MAIL OF ISLAM

Knowledge & Wisdom



யாரஸூலல்லாஹ்! யாமுஹ்யத்தீன்! யாகாதிர்வலி! என்றெல்லாம் அழைக்கலாமா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


♣ வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

யா ரஸூலல்லாஹ்!, யா முஹ்யத்தீன்!, யா காதிர் வலி! என்று அழைப்பது ஷிர்க் என குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

♣ வஹ்ஹாபிகள் காட்டும் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள் பின்வருமாறு :

“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் வணங்காதீர்கள்"  அல்குர்ஆன் 72:18

குறிப்பு : வழிகெட்ட வஹ்ஹாபிகள் மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தில் "வணங்காதீர்கள்" என்ற இடத்தில் 'அழைக்காதீர்கள்' என்று தவராக தப்பாக (அர்த்தம்) மொழிபெயர்ப்பு செய்து அவர்களுக்கு சாதகமாக சில குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.

♦ யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என்று அழைப்பதில் என்ன? தவறு இருக்கின்றது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே, அழைத்தல் என்பது யாரும் யாரையும் அழைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் சொல்கின்றது. அதற்கு மாற்றமாக கூடாது என்று எப்படி இந்த வஹ்ஹாபிகள் சொல்லலாம். யாரையும் யாரும் அழைக்கலாம் என்பதற்கு நடைமுறைகளிலிருந்து பல உதாரணங்களை காட்டலாம் "வாப்பா" என்றும் "உம்மா" என்றும் "நண்பன்" என்றும் பலரையும் நாம் பலவாரு அழைக்கின்றோம்.


​​வஹ்ஹாபிகள் சொல்வது போன்று அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் அழைக்க முடியாதென்றால் "வாப்பாவை" வாப்பா என்றும் அழைக்க முடியாது அந்தலவு விபரீதங்கள் ஏற்படும். இன்னும் வஹ்ஹாபிகள் சொல்வார்கள் சரி சரி உயிருடன் உள்ளவர்களை அழைக்கலாம் ஆனால் மரணித்தவர்களை அழைக்க முடியாது என்று கூறுவார்கள். எனவே மரணித்தவர்களை அழைக்கக்கூடாது என்று குர்ஆனில், ஹதீஸ்களில் உள்ளதா? இந்த வஹ்ஹாபிகளால் காட்ட முடியுமா? கியாமத் நாள் வரைக்கும் காட்ட முடியாது இதுதான் உண்மை மரணித்தவர்களையும் அழைக்கலாம் என்று குர்ஆன், ஹதீஸ் சொல்கிறது.

♦   நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனையோ தடவை, யா அபா பக்ர் (அபூபக்ரே) ரலியல்லாஹூ அன்ஹு , யா உமர் (உமரே)ரலியல்லாஹூ அன்ஹு யா ஆயிஷா (ஆயிஷாவே) ரலியல்லாஹூ அன்ஹா என்று எத்தனையோ ஸஹாபாக்களை அழைத்திருக்கின்றார்கள். 

எனவே நபிமார்களையும்,ஸஹாபாக்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி ஆகுமான செயலாகும்.இதை மறுப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே 'யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன்' யாகாதிர் வலி என அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.

♣   குர்ஆன், ஹதீஸ்களின் ஆதாரப்படி 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதற்கான ஆதாரங்கள் :

♦ அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! ஈமான் கொண்ட விசுவாசிகளே!) யா அய்யுஹன்னாசு (ஓ! மனிதர்களே!), இஸ்ராயீலின் சந்ததியினரே! (அல்குர்ஆன் 2:40), “ ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; (அல்குர்ஆன் : 2:33) எனவே இறைவன் பலரையும் பலவாறு அழைத்திருக்கின்றான். அரபி இலக்கணத்தில் 'யா' என்ற பதம் அருகில் இருப்பவர்களையும், தூரத்தில் இருப்பவர்களையும் அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அழைக்கப்படுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! விசுவாசிகளே!) என அழைத்தது நபிகளார் காலத்தில் வாழ்ந்த முஃமின்களை மட்டுமல்ல மாறாக யுக முடிவு நாள் வரையுள்ள எல்லா முஃமின்களையும் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதற்கு அவர்கள் நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புலனாகிறது.

