Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் அஃலா – 87  (மிக்கமேலானவன்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 72,  வசனங்கள் – 19,  எழுத்துகள் – 291



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (நபியே!) மிக்க மேலானவனாகிய உம்முடைய ரப்பின் திருப்பெயரைத் தஸ்பீஹ் செய்வீராக!

2. அவன் எத்தகையவனென்றால் (படைப்புகளனைத்தையும்) படைத்து, பிறகு (அவற்றைச்) செவ்வைப்படுத்தினான் –

3. இன்னும், அவன் எத்தகையவனென்றால் (அவற்றுக்கு வேண்டியவற்றை) அவன், நிர்ணயம் செய்து, பிறகு (அவற்றின்பால்) வழிகாட்டினான் –

4. இன்னும், அவன் எத்தகையவனென்றால் (பிராணிகளுக்குத்) தீவனத்தை வெளியாக்கினான் –

5. பிறகு அதனை உலர்ந்த கருத்த அரிதாளாய் ஆக்கினான்.

6. (நபியே!) விரைவில் உமக்கு (ஜிப்ரீல் மூலம்) நாம் ஓதிக்காட்டுவோம்: பிறகு (அதனை) நீர் மறக்க மாட்டீர் –

7. அல்லாஹ் நாடியதைத் தவிர: நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும், மறைவானதையும் அறிவான்.

8. மேலும் எளிதான (மார்க்கத்)தை உமக்கு நாம் எளிதாக்கி வைப்போம்.

9. எனவே நல்லுபதேசம் பலனளிக்குமானால் நீர் நல்லுபதேசம் செய்வீராக!

10. (அல்லாஹ்வை) அஞ்சுபவர், விரைவில் நல்லுபதேசம் பெறுவார் –

11. நற்பேறு இல்லாதவனோ அதைவிட்டு விலகிக் கொள்வான் –

12. அவன் எத்தகையவனென்றால் மிகப்பெரும் நெருப்பில், அவன் புகுவான்.

13. பின்னர் அதில் அவன் மரிக்கவும் மாட்டான்: உயிர் வாழவும் மாட்டான்.

14. (பாவங்களை விட்டும் தம்மைப்) பரிசுத்தப்படுத்தியவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார் –

15. தம் ரப்பின் திருப்பெயரை அவர் தியானம் செய்து, பிறகு தொழுதார்.

16. எனினும், உலக வாழ்வையே நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

17. (ஆனால்) மறுமை (வாழ்வு) தான் சிறந்ததும், நிரந்தரமானதுமாகும்.

18. நிச்சயமாக இது முந்திய ஆகமங்களில் (குறிப்பிடப்பட்டு) இருக்கிறது.

19. இப்ராஹீம், மூஸாவுடைய ஆகமங்களிலும் (இருக்கிறது).