Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஹாக்க(ஹ்) – 69  (நிச்சயமானது)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 256, வசனங்கள் – 52, எழுத்துகள் – 1034

ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. நிச்சயமான (நிகழ்ச்சியாவ)து –

2. நிச்சயமான (நிகழ்ச்சியாவ)து என்ன?

3. நிச்சயமான (நிகழ்ச்சி அ)து என்ன என்பதை உமக்கு எது அறிவித்தது.

4. தமூதும், ஆதும் திடுக்கிடச் செய்கின்றதை (நிச்சயமான அந் நிகழ்ச்சியை)ப் பொய்யாக்கினர்.

5. எனவே, தமூது, (கூட்டத்தினர் அளவு கடந்து) பெரும் சத்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

6. இன்னும் ஆது (கூட்டத்தினர் கடுங் குளிருடன்)), பெரும் இரைச்சலோடு கூடிய – மிக அழுத்தமாக வீசிய (சூறைக்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர் –

7. தொடர்ச்சியாக ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அதனை அவர்கள் மீது வீசச் செய்தான்: நிச்சயமாக அவர்கள் வேருடன் வீழ்ந்த பேரீச்ச மரங்களின் அடித்தூர்களைப் போல் அ(ந்த சம்வத்)தில் அடித்து விழுந்து கிடப்பவர்களை (அப்போது நீர் அங்கிருந்தால்) அக்கூட்டத்தினரை நீர் காண்பீர்.

8. ஆகா, அவர்களில் மிஞ்சியவர் எவரையேனும் நீர் காண்கிறீரா?

9. பிர்அவ்னும், அவனுக்கு முன்பிருந்தவர்களும் தலைகீழாய்ப் புரட்டப்பட்ட ஊரார்களும் (இறுதித் தீர்ப்பு நாளை மறந்தும், மறுத்தும்) பாவம் செய்து கொண்டே வந்தனர்.

10. மேலும், தங்களுடைய ரப்பின் ரஸுலுக்கு அவர்கள் மாறு செய்தனர்: எனவே பலமான பிடியாக அவர்களை அவன் பிடித்தான்.

11. நிச்சயமாக நாம், தண்ணீர் பொங்கியெழுந்தபோது உங்களை (அந்நீரில்) செல்லுகின்ற கப்பலில் நாம் ஏற்றினோம் –

12. அதனை உங்களுக்கு ஒரு நினைவுகூர்தலாக நாம் ஆக்குவதற்காகவும், பாதுகாக்கும் செவி அதனை(ச் செவியேற்று)ப் பாதுகாப்பதற்காகவும் (இவ்வாறு செய்தோம்)

13. பிறகு, ஸூரில் (குழலில்) ஓர் ஊதுதல் ஊதப்படும்போது –

14. இன்னும் பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு ஒரே நொறுக்காக இரண்டும் நொறுக்கப்பட்டால் –

15. அந்நாளில் நிகழக் கூடியது (-யுக முடிவு நாள்) நிகழ்ந்துவிடும் –

16. இன்னும் வானம் பிளந்து, அது அந்நாளில் பலவீனமடைந்து விடும் –

17. மலக்குகள் அதன் கடைக்கொடிகளில் இருப்பார்கள்: மேலும் அந்நாளில் உம்முடைய ரப்பின் அர்ஷை எட்டுப்பேர் தங்களுக்கு மேல் சுமந்து கொண்டிருப்பார்கள்.

18. அந்நாளில் (கேள்வி கணக்கிற்காக) நீங்கள் முன்னிறுத்தப்படுவீர்கள்: உங்களிலிருந்து மறைகின்ற எதுவும் (அன்று) மறையாது.

19. எனவே, எவர் தம் பட்டோலை அவருடைய வலக்கரத்தில் கொடுக்கப்பட்டாரோ, அவர், (மற்றவர்களை நோக்கி, இதோ என் பட்டோலை-) “பிடியுங்கள்: என்னுடைய பட்டோலையைப் படித்துப்பாருங்கள்” என்று கூறுவார்.

20. “நிச்சயமாக நான், என்னுடைய கேள்வி கணக்கை நிச்சயமாக சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்” (என்றும் கூறுவார்).

21. எனவே, அவர் திருப்திகரமான வாழ்க்கையில் –

22. உயர்ந்த சொர்க்கத்திலிருப்பார் –

23. அதனுடைய பழங்கள் (கொய்துண்ணக் கூடியவையாய்) சமீபத்திலிருக்கும்.