♣  குர்ஆன் ஹதீஸ்களின் ஆதாரப்படி 'யா' என்ற பதம் கொண்டு மரணித்தவர்களை அழைப்பதற்கான ஆதாரங்கள்:

♦இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் அழையுங்கள் ; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன் 2:260)

♦ பத்ருப் போர்க்களத்தில் அல்லாஹ் நபிகளாருக்கு வெற்றியை அளித்த போது போர்க்களத்தில் மரணித்தவர்களை காண்பதற்காக நபிகளார் சென்றார்கள். அப்போது அம்மைதானத்தில் மாண்டு கிடந்த அபூலஹப், உத்பா போன்ற காபிர்களை நோக்கி,'ஓ! அபூ லஹபே, உத்பாவே என்று அவர்களை அழைத்து எனக்கு வாக்களிக்கப்பட்டதை இன்று நான் பெற்றுக் கொண்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?' என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது, அருகிலிருந்த இரண்டாம் கலீபா உமர் பாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'யாரசூலல்லாஹ்! இறந்தவர்கள் எப்படி கேள்விகேட்பார்கள்? என கேள்வி எழுப்பினார்கள். அப்போது இந்த சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாக நபிகளார் இறந்தவர்கள் உம்மை விட நன்றாக கேட்பார்கள். உம் காலடி பாதத்தின் சப்தத்தைக் கூட உணர்கின்றார்கள்' என தெளிவாகவே பதிலளித்தார்கள்.

ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி

♦  இதன் மூலம் இரு விஷயங்கள் நமக்கு விளங்குகின்றன.

1) 'யா' என்ற பதத்தைக் கொண்டு இறந்தவர்களையும் அழைக்கலாம்.

2) மரணித்தவர்கள் மறைந்து இருக்கின்றார்களே தவிர அழிந்து விடவில்லை.இதனால் தான் கப்ருஸ்தானுக்கு சென்றால் இறந்தவர்களை அழைத்து ஸலாம் கூறுங்கள் அதாவது (அஸ்ஸலாமு அலா அஹ்லி தியாரி கவ்மி மினல் முஃமினீன் வல்முஸ்லிமீன்)

என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மை ஏவியுள்ளார்கள்.

முக்கிய குறிப்பு: மரணம் என்பது 'ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வதுதான். (அதாவது) அழியக் கூடிய இடத்தில் இருந்து அழியாத உலகிற்கு செல்வது) ஒருவன் இறந்தான் என்றால் நம் கண்பார்வையிலிருந்து மறைந்தார் என்றுதான் அர்த்தம். மாறாக அழிந்து விட்டார் என்று அர்த்தம் அல்ல. அந்த அடிப்படையில் குர்ஆன்-ஹதீஸ் மூலம் "யா" என்ற பதத்தைக் கொண்டு தூரத்தில் இருப்பவர்களையும், நம் பார்வையிலிருந்து மறைந்து வாழ்பவர்களையும் அழைக்கலாம் என்பது தெளிவாகிறது . எனவே உதவி தேடி வலிமார்களையும், நபிமார்களையும் அழைப்பது எவ்விதத்திலும் தவறில்லை.

♦  தொழுகையில் அத்தஹியாத்தில் நபிகள் நாயகம் அவர்கள் மீது ஸலாம் சொல்வது கட்டாயமாகும் அவ்வாறு ஸலாம் சொல்லவில்லை என்றால் தொழுகை கூடாது. எனவே நாம் சொல்லும் ஸலாமை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கின்றார்கள் இன்னும் பதிலும் சொல்கிறார்கள் அவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நமது ஸலாத்தை கேட்க மாட்டார்கள் என்றால் அத்தஹியாத்தில் நாயகத்தை அழைத்து "அஸ்ஸலாமு அலைக்கும் அய்யுஹன் நபியூ" என்று சொல்வது வீணாகி விடும் எனவே வீணான ஒன்றை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கமாகிருப்பார்களா?

குறிப்பு : மரணித்தவர்கள் நன்றாகசெவியேற்ப்பார்கள் அவ்வாறு இல்லையன்றால் நாம் சொல்லும் ஸலாம் வீணானதாக போய்விடும் எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வீணான ஒன்றை மார்க்கமாக ஆக்கிருப்பார்களா? எனவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தொழுகையில் அழைத்து ஸலாம் சொல்கிறார்கள் ஆனால் தொழுகையினை விட்டு வெளியே வந்தால் அழைப்பது கூடாது என்றால் இது வஹ்ஹாபிகளின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.

♦ தொழுகைக்காக சொல்லப்படும் அதானில் (பாங்கில்), இகாமதில் "தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள், வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்" என்று மக்களை அழைக்கின்றோம் எனவே வஹ்ஹாபிகள் சொல்வது போன்று அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் அழைக்கக் கூடாது என்றால் பாங்கு, இகாமத் சொல்வதெல்லாம் கூடாது என்று வந்துவிடும் இது எவ்வளவு பெரிய பாரதூரமான விடயம் என்பதை இந்த வஹ்ஹாபிகள் சிந்திக்க மாட்டார்களா?

