (அல்குர்ஆன்) போன்ற திருமறை வசனத்தையும் ஒப்புநோக்கின் தாஹா நபியின் பெற்றோர் இறையச்சமுள்ள பெற்றோர் என்பது தெளிவாகின்றது.

முஸ்லிம் அல்லாத ஒரு காபிர் எவ்வளவு உயர் குடிமகனாக இருப்பினும் முஸ்லிமான அடிமையைவிட தரம் தாழ்ந்தவராகும் என்று திருமறை கூறுகின்றது. இவ்விரண்டையும் தொகுத்து நோக்கின் பூமான் நபியின் பெற்றோர் முஃமீன் என்பது உறுதியாகிவிடும்.

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களது தந்தை, தாய் வழி பரம்பரையைப் பெருமையோடு பலமுறை கூறியுள்ள பல ஹதீதுகள் ஹதீதுப் பெருநூற்களில் பதிவாகியுள்ளன.


​​ஆதாரம் தைலமீ , பைஹகீ, அஹ்மத்

♦ ஹுனைன் யுத்தத்தின்போது ஒரு சந்தர்ப்பத்தில் காபிர்களின் கை ஓங்கியிருந்தது. அப்போது பயகம்பர் நபியவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. நபியவர்கள் சஷிதாக்கப்பட்டதாக ஷைத்தான் களத்தில் வதந்தியைப் பரப்பி ஸஹாபாக்களை கதி கலங்கச் செய்தான். இப்படியான நிலையில் நபியவர்கள் “நான் நபி.பொய்யனல்ல.நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்” என்று உரத்துக் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது மூதாதையர்களின் 21 பேரின் திருநாமங்களை பெருமையோடு கூறினார்கள். இவர்கள் அனைவரும் குலத்தால் உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்கள். எனின், இவர்கள் அனைவரும் சத்திய முஸ்லிம்கள் என்பது தெளிவாகின்றது.

♦ நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் கன்ஆன் நூஹ் நபியவர்களை ஈமான் கொள்ளவில்லை. காபிராக இருந்தான். அதனால்,அல்லாஹுத்தஆலா அவன் (கன்ஆன்) உமது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல. நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களைச் செய்துள்ளான். (அல்குர்ஆன் - 11 : 46) மேற்கண்ட திருவசனம் ஒரு முஸ்லிமுக்கும், காபிருக்குமிடையிலான குடும்ப உறவு அற்றுப்போய் விடுகின்றது என்பதை உறுதி செய்கின்றது. அதனால் ஒரு முஸ்லிமின் அனந்தரச் சொத்து காபிரான பிள்ளைகளைச் சேராது என்றும் ஷரீஅத் சட்டம் கூறுகின்றது. ஆனால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நவின்றார்கள், நாங்கள் நம்றுப்னு கினானாவின் பிள்ளைகள். நாங்கள் எங்களின் மூதாதையரின் பரம்பரையை துண்டித்து வேறுபடுத்துவதில்லை.

ஆதாரம் : அபூதாவூத் அஹ்மத், இப்னு மாஜா 

காபிர்களுடனான குடும்ப உறவு துண்டிக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றால் பெருமானாரின் மூதாதையர் நஊதுபில்லாஹ்! காபிர் என்றால் குடும்ப உறவு எப்படி பேணப்படும். துண்டிக்காமல் போனது எப்படி? இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “அப்ழலுல் குறா” என (நூல் பாகம் - 01. பக்கம் -59) இல் இவ்வாறு எழுதுகின்றார்கள்.

♦“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையில் எத்தனை பேர் நபியாக வந்தார்களோ அவர்கள் அனைவரும் நபிமார்கள்தான். நபிமார்கள் அல்லாத அவர்கள் தாய் தந்தையர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் வரையில் எவரும் காபிராக இருக்கவில்லை. ஒரு காபிரை முக்தார் -தேர்ந்தெடுக்கப்பட்டவர், கரீம் -சங்கையானவர், தாஹிர் - பரிசுத்தமானவர் என்று விளிப்பதில்லை. காபிர் நஜீஸ் அசுத்தமானவரே சஹீஹான ஹதீதுகளில் பெருமானாரின் பெற்றோரை முக்தாறூன் - தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆபாஉல் கிறாம் சங்கையான பெற்றோர்கள் பரிசுத்தமான தாய்கள் என்றெல்லாம் வந்துள்ளன.

♦மேலும் “ ஸுஜூது செய்பவர்களின் முள்ளந்தண்டிலிருந்து நீ புரட்டப்பட்டுள்ளீர்” என்று அல்லாஹுத்தஆலா திரு மறையில் குறிப்பிட்டுள்ளான்.இத்திருவசனத்திற்கான ஒரு விளக்கமாக பெருமானாரின் ஒளி ஸுஜூது தொழுகையாளிகளின் முள்ளந்தண்டிலிருந்தே மாறி மாறி வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


​​அப்படியாயின், இக்கூற்று பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோரான அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் தந்தை அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சொர்க்கவாதிகளாகும். காரணம், அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் மூதாதையர்களில் மிக நெருக்கமானவர்களாகும். இதுதான் உண்மை, சத்தியம்.


​​அல்லாஹுத்தஆலா பெருமானாரின் பெற்ரோரை உயிர்ப்பித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை கொண்டு ஈமான் கொள்ளச் செய்தான் என்று வந்துள்ளது. இந்த ஹதீதில் குறை காண்பவனை கவனத்தில் எடுக்க வேண்டாம்.

ஏதோ புதியவைகளை ஆய்வு செய்து புத்திபூர்வமாகச் கூறுவதாக இவர்கள் கூறுவதெல்லாம் பத்தாம் பசலி வாதங்கள்தான். வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தின் வாதங்களையும், மத்ஹபுகளை மறுக்கின்ற வழிகேடர்களின் போதனைகளையும் புதிய முலாமிட்டு தங்கள் லேபலில் சந்தைக்கு விடுகின்றனர். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத அப்பாவிகள் ஆஹா! ஓஹோ! என்ன ஆய்வு! என்ன விளக்கம் என்று ஏமாந்து போய் விடுகின்றனர்.


​​எனவே, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு மாறாகப் பேசும் விஷக்கிருமிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனங்கண்டு ஒதுக்கி, ஒதுங்கி வாழ வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்.