24. கடந்து போன நாட்களில் (நன்மைகளை) நீங்கள் முற்படுத்தி வைத்த காரணத்தால், மகிழ்வுடையோராய் நீங்கள் உண்ணுங்கள்: பருகுங்கள்: (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

25. எவன் தன்னுடைய பட்டோலை அவர்னுடைய இடக்கரத்தில் கொடுக்கப்படுகிறானோ அவன், “என்னுடைய பட்டோலை கொடுக்கப்படாமல் நான் இருந்திருக்க வேண்டுமே! என்று கூறுவான்.

26. “என்னுடைய கணக்கு என்னவென்று நான் அறியாமல் இருந்திருக்க வேண்டுமே” –

27. “அதுவே ௯_உலகத்தில் மரணமே என்னுடைய) முடிந்த முடிவாக ஆகிஇருக்க வேண்டுமே” –

28. “என்னுடைய பொருள் எனக்குப் பலனளிக்கவில்லையே!”

29. “என்னுடைய அதிகாரம் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று புலம்புவான்).

30. (பின்னர் மலக்குகளுக்குக் கட்டளையிடப்படும்,) “அவனைப் பிடியுங்கள்: அவனுக்கு அரிகண்டம் மாட்டுங்கள் –

31. “பிறகு நரகத்தில் அவனைத் தள்ளுங்கள் –

32. “பிறகு, அதனுடைய நீளம் எழுபது முழ(ம் உள்ளதே அச்)சங்கிலியாழ் அவனைப் பினையுங்கள்” (என்று மலக்குகளுக்கு உத்தரவிடப்படும்).

33. (ஏனெனில்) நிச்சயமாக அவன் மகத்துவம் மிக்க அல்லாஹ்வை அவன் ஈமான் கொள்ளாமலிருந்தான்.

34. இன்னும் ஏழைகட்கு (தானும் உணவளிக்கவில்லை: பிறரையும்) உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.

35. எனவே, இன்று அவனுக்கு (உதவக்கூடிய) எந்த நண்பனும் இங்கு இல்லை –

36. சீழைத் தவிர (வேறு) எந்த உணவும் (அவனுக்கு) இல்லை –

37. பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அதனைப் புசியார்.


ருகூஃ 2

38. எனவே நீங்கள் பார்க்கின்றவற்றைக் உ நான் சத்தியம் செய்கிறேன் –

39. இன்னும் நீங்கள் பார்க்காதவற்றைக் கொண்டும்... (சத்தியம் செய்கிறேன்.)

40. நிச்சயமாக (குர்ஆனாகிய) இது (நாம் அருளியதை எடுத்துக் கூறுகின்ற) சங்கைக்குரிய ரஸூலின் சொல்லாகும்.

41. இது எந்தக் கவிஞனின் சொல்லுமல்ல: மிகக் குறைவாகவே (இதனை) நீங்கள் நம்புகிறீர்கள் –

42. (இது) எந்த குறிகாரனின் சொல்லுமல்ல: மிகக் குறைவாகவே (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறுகிறீர்கள்.

43. (இது) அனைத்துலகத்தோரின் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதாகும்.

44. அன்றியும், (ஏதேனும் நாம் சொல்லாத) கற்பனையான செய்திகளில் சிலவற்றை நம்மீது அவர் இட்டுக் கட்டியிருந்தால் –

45. அவருடைய வலக்கரத்தை நாம் பிடித்து –

46. பிறகு அவரிலிருந்து கழுத்து நரம்பை நாம் துண்டித்திடுவோம்.

47. (அப்படியாயின்) உங்களிலிருந்து அவரை விட்டும் (வேதனையைத்) தடுக்கிறவர் எவருமிலர்.

48. மேலும் நிச்சயமாக (குர்ஆனாகிய) இது முத்தகீன் (பயபக்தியாளர்)களுக்கு நல்லுபதேசமாகும்.

49. நிச்சயமாக உங்களில் (இதைப்) பொய்ப்பிக்கின்றோரும் இருக்கிறார்கள் என்பதையும் நிச்சயமாக நாம் அறிவோம்.

50. இன்னும் நிச்சயமாக இது, காபிர்களுக்குக் கைசெதமாகும்.

51. நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும்.

52. எனவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருப்பெயரைக் கொண்டு நீர் தஸ்பீஹ் செய்வீராக!