MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சூழ்தல் தரும் தத்துவம்

​ஆக்கம்:  மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ) BBA (Hons)


​அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்


الآ إنّهم في مرية من لقاء ربّهم ألآإنه بكل شيئ محيط.( فصلت 54)


அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்.  (புஸ்ஸிலத் : 54)


இத்திருவசனத்தில் “அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்” என முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்”. என்று இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் இடையே ஒருதொடர்பு அவசியம். இல்லாவிட்டால் இத்திருவசனத்தை தொடர்பற்ற ஒருவசனமாக, பொருத்தமற்ற ஒருவசனமாக நாம் கணிக்க நேரிடும்.


​​அல்லாஹ் தஆலாவின் பேச்சு பரிபூரணத்தன்மை கொண்டது. குறைபாடுகளற்றது. அவ்வாறான பேச்சு தொடர்பற்ற பேச்சாக, பொருத்தமற்ற பேச்சாக ஒருபோதும் இருக்காது.


அவ்வாறாயின் இவ்விரண்டு பகுதிகளுக்குமிடையே உள்ள தொடர்பு என்ன? என்பதை நாம் சிந்திக்கவேண்டும். இப்போது இவ்விரண்டு பகுதிகளுக்குமிடையே உள்ள தொடர்பை கவனியுங்கள்.


பகுதி 01 - அவனைக்காண்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.”

பகுதி 02 - அவன் சகல சிருஷ்டிகளையும் (தனக்குத்தானாக) சூழ்ந்திருக்கின்றான்.


​​அதாவது “அவன் சகல சிருஷ்டிகளாகவும் காட்சியளிக்கின்றான்” இதைமேலும் விபரமாகச் சொல்வதென்றால் “(அல்லாஹ் சிருஷ்டிகளாகத் தோற்றி காட்சியளிக்கும்போது) அவனைக் காண்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.” என்பது தான் இத்திருவசனத்தின் கருத்து.

அல்லாஹ் சிருஷ்டிகளாகத் தோற்றி காட்சியளிக்கும்போது அவனைக்காண்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். அவனது உள்ளமை, உயிர், அறிவு, சக்தி அனைத்தும் அவனது படைப்புகளாக வெளியாகியுள்ளது. வானத்திலும் பூமியிலுமுள்ள எந்த ஒரு அணுவும் அவனது உள்ளமையை விட்டும் நீங்கியிருக்க முடியாது. அவன் சகல சிருஷ்டிகளையும் தனக்குத்தானாக சூழ்ந்திருக்கின்றான்.

இங்கு சூழ்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும். 


​​சூழ்தல் என்பது இருவகைப்படும்:

01. ஒரு மனிதனின் உடலை அவன் அணிந்துள்ள உடை சூழ்ந்திருப்பது போன்றது. இதற்கு மனிதன் என்று ஒருவனும் உடை என்று இன்னொருபொருளும் தேவை. 

இந்த அடிப்படையில் அல்லாஹ் சிருஷ்டிகளை சூழ்ந்திருக்கின்றான் என்று நாம் நம்பினால் இரண்டு வஸ்துக்களை நாம் தரிபடுத்தியவர்களாக அல்லது இரண்டு உள்ளமைகள் உள்ளன என்று நம்பியவர்களாக நாம் ஆகுவோம். அல்லாஹ்வுக்கு ஒரு உள்ளமையும் படைப்புகளுக்கு ஒரு உள்ளமையும் உண்டு என நம்புதல் ஷிர்க்- இணை ஆகும்.


02. ஒரு மனிதன் அணிந்துள்ள உடையை அந்த உடையின் மூலப்பொருளான பஞ்சு சூழ்ந்திருப்பது போன்றது. இதற்கு பஞ்சு என்ற ஒருபொருள் மாத்திரமே தேவை.


இந்த அடிப்படையில் அல்லாஹ் சிருஷ்டிகளை சூழ்ந்திருக்கின்றான்.என்று நாம் நம்பினால் ஒரு வஸ்துவை மட்டும் நாம் தரிபடுத்தியவர்களாக அல்லது ஒரு உள்ளமை மாத்திரம் உள்ளது என்று நம்பியவர்களாக நாம் ஆகுவோம். அல்லாஹ்வுக்கு மட்டும் உள்ளமை உண்டு என நம்புவதே தெளஹீத் - ஏகத்துவம், ஈமான் ஆகும்.


எனவே அல்லாஹ் என்ற ஒரே உள்ளமை படைப்புகளுடன் சேராமலும் படைப்புகளை விட்டும் பிரியாமலும் (தனக்குத்தானாக) சூழ்ந்திருக்கின்றான்.இங்கு இரண்டு பொருட்கள் இல்லை. இரண்டு உள்ளமைகள் இல்லை. ஒரு உள்ளமை மாத்திரமே இருக்கின்றது. அது அல்லாஹ் என்ற உள்ளமை ஆகும்.


இந்த அடிப்படையில் நாம் நோக்கும்பொது  அவனைக்காண்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.” அவன் சகல சிருஷ்டிகளையும் (தனக்குத்தானாக) சூழ்ந்திருக்கின்றான் அதாவது “அவன் சகல சிருஷ்டிகளாகவும் காட்சியளிக்கின்றான்” என்ற கருத்தை நாம் இத்திருவசனத்தில் இருந்து புரிந்துகொள்ளவும் அல்லாஹ் தஆலாவின்பேச்சு பரிபூரணத்தன்மைகொண்டது, பொருத்தமானது என்பதை விளங்கிக்கொள்ளவும் முடியும்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.



​​​​​

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன்  (அல்லாஹ்)  இருக்கின்றான்


​​நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (அல் குர்ஆன் 57:04) இந்த வசனத்தின் விளக்கத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்


​​கலிமாவில் பொதிந்துள்ள தத்துவத்தின் (வஹ்ததுல் வுஜூத்தின்) சிறு விளக்கத்தை பெற்றுகொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.