MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

​ 

​எழுதியவர்: மௌலவி S.L . அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மாதத்தின் சிறப்புகளும், அம்மாத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான நோன்பின் அவசியமும்

​​

♣  இஸ்லாம் கூறும் ஷஃபான் மாதம்

ஷஃபான் என்ற சொல் ‘ஷிஃபுன்‘ என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். கணவாய் என்பது இதன் பொருள். இந்த மாதத்தில் நன்மைகள் அதிகளவில் கிட்டுவதால் இப்பெயர் வழங்கலாயிற்று. கணவாய்கள் மலைக்குச் செல்வதற்கு வழியாக இருப்பது போன்று இந்த மாதம் நன்மைகளையும், இறையருளையும் அதிகளவில் பெறும் வழியாக இருக்கின்றது.


​​ஹளரத் அபூ உமாமா பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள், “ஷஃபான் மாதம் வந்தால் உங்கள் மனங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்! அந்த மாதத்தில் உங்கள் எண்ணங்களையும் அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.

♣  ரமழானுக்காக எமக்கு பயிற்சிப் பாசறையாக பரக்கத் செய்யப்பட்ட ஷஃபான் மாதம் திகழ்கிறது

ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.

♦ ஆகவே ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ஷஃபான் மாதம் எமக்கு துணைபுரிகிறது. ரமழானை பூரணமாக அடைந்து அதன் சகல பாக்கியங்களையும் பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை தரும்படி பிரார்த்தனை புரிதல். குடும்ப அங்கத்தவர்கள், நாண்பர்கள், முதலியோருக்கு இம்மாதத்தின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறல். ஷஃபான் மாதத்தின் (பராஅத்) நோன்பு நோற்று சுன்னத்களை நிலைநாட்டல்.


​​சென்ற ரமழானில் விடுபட்ட நோன்புகளை ஆண்களும், பெண்களும் கழாச் செய்துகொள்ள இம்மாதத்தைப் பயன்படுத்தல். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீழுடைய பிறை (13, 14, 15) இந்த மூன்று தினங்கள் நோன்பு வைப்பதும் “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” (நூல் புகாரி: 1979, முஸ்லிம்: 1159) அதேபோன்று ஒவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை நோன்பு வைப்பதும் சுன்னத்தாகும் இதுபற்றி பல ஹதீதுகள் காணப்படுகிறன.

♦ சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்”


​​நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்

இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களின் மூலம் ஆன்மீக ரீதியில் நம்மை நாம் தயார் செய்து கொள்வதோடு, அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அதிகமானக் கல்வியறிவைத் தேடுவது அவசியமாகும் என்பதையும் உணர வேண்டும். ரமழானுக்கு முந்திய மாதமே ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ரஜப் மாதம் எமக்கு துணைபுரிகிறது.

♦ ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’என நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​

♣  ஷஃபான் மாதத்தில் நோன்பு வைப்பதன் சிறப்புகள்

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்தார்கள். (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ”(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை, ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!”

நூல் புகாரி 1969

♦ மேலும் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடுத்தடுத்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றதை ஷஃபான், ரமழான் ஆகியவற்றில் தவிர நான் கண்டதில்லை.நாயகமே! ஷஃபான் மாதத்தில் தாங்கள் நோன்பு நோற்றபடி வேறு எந்த மாதத்திலும் தாங்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதில்லையே என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த மாதத்தைப் பற்றித்தான் மக்கள் பராமுகமாகிவிட்டனர். இது ரஜபுக்கும், ரமழானுக்கும் இடையிலுள்ளது. இந்த மாதத்தில்தான் (மக்களின்) நடமாட்டங்கள் (செயல்கள்) உலகங்களைப் படைத்து பரிபாலனம் செய்பவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே என்னுடைய செயல்கள் நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

♦ அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபானை விடவும் வேறு எந்த எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு வைப்பவராக இருக்கவில்லை. ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பவராக இருந்தார்கள். மற்றொரு அறிவிப்பில் “அவர்கள் சில நாட்கள் தவிர ஷஃபானில் எல்லா நாட்களும் நோன்பு நோற்றார்கள்”.


​​நூல் புஹாரி, முஸ்லிம்

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!” என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.

​ 

​நூல் புகாரி 1970

♦ ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். “மாதங்களில் ஷஃபான் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) “ நிச்சயமாக அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கிறான். என்னைப்பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.” என எடுத்துரைத்தார்கள்.


​​நூல் அபுயஃலா, அத்தர்கீப்: 1540

ரமழானுக்குத் தயாராகும் நோக்குடன் அமல்கள் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படும் ஒரு காலப்பகுதியில் தான் நோன்பாளியாக இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் இம்மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றார்கள் என்பதே மேல் உள்ள ஹதிஸ்கள் தெளிவுபடுத்துகின்றது.