♣  மரணித்த நபிமார்கள், ஷூதாக்கள், வலிமார்களை "யா" என்ற பதம் கொண்டு அழைத்து அவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குறிய ஆதாரங்கள் :

அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.

♦  குர்ஆன் கூறுகிறது: 'பஸ் அலூ அஹ்லெத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்' உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்'.  (அல் குர்ஆன் 16:43)

இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.'அஹ்லெ திக்ர்' என்பவர்கள் அவ்லியாக்கள்தான். அவர்கள் அதிகமான திக்ரின் மூலம் தன் நிலையை மறந்து இறைவனின் அளவில் சேர்ந்தார்க்ள. 'நான்' என்ற அகங்காரத் தன்மையை நீக்கி 'அல்லாஹ் மட்டும்தான்' என்ற உயர் நிலையில் தம்மை ஆக்கிக் கொண்டார்கள்.

இவர்களைப் பற்றி சுபச் செய்தி கூறும் முகமாக அல்லாஹ் கூறியதாக நபிகளார் கூறினார்கள். 'அல்லாஹ்வை அதிகமாக நேசித்தால் அந்த அடியாரின் பார்வையாகவும், கரமாகவும், காலாகவும் அல்லாஹ் மாறிவிடுகிறான்' (ஹதீது குத்ஸி புகாரி) அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான். மாறாக அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் கேட்பதாக ஆகாது.நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மருத்துவரிடம் செல்கிறோம். மருந்து கொடுக்கிறார். நோய் குணமடைகிறது. இதில் நோயை குணப்படுத்தியது அல்லாஹ்தான். ஆனால் நாம் சென்றது மருத்துவரிடத்தில். இதுபோலத்தான் நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டுமெனில் நாம் செல்ல வேண்டியது வலிமார்களிடத்தில். அவர்களின் மூலம் நமக்கு உதவுவது அல்லாஹ்தான்.

♦எனதடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வளவில் ஓர் வஸீலாவை (உதவியாளரைத்) தேடிக் கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் மாயிதா 5:35)

♦ ஒரு தினம் அப்தில்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கால் மரத்து சோர்வடைந்த போது, "உங்களிக்கு மிகவும் விருப்பமான ஒருவரின் பெயர் கூறி அழையுங்கள்" எனக்கூறப்பட்டது.உடனே "யா முஹம்மதா! (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே எனக்கு உதவுங்கள்) என்று உரத்த குரலில் கூவினார். கால் மறுப்பு உடன் நீங்கி விட்டது.

நூல்: அதபுல் முப்ரத் - 142

♦பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.'


​ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்

♦பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை)க் கொண்டு உதவி தேடவும்.'


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு

ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 5

♦ 'எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும் என்பதாக நபிகளார் பகர்ந்துள்ளார்கள்.

ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்

♦ இறைவா! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னாள் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக என்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் துஆச் செய்தார்கள்.


​​ஆதாரம்: தப்ரானி 2 - 22

♦  அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

யார் என் மீது ஸலாம் சொன்னாலும் அல்லாஹுதஆலா அந்த ஸலாத்தை அறியக்கூடிய அறிவாற்றலை எனக்கு தந்துள்ளான். அவருடைய ஸலாத்திற்கு நான் பதில் சொல்கிறேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

​ 

ஆதாரம்: அபூதாவூத் 1745

எனவே பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்கு கட்டளையிடுகிறார்கள். உதவி தேடுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் தனது நப்ஸை இறைவனின் பாதையில் போரிட்டு வெற்றி கண்ட அவர்கள் என்றும் ஜீவிதம் உடையவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கிறான். (அல்குர்ஆன் 3:168) வலிமார்களை இறந்தவர்கள் எனக் கூறக் கூடாது (அல்குர்ஆன் 2:153) என்பது இறைவனின் கட்டளையாகும்.

♦  வலிமார்கள் என்றும் உயிருடனே இருக்கிறார்கள். அவர்களிடம் உதவி தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.ஈமான் உள்ள சீமான்களே! வலிமார்களை ஸியாரத் செய்வதும், அவர்களின் பேரில் கொடியேற்றுவதும், நேர்ச்சை செய்வதும், உதவி கேட்பதும் அவர்களை 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதும், உரூஸ் நடத்துவதும் இவையனைத்தும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.


​​இதனன்றி டி.வி. மூலம் பத்திரிகையின் மூலமும் இன்று இஸ்லாத்தை தூய வடிவில் விளக்குகிறோம் என கூறி திரியும் வழிகேடர்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஈமானை இழந்து வழி தவறிவிட வேண்டாம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் ஆக்கட்டும். ஆமீன்.