MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸெய்யதுனா நபி யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் கண்ட  இப்லீஸ்


ஒரு நாள் ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் அல்லாஹ்வை நோக்கி "யா அல்லாஹ்! நான் இப்லீசை அவனது உண்மையான உருவத்தில் காண ஆசைபடுகிறேன். அவனை என்னிடம் அனுப்பிவை. அவனிடம் ஒன்றையும் மறைக்காது உள்ளதை உள்ளப்படி கேட்க விரும்புகிறேன்" என்று இறைஞ்சினார்கள்.


அப்போது அல்லாஹ் இப்லீசை அவர்களிடம் செல்லுமாறு ஏவினான். அவன் அவ்வாறே அவர்களிடம் வந்து, நான்தான் இப்லீஸ் என்றும் தான் விண்ணில் இருந்து விரட்டப்பட்ட சமயம் இருந்த உருவில்தான் இப்போது வந்திருப்பதாகவும் சொன்னான். அப்போது ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்) அவர்கள் அவனை ஏறிட்டு பார்த்தனர். அவனுடைய தலையின் மீது கொக்கிகள் இருந்தன. அவனின் இடுப்பின் இருபுறமும் இரு குடங்கள் கட்டப்பட்டு இருந்தன. காலிலே அவன் சலங்கைகள் அணிந்து இருந்தான். அப்போது அவர்களுக்கும் அவனுக்கும் பின்வரும் உரையாடல் இடம்பெற்றது.



ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):

இப்லீசே! உன் தலை மீது இருப்பதென்ன?


இப்லீஸ்:

அதுதான் மனிதர்களின் அறிவை உறிஞ்சும் ஆயுதம்


ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):

உன் இடுப்பின் இரு புறமும் ஏன் குடங்களை கட்டி தொங்க விட்டிருக்கிறாய்?


இப்லீஸ்:

மனிதர்கள் இறக்கும் தருவாயில் அதில் சுவனத்து நீர் உள்ளது என்று கூறுவேன். அதனை அவர்கள் உண்மை என நம்பி குடிப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் உள்ளத்திலிருந்து இறை நம்பிக்கை நீங்கி விடும்.


ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):

உன்னுடைய கால்களில் இருப்பவை என்ன?


இப்லீஸ்:

சலங்கைகள், அவற்றின் கிண்கிணி ஒலி கேட்டு அதற்கேற்றாட்போல அவர்கள் பாட்டிசைப்பார்கள்.


ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):

எப்பொழுது நீ மனிதர்களை வழி கெடுக்கிறாய்?


இப்லீஸ்:

அவர்கள் வயிறு நிரம்பி இருக்கும் நேரத்தில்.


ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):

எப்போதாயினும் என்னை வழி கெடுக்க முனைந்ததுண்டா?


இப்லீஸ்:

ஆம், ஓர் இரவு நீர் அதிகமாக உண்டுவிட்டீர். அப்போது நீர் வணக்கத்தில் ஈடுப்படா வண்ணம் உமக்கு அலுப்பை உண்டு பண்ணினேன்.


ஸெய்யதுனா யஹ்யா (அலைஹிஸலாம்):

அப்படியா? அப்படியென்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இனிமேல் நான் அதிகம் சாப்பிட மாட்டேன்.


இப்லீஸ்:

நான் இனிமேல் ஒருபோதும் மனிதருக்கு அறிவுரை வழங்க மாட்டேன